தொடுவானம் தொடாத விரல்

November 14, 2009

தேன்சிட்டும், லெகான் கோழி குஞ்சுகளும்!!!

ஒரு அற்புதமான கதை இருந்தது.கதை இன்று அவ்வளவாக நினைவிலில்லை.எதிர்பாராமல் கிடைக்கும் ஒரு மந்திரக்கோலின் உதவியுடன் சிறுவன் ஒருவன் உருமாற்றம் கொள்கிறான்.எறும்பின் அளவை விட சிறியதாகிறான் பிறகு எல்லாமே பிரம்மாண்டமாயிருக்கிறது.ஒரு பூ,செடி இலை மனிதக் கால்கள் எல்லாமே இராட்சத வடிவில் பயமும் பிரமிப்பும் கலந்த மனோ பாவம் கொள்கிறான்.எல்லாக் குழந்தைக்களுமோ யதார்த்த உலகிலிருந்து விலகியே சிந்திக்கின்றன.யதார்த்தம் என்று சொல்வது மொண்ணையாக
செல்லும் வாழ்வைத்தான்.வளர்ந்த மனிதர்கள் அதிசயிப்பதில்லை.சிறுவயதில் ஒரு தேன்சிட்டை பார்க்கும்போது எத்தனை சந்தோசமாக இருந்திருக்கிறேன்.எங்கள் வீட்டில் என் அம்மா எப்போதும் எதாவது சில செடி கொடிகளை வளர்த்துக் கொண்டேயிருந்தால்.அவரைக்கொடியில் வயலெட் நிறப்பூக்கள் கொத்து கொத்தாய் பூத்து நிற்கும்.அவரையிலோ இல்லை முருங்கையில் வெளிறிய வெண்ணிறப் பூக்களிலோ  தினமும் வரும் தேன்சிட்டு.நான் என்றைக்குமே சந்தோசத்தில் கத்துவதோ ஊளையிடுவதோ இல்லை.அந்த தேன்சிட்டை எங்கள் சிறு தோட்டத்திற்கு வந்ததிலிருந்து போவது வரை பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறேன்.எத்தனை இலகுவான உடல் அதற்கு.பூவின் காம்பில் கூட நின்றுகொள்ளும்.மிக வேகமாக சிறகசைத்தபடி  பூவிற்கு அருகிலேயே நிற்கும் இல்லை மிதக்கும் எத்தனை அழகான உணர்வு,எத்தனை அற்புதம் ஒரு சின்ன உயிர் எத்தனை பெரிய சாகசம் செய்கிறது.பின்னாளில் ஹாய் மதனில் “தேன் சிட்டுதான்” மிக அதிகமான முறை இதய துடிப்பு கொண்ட உயிர் என தெரிந்து அதிசயித்தேன்.கிட்ட தட 600 துடிப்புகள் நிமிடத்திற்கு. பறவைகள் எல்லாமே அழகான அதிசயமான உயிர்கள்.பார்க்கும்போதெல்லாம் பரவசம் தருபவை.பறவை என்னும்போது பறக்க முடியாத கோழியின் நினைவு தவிர்க்க முடியாதது.கோழி மட்டுமல்ல ஆஸ்திரேலியாவில் இருக்கும் எமு,நெருப்புக் கோழி,பென்குயின் கூட பறக்க முடியாதவையே.நெருப்புக் கோழியை வண்டலூரில் ஆறாம் வகுப்பில் சுற்றுலாவிற்கு சென்றபோது பார்த்திருக்கிறேன்.ஆனால் கோழி எதற்காக பறக்கமுடியாமல் இருக்கிறது   என்பதற்கு ஒரு கதை சொல்லப்பட்டதுண்டு.

