தொடுவானம் தொடாத விரல்

November 1, 2011

பெயரில்லாத பாதையில் – 1

Filed under: Uncategorized — கண்ணன் பெருமாள் @ 10:23 pm

Courtesy:Tiago Pinheiro

வானம் மசமசவென்று இருண்டு கொண்டிருந்த மாலையது , பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்திருந்தேன் வேலைப்பளுவின் அழுத்தத்தில் சோர்ந்து என்றைக்கு திரும்பும்போது ஜன்னலோரம் நகரத்தின் இரைச்சலையும், புகையையும்,தூசியையும் படியவிடும்..பெங்களூரில் மாலை புழுக்கத்தை ஜன்னலோரம் சற்றே தணிக்கும்..விரசலாக ஓடி மறையும் மரங்கள்,பெட்டிககடைகளில் வயது வித்தியாசமில்லாமல் புகைக்கும் கூட்டம்,தளர்ந்த மார்புகள் மறைத்து தொளதொளக்கும் டீ சர்ட்டுகளுடன் நடை பயிலும் பெண்கள், இரு சக்கர வாகனத்தை  சாலை ஓரமாக நிறுத்தி செல்பேசியில் கதைப்பவர்கள்,நார்த் இண்டியன் சாட்  வண்டிகள்,ஸ்லீவ்லெஸ் அணிந்து செல்பேசியை விரல்களிலும் ஹன்ட்பேகை தோளிலும் சுமந்தபடிக்கு பணி முடித்து திரும்பும் இல்லத்தரசிகள், நைந்து போன சட்டை வேட்டியுடன் குடை சுமக்கும் முதியவர்கள்…இன்னும் இன்னும்  எங்கெங்கும் மக்கள் வெள்ளம்..அப்படித்தான் அந்த மாலையில் நான் அந்த பிச்சைக்காரனைக் கண்டேன்..வெளிச்சத்தை விளக்கி ஓடினான் இருள் கவ்விய ஒரு சுவர் மறைவு..மலமும் மூத்திரமும் சேர்ந்து வீசும் அந்த இடத்தில் போய் சக்கென்று உட்கார்ந்து கொண்டான்..வலி நெஞ்சை கவ்வியது.. யார் இவன்? ஏன் அவலத்தையே ஆசையோடு  அணைத்துக் கிடக்கிறான்? ஏன் உங்கள் தூய கைகள் தழுவுவதை அவன் மறுக்கிறான்?ஓர் அன்பான நேசப்பார்வை அவனை பயப்படுத்துகிறது..ஏன்?நிலையான அமைதியான வாழ்வை அவன் நம்பவில்லை அதையும் அஞ்சுகிறான்.. அவனுக்கு நீங்கள்ஆயிரங்களை அள்ளிக்கொடுத்தாலும் பிச்சையேற்று சாவதுதான் அவன் தர்மமென கருதுகிறான்..வாழ்வையல்ல சாவுதான் அவன் வேண்டும் வரம்.அவனை அழிந்து போக விடுங்கள் அவன் வேண்டுவதெல்லாம் சிறுக சிறுக சாவதைதானா..?உங்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வேறு சாவு கிடையாது ஆனால் அவனுக்கு பிறப்புக்கு பிறகு சின்ன சின்ன சாவுகள் இருக்கிறதோ..?அவன் மீது காறி உமிழுங்கள் அதை ஏற்றுக்கொள்வான் ஏனெனில் அவனுக்கு தெரியும் அவன் அதற்கு முற்றிலும் அருகதையுள்ளவன்.பிச்சை ஏற்கும்போது மகராசன் மகராசி எனப் பசப்புவான் பின்பு எச்சில் வடிப்பான்..சதைத்த புண்களில் அமர்ந்து மொய்க்கும் ஈக்களை பார்த்தபடி மகிழ்வான்..அவன் எதைத் துறந்தான்? இல்லை துரத்தப்பட்டானா? கேட்காதீர்கள் நீங்கள் நம்பும்படி அவனுக்கு பொய் சொல்லத் தெரியாது..மீறிக்கேட்டாலும்   சொல்வான் தெரிந்த பொய்யை..நம்ப முடியாத  பொய்யை..நம்ப முடியாத பொய் எனத் தெரிந்தபின் அந்தப் பொய் உண்மைதானா?

 

April 9, 2011

களித்தோழி!

விடுமுறை நாட்களில்
மாடிப்படிகளில்
விளையாடுகிறார்கள்
பிரியாவும், பெயர் தெரியாத
இரு குழந்தைகளும்…
பிரியாதான் பேசுவாள்..
அவளே பாடம் எடுப்பாள்..
அவளே எங்கு பார்க்க வேண்டும்,
என்ன பாட வேண்டும்,
வீட்டிலிருந்து என்ன
எடுத்து வரவேண்டுமென
அவர்களுக்குச் சொல்கிறாள்..
யாராவது படிகளில் வந்தால்
கடக்கும் வரை
மௌனமாக விளையாடுகிறார்கள்..
பிரியாவை தாத்தா
கூப்பிட்டால் விளையாட்டு
முடிந்துவிடும்,
மற்றபடி
கேட்பதையெல்லாம் செய்வதென்பது
வெளியேற முடியாத விளையாட்டு..

