விடுமுறை நாட்களில்
மாடிப்படிகளில்
விளையாடுகிறார்கள்
பிரியாவும், பெயர் தெரியாத
இரு குழந்தைகளும்…
பிரியாதான் பேசுவாள்..
அவளே பாடம் எடுப்பாள்..
அவளே எங்கு பார்க்க வேண்டும்,
என்ன பாட வேண்டும்,
வீட்டிலிருந்து என்ன
எடுத்து வரவேண்டுமென
அவர்களுக்குச் சொல்கிறாள்..
யாராவது படிகளில் வந்தால்
கடக்கும் வரை
மௌனமாக விளையாடுகிறார்கள்..
பிரியாவை தாத்தா
கூப்பிட்டால் விளையாட்டு
முடிந்துவிடும்,
மற்றபடி
கேட்பதையெல்லாம் செய்வதென்பது
வெளியேற முடியாத விளையாட்டு..
April 9, 2011
களித்தோழி!
April 4, 2011
என் குருசு…
உண்மைதான்
உன்னைக் கொன்றொழிக்கும்
வன்மத்தை
கவிதைகளாக்கினேன்,
பூக்களாக்கி என்னை
வேர்களுக்கு உரமாக்கினேன்,
துரோகங்களை
தின்று செரிக்கும்
இருள் வேண்டி
பாதாளங்களில் தவமிருந்தேன்,
கொதித்து ஓடும்
குருதியின் வெம்மையை
கனவுகளில் கரைத்தேன்,
மதர்த்த முலைகளை
பிய்த்தெறிய துடிக்கும்
கரங்களை
கரித்த கண்ணீரால்
கழுவினேன்,
தன்னையே
மன்னியாத மதிகேடன்
எப்படி மன்னிப்பான்
இன்னொருத்தியை?
August 10, 2008
நினைவுகளாய் நீள்பவன்…
நண்பனே..
என் வசந்த காலங்களின்
சிறகாக இருந்தவனே..
உன்னை நினைக்காத
நாளில்லை..
மயிலிறகு போல
மனதை வருடுகிறது
உன்னை நானும்
என்னை நீயும்
நிரப்பிக்கொண்ட நிமிடங்கள்..
அந்த நாட்களில்
வீடு மட்டுமே
நமக்கு வேறாக இருந்தது…
சிறுசிறு சண்டைகள் கூட
இல்லாதது
நமது நட்பு..
நான் வாசித்த
புத்தகங்களின்
அட்டைப் படம் மட்டுமே
பார்த்தவன் நீ..
நீ
சுவாசித்த
திரைப்படங்களின்
பாடல்களை கூட
கேட்காதவன் நான்..
நாம்
பேசிக்கரைந்த இரவுகள்
எதற்கும் நீளமில்லை..
நீ
சேகரித்த
கிளிஞ்சல்களும்,
கூழாங் கற்களும்
என் நினைவோடையில்
நிறைந்து கிடக்கிறது…
எந்த விடுமுறையும்
நம்மிடம் விடுபட்டதில்லை..
எல்லா தேநீர் கடைகளிலும்
தெரிந்தே இருந்தது
நமது நட்பின் சுவை…
எந்த தையலகமும்
பண்டிகை காலங்களில்
நம்மை சேர்த்தே தைத்தது…
இன்னும் எழுதலாம்..
நினைவுகளை மட்டுமே
பரிசாக தந்துவிட்டுபோன
நிலாக் காலங்களை…