கடவுள் பறவைகளின் அரசனான பருந்தை அழைத்து ஒரு மந்திர ஊசியை கொடுத்தார்.அதைக் கொண்டு அதுவரையிலும் பறவையாய் பறந்திராத எல்லாமே தத்தம் சிறகுகளை தைத்துக்கொண்டு பறந்தன.ஒவ்வொரு பறவையும் தன சிறகுகளை அமைத்துக் கொண்டபின் அருகிலிருந்த பறவைக்கு ஊசியை கை(?) மாற்றிக் கொண்டிருந்தது.காகம் தன சிற’கை’ முடித்து கோழியிடம் கொடுத்தது பொறுப்பற்ற கோழி பகுதி வேலை முடிந்த நிலையில் மந்திர ஊசியை தொலைத்துவிட்டது.அன்றிலிருந்து கோழி கொஞ்சம் கொஞ்சம்தான் பறக்க முடிகிறது.ஊசியை தொலைத்த கோபத்தினால் பருந்து காகத்தையும் கோழியையும் சிட்சிக்கிறது.கோழி ஊசியை தேடித்தான் மண்ணை எப்போதும் கொத்திக் கிளறிக்கொண்டிருக்கிறது.எத்தனை சோகம் இந்த கோழிக்குள்? நான் கற்பனை செய்திருக்கிறேன் என்றாவது கோழி அந்த ஊசியை கண்டுபிடித்து பறக்குமென.மற்றபடி கோழிக்குஞ்சுகள் என் உள்ளங் கவர்ந்தவை.கோழி எங்கள் வீட்டில் வளர்ந்திருக்கிறது.அப்போது அடைகாக்க  கோழி முட்டைகள்  மீது அமர்ந்திருக்கும்.இத்தனை பொறுப்பான கோழி ஊசியை தொலைத்து விட்டதே என நினைத்திருக்கிறேன்.
கோழிக்கு நான் பெயர் வைத்ததில்லை.சிறு பிள்ளைகள் கேலியும் கிண்டலுமாக எல்லாவற்றிற்கும் பெயர் வைப்பார்கள்.பட்டப் பெயர் போக அழைப்பதற்காக கூட பெயர் தேவை இல்லையா?நான் என்றுமே எவருக்கும் பெயர் வைத்ததில்லை.அது போன்ற விஷயங்கள் மனதை புண்படுத்தும் என்று நினைத்திருக்கலாம்.என் இயல்பில் பெயர் வைப்பது ஒரு குதூகலமான விஷயமாக இருக்கவில்லை.அனால் இன்று வேணி எல்லாவற்றிற்கும் பெயர் வைக்கிறாள்.தெருவில் போகிற எல்லா பிராணிகளுக்கும் அவளிடம் பெயர் இருக்கிறது.கோழி, பூனை, நாய், காகம், குருவி  ஏன் பாம்பைக் கூட நாகராஜா என்றே சொல்கிறாள்.அதுவும் ஒரு இயல்பான குழைந்தையின் வெளிப்பாடுதான்.எல்லாக் குழந்தைகளையும் நான் என்னோடுதான் ஒப்பிடுகிறேன்.எனக்குள் இருக்கும் என்னுள் இருந்த குழந்தையுடன்.கோழி பற்றிய இன்னொரு சுவாரசியமும் இருக்கிறது.நானும் என் தம்பியும் வண்ண வண்ணமாக இருக்கும் கோழிக்குஞ்சுகளை பார்த்துவிட்டால்  போதும் அதை  பார்த்துக் கொண்டே பின்னே செல்வோம்.எங்களூர் சந்தைக்கு வியாழக் கிழமைகளில் அந்த மாதிரி குஞ்சுகள் வரும்.

கோழிக் குஞ்சியை பார்த்திருக்கிறீர்களா? சிறிய முகம் சற்று சிவந்த வாய் முடியெல்லாம் பஞ்சு போல மெத்து மெத்தென்றிருக்கும்.அதன் அலகை  பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதை திறந்து க்யா முயா என்று சத்தமெழுப்பும்.ஒரு சின்னக் குழந்தை போன்று கள்ளம் கபடில்லாத முகம் கோழிக்குஞ்சுக்கு.அது போல சின்ன சின்ன விலங்குகள் எல்லாமே அழகாய் இருக்கும் நாய்க் குட்டி,பூனைக் குட்டி,பண்ணிக் குட்டி,கன்றுக் (கண்ணுக்) குட்டி,யானைக் குட்டி,ஆட்டுக் குட்டி எல்லாமே அழகுதான் இளமையில்.ஒரு சொலவடை நினைவுக்கு வருகிறது “பருவத்தில பன்னிக்குட்டியும் அழகு”.முதிர்ச்சி பெரும்பாலும் அருவருக்க தக்கதாக இருக்கிறது.அது ஏமாற்றுகிறது வஞ்சத்தோடு இருக்கிறது சூழ்ச்சி செய்கிறது கொல்கிறது.ஒரு போதும் குஞ்சுகளோ குட்டிகளோ குழந்தைகளோ இதை செய்வதில்லை.மிகக் கடுமையானதாயிருக்கிறது இந்த உலகம்.சரி கோழிக் குஞ்சை பார்ப்போம்.அவை பெரும்பாலும் மஞ்சள்,பச்சை,வாடாமல்லிக் கலர் இந்த நிறங்களில்தான் இருக்கும்.மஞ்சள் நிறம்தான் மிக இயல்பாய் பொருந்துவது போலிருக்கும்.நொச்சி கம்பில் செய்த கூண்டுகளில் உள்ளே அடைத்து வைத்திருப்பார்கள்.சைக்கிளில் செல்லும்போது பார்த்துவிட்டால் பின்னாலேயே சென்று அவர்கள் குஞ்சுகளை வெளியே எடுத்து போடுவதை பார்த்துவிட்டே திரும்புவோம்.அதெல்லாம் “கரண்ட்ல” பொரிச்ச குஞ்சு வாங்காத செத்து போயிரும் என்று அம்மா  எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நானும் என் தம்பியும் அப்பாவிடம் பணம் வாங்கிச் சென்றோம்…