April 4, 2011

என் குருசு…

my_cross

உண்மைதான்
உன்னைக் கொன்றொழிக்கும்
வன்மத்தை
கவிதைகளாக்கினேன்,
பூக்களாக்கி என்னை
வேர்களுக்கு உரமாக்கினேன்,
துரோகங்களை
தின்று செரிக்கும்
இருள் வேண்டி
பாதாளங்களில் தவமிருந்தேன்,
கொதித்து ஓடும்
குருதியின் வெம்மையை
கனவுகளில் கரைத்தேன்,
மதர்த்த முலைகளை
பிய்த்தெறிய துடிக்கும்
கரங்களை
கரித்த கண்ணீரால்
கழுவினேன்,
தன்னையே
மன்னியாத மதிகேடன்
எப்படி மன்னிப்பான்
இன்னொருத்தியை?

August 14, 2010

தீண்டாச் சர்ப்பம்!

நினைவுகளில்
என்றும் நெளிகிறது
ஒரு பாம்பு..
முகம் காட்டியதில்லை..
உடல்
வளைத்து வளைத்து
நெளியுமது..
தனிமைகளில்
எங்கோ
பதுங்கியிருக்கிறது!
சட்டென்ற
வினோத ஓசை
பாம்பானது…
வால் நுனி
காட்டிய
அரணை,பல்லி
ஓணான்
எல்லாமே பாம்பாகிறது..
அத்துவானக் காடுகளில்,
ஆளரவமற்ற பாதைகளில்,
பாம்பின் சட்டைகள்..
இரவின் இடுக்குகளில்,
பாழடைந்த கிணறுகளில்,
பாம்பின் வாசனை..
தனியான ஒத்த வீடுகளில்,
நகாராத பெரிய கற்களில்,
பாம்பின் காத்திருப்புகள்..
வாழப் பிடித்த
நாட்களிலும்
தீண்டக் காத்திருக்கிறது
எங்கோ
ஒரு சர்ப்பம்.. !

July 5, 2010

மழைக் குறிப்புகள்-1!

Filed under: அன்பு,கவிதை,காதல்,மழை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 5:01 pm

aria raibow -1

மழை வருமா
என்றபடி
கண்ணாடி பார்த்தாள்,
வானவில்!
கண்ணாடிக்குள்
யார் பார்த்தது
மழையான மழை?

July 4, 2010

திறக்காதீர்கள்..

ye dost not open

ஜன்னல்களை அடைத்தே
வைத்திருங்கள்
இருள்
வெளியே கசியாமல்..
அறைக்குள்
இருக்கும் வானம்
என்றும்
இருள்வதில்லை…
மனிதர்கள்
குதித்துவிடக் கூடும்
எச்சரிக்கை…
சில வார்த்தைகள்
ஊடுருவும் ..
சில குழந்தைகளின்
அழுகை கேட்கும்..
சொப்பனங்களில் ஆழ்த்தும்
ஆபாசப் பாடல்கள் வரும்
அடைத்தே வைத்திருங்கள்..
கதவுகளை..
யார் அவர்கள் கேளிர்,
கேளிக்கையாக
வந்து போகும்
சத்திரமா என்ன?
இறுக அடைத்துவையுங்கள்
நாய்கள்
நன்றி இல்லாத நாய்களைத்தான்
சொல்கிறேன்
வாலை ஆட்டிப்பார்க்கும்..
அடைத்து விடுங்கள்..
தயவு செய்து
இறக்கும் வரை
அடைத்த ஜன்னலும்
அடைத்த கதவுமாய்
இருக்க பிரார்த்தியுங்கள்…
உள்ளே வருவதுதான்
ஒருவனைக் கெடுக்கும்..
கிறிஸ்து அறைக்குள்
இருந்திருந்தால்
சிலுவையில் செத்திருப்பாரா?
கிருஷ்ணன்,
அறைக்குள்ளேயிருந்திருந்தால்
குருக்ஷேத்ரம் ஏது?
தோழர்களே தோழிகளே
கண்களை இறுக்க மூடி
மன்றாடுங்கள்..
அறியாமையில் அலையும்
மனிதர்கள் பாவம்,
அவர்களுக்கு மந்திரம்
தெரியாது?
வசனங்கள் புரியாது!
ஆகமம்,திருமறை,
காபிரியேல் எல்லாம்
தெரியாத ஜென்மங்கள்
புற்கள் என ஜென்னில்
அவர்களைத்தான் சொல்கிறார்கள்..
ஏன் இந்த குருவி காக்கா
கோழி பருந்து
பன்றி கழுதை
வகையறாக்கள் இன்னும்
பிறந்து தொலைக்கின்றன..?
பறப்பதும் நீந்துவதும்
ஆடுவதும் பாடுவதும்
கத்தி கும்மாளமிடுவதும்
என்ன கூத்து இது?
உங்களுக்கு நேரமில்லை
எனக்கு தெரியும்!
ஈனப் பிறவிகளுக்கு
ஒன்றும் புரிவதில்லை!
பிறந்து பிறந்து
சாகின்றன..
அறைக்குள் இருந்தபடியே
உங்கள் உள்ளத்தை
விண்ணுக்கு எழுப்புங்கள்
அங்குதான் நமது
தந்தை தாய்
மூதாதையர்கள்..
சிவபாதமெய்திய
சுந்தரர்களும் சுந்தரிகளும்
இருக்கிறார்கள்..
அவர்களுடன் நாம்
மரித்திருப்போம்..
மன்னிக்கவும் மகிழ்ந்திருப்போம்..
அப்படியே ஆகுக..