May 14, 2009

கம்யூனிசமும்,”குருவி” மண்டையும்!

கன்னி நிலத்தை நான் புரிந்து கொள்ளாமல் போனதற்கு கதைக் களமும் ஒரு காரணம்(மிகப் பெரும் காரணம் என்னுடைய குருவி மண்டை).சோவியத் ரஷ்யாவின் கூட்டு பண்ணைகள்,பூர்ஷ்வாக்கள்,…இப்படி  வார்த்தைகள் சேர்ந்து ஒரு விதமான கதைசொல்லல்..ம்ஹூம் என்னால் தொடர முடியவில்லை…கம்யுனிச புத்தகம் ஒன்றைக்கூட நான் இதுவரைக்கும் வாசிக்கவில்லை.ஆனால் முயற்சித்தேன்..மூலதனத்தை(தமிழில்) வாசிக்க முயற்சி செய்தேன் கன்னி நிலத்தை விட மோசமான வாசிப்பனுபவம் அது.பிறகு ஒரு வழியாக “சே” வாழ்க்கை வரலாறு கையில் கிடைத்தது.அது போன்று ஒரு புத்தகம் அதற்கு பிறகு வாய்க்கவேயில்லை.சுமார் தொள்ளாயிரம் பக்கங்களை ஒரே இரவில் வாசித்தேன்.புரட்சி மீது காதல் கொண்ட ஒருவனுக்கு துப்பாக்கி கையில் கிடைத்த உணர்வுடன் வாசித்தேன்.சேவைப் பற்றி எதையும் இங்கு பதிவு செய்யாமல் நகர்கிறேன்.காற்றுக்கு எதற்கு அறிமுகம்.அதோடு நில்லாமல் அவர் இன்று பனியன்,அண்டர்வேர்,பிரா,கைப்பட்டை,கைக்குட்டை என நீக்கமற நிறைந்திருக்கிறார்.இவ்வாறான  அவர் பெருமைகளையும் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.மற்றபடி எனது வாசிப்பு ஒரு தகவல் சேகரிக்கும் கலையாக சிலகாலம் இருந்தது.கல்கண்டு,முத்தாரம்,கோகுலம்,பூந்தளிர்,துளிர்,..போன்ற இதழ்களை விடாமல் வாசித்து வந்தேன்.பலசமயங்களில் குறிப்பு எடுத்து கொள்ளும் வழக்கம் இருந்தது.குறிப்புகளை துண்டு தாள்களில் எழுதி வந்தேன். பின் குறிப்புகளை கோர்வைபடுத்தாமல் விட்டுவிடுவதும் குறிப்புகளை தொலைத்து விடுவதுமான என் இயல்புகளால் ஒரு டைரியில் எழுத ஆரம்பித்தேன்.சற்று நாட்களில் எனக்கே ஆச்சரியமான விதத்தில் அது ஒரு தகவல் களஞ்சியமாக ஆகியிருந்தது.இருந்தும் பயனில்லை நான் எதையும் எங்குமே பயன்படுத்தியதில்லை.என்னை சுற்றியிருந்த நண்பர்களிடம் டைரி குறித்து  ஒரு பகிர்தலும் இல்லாமலேயே இருந்துவந்தது அதுதான் நான் எதிர்பார்த்தும்.ஆனால் சற்றே எதிர்பாராத சுவாரசியம் ஓன்று நிகழ்ந்தது.