March 24, 2010

வலசை பறவைகள்!

நிலவின் கவிதை
ஒளிர்ந்தது..
குளிர் நிறைத்து 
இருளாய் விரிந்தது..
மின்னி மின்னி 
மறைந்தது.. 
விண்மீன்கள் 
துளிர்த்தது..
கடல் நடுவே
அலைகளைப் போல 
அர்த்தம் இழந்தது…
கண்கள்,கடல்..
உடல்,உப்பு..
எங்கே காற்று? 
எங்கே மண்?   
வலசைப் பறவைகளின்  
வழியில்
சுடர்ந்தது நிலா..
 
    
    

March 20, 2010

உன் வானாகி…

trivial_bloom

பறப்பதையுணராத
பறவையது..
திசையிலி..
எங்கோ தூரத்தில்
ஒற்றையாய்
மாந்தளிர் மேகம்,
மெப்பனைக்கு
ஓட்டைச் சூரியன்…
எதற்கு சிறகுகள்?
சாலையோரங்களில்
பொறுக்கித் தின்னும்
புறாக்கள்…
கீரைக்காம்பு கால்கள்..
படபடக்கும் சிறகுகள்..
கனவு பூக்காத
கண்கள்…
அடிவயிற்றில்
சில்லிடுகிறது,
நெருஞ்சிச் செடியில்
நெறைஞ்ச
ரெண்டு தாமரை..

எதற்கு வானம்?

February 6, 2010

நீராடல்…

மரம் பார்த்தேன்
என்னை பார்த்தது
அருகழைத்து
உச்சி மோந்தேன்..
காற்றில் மனம்
குளிர்ந்து அசைந்தது..
மெல்ல முறுக்கி
கைகளை பின்னுக்கிட்டு
கட்டியணைத்தேன்
மரம் மலங்க விழித்து..,
முதுகை வருடியது..
தேவாலயம் தொலைந்து
அடிமானம் தெரிந்தது..
மெல்ல கசத்தில்
குளிர்ந்த இருளில்
மூழ்கி மூச்சை விட்டேன்..
இன்னொரு முறை
மீனும் புழுவும்..
செவப்பு ஜாக்கெட்டில்
செவப்பு பித்தான்கள்..
தண்ணீர் பந்துகள்
மூக்கில ஜலம்
தொண்டை கசந்து
துப்பினான் தூ.. தூ..
அவிசாரி  சிறிக்கி
கரும்பச்சை தவளை
தெறித்து தண்ணீரில்
விழுக்கென்றது…

January 26, 2010

மந்தைகளே…

a call to my shepherd

உங்கள் மந்தைகளில் இல்லை
நான்,
எனது மேய்ப்பனை
தேடும் ஆடு
நான்,
என்னிடமிருந்து
தொலைந்த அவனை
தேடுகிறேன்..
உங்கள் மந்தைகளில்
தேடுகிறேன்,
அவனும் ஓர்
ஆடாகியிருக்கக்கூடும்..
உங்கள் மேய்ப்பர்களில்
தேடுகிறேன்
அவன் என்னை
மறந்திருக்கக்கூடும்..
உங்கள் சவ ஊர்வலங்களில்
தேடுகிறேன்
உங்கள் களப்பலியாக
அவனிருந்திருக்கக்கூடும்..
உங்கள்
பிணக் குவியல்களில் தேடுகிறேன்
நானில்லாமல் அவன்
அனாதையாகியிருக்கக்கூடும்..
குழந்தைகளை தேடி
அலைகிறவன்
ஏதாவது பள்ளியில்
ஆசிரியராயிருப்பான்..
இல்லை தெருக்களில்
கோமாளியாகியிருப்பான்..
அவனை என்னிடம்
வரவிடுங்கள்
மந்தைகளே…

« Previous PageNext Page »

Blog at WordPress.com.