என் தம்பியின் மூக்கு வியர்த்துவிட்டது.அவனுக்கு நான் செய்யும் ஏதாவது ஒன்னு ரெண்டு நல்லது கூட பிடிக்காது.அதைக் கெடுக்க மாட்டான் ஆனால்…சொல்கிறேன்..அவனும் துணுக்குகளை டைரியில் எழுத ஆரம்பித்தான்.இராப்பகலாக எழுதி எழுதிக் குவித்து விட்டான்.போதாக்குறைக்கு எழுதி நிறுத்தியிருந்த தெரிந்த நண்பர்களிடமும் சென்று அவர்களுடைய டைரிகளை வாங்கிச் சேர்த்து என்னை மிஞ்சி விட்டான்.எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது இப்படிக் குறுக்கு வழியில் என்னை முந்தி விட்டானென்று(எவ்வளவு நேர்மையான கோபம்?).ஆனால் ஒன்னும் செய்ய முடியாது.அவனிடம் என் பாச்சா பலிக்காது.அவனை பெரியவர்களால் கூட மிரட்ட முடியாது.என்னால் ஒரு கைக்குழந்தையை கூட பயமுறுத்த முடியாது அவனை என்ன செய்ய?.அதையும் மீறி  நான் அவனை அடிக்க கை ஓங்கினாலே கத்தி கதறி நம்மையே பதற வைப்பதுடன் நில்லாமல் ஊரைக் கூட்டிவிடுவான்.அவ்வளவுதான் என் அம்மா வந்தால் கதை கந்தல்.எல்லா அம்மாக்களுக்கும் மூத்த பிள்ளைதான் பிடிக்குமென்றாலும் இளைய பிள்ளைகளுக்குத்தான் செல்லம் அதிகமாயிருக்கும்.எனவே வீட்டிற்கு அண்மையான இடங்களில் அவனுடன் மிகச் சமரசமாகவே இருந்துவந்திருக்கிறேன்.அவனை அழவைப்பதில்லை.வீட்டிற்கு வெகு தூரமென்றால் அவன் அடக்கி வாசிப்பான்.மீறினால் சண்டைதான்.

அப்பொழுது எங்கள் வீட்டில் தினமலர் நாளிதழ் வந்து கொண்டிருந்தது.சிறுவர் மலரை தவிர எனக்கு வாசிக்கும்படியாக வேறொன்றுமில்லை.வெள்ளிக் கிழமைகளுக்காக காத்திருப்பேன் இல்லை காத்திருப்போம்.பேப்பர் போடும் அண்ணன் என்னிடம் கொடுக்கவே மாட்டார்.அவரும் என் தம்பியைத்தான்  தலையில் வைத்து ஆடினார்.எனக்கு எரிச்சலாக இருக்கும்.அதற்காகவே  நான் கேட்டுக்கு அருகில் இருந்த சுவரோரமாய் ஒரு பெரிய கல்லில் அமர்ந்திருப்பேன்.சில நாட்கள் என் கைக்கு கிடைக்கும்.பிறகு பலமுக மன்னன் ஜோ,சோனிப் பைய்யன்,பிராம்போ,பேய்ப்பள்ளி இந்த அளவில்தான் அன்று வாழ்க்கையின் சந்தோசமே இருந்தது.அதையெல்லாம் வாசிக்கும்போது நான் சிரித்தேனா என்று கூட இன்று நினைவில் இல்லை.ஆனால் அன்று அந்தப் படங்களை(சித்திரங்களை) பார்ப்பதில் இருந்த உற்சாகமும் ஆர்வமும் இப்பொழுது இம்மியளவும் இல்லையோ எனத் தோன்றுகிறது.ஆனால் சிறுவர் மலரை மட்டுமல்லாமல் தங்க மலரும்(தினத் தந்தி) வாசித்தேன்.அதற்காக டீக்கடைகளுக்கோ இல்லை சலூனுக்கோதான் போக வேண்டும். ராமு சோமு,ரகசிய போலீஸ் சைபர்(!),.. என சில ஞாபகத்தில் இருக்கின்றன.கன்னித்தீவு வாசிக்க சில காலம் முருக மாமா டீக்கடைக்கு செல்வேன்.ஞாயிற்று கிழமைகளில் மந்திரவாதி மாண்டிரெக் லொதர் இவர்களின் சித்திரக் கதைகளை வாசித்து வந்தேன்.ஆனால் எதிர்பாராமல் படித்த அந்த வாண்டு மாமாவின் புத்தகத்தில்…

April 9, 2009

கன்னி நிலம்…

சிறு வயதிலிருந்தே எனக்கு ஒரு வழக்கமிருக்கிறது மிக அணுக்கமான, கவனம் தேவையாகிற எந்த ஒரு செயலையும் என்னால் செய்ய முடிந்ததில்லை.உதாரணமாக புத்தகங்களை பைண்ட் செய்து ,அடுக்கி வைத்து  உபயோகிப்பதில் இருக்கும் அழகே தனி.அது ஒரு கனவைப் போலவே இன்றளவும் என்னுள் இருக்கிறது.எனது அறையில் புத்தகங்களை குவித்து வைத்திருப்பேன்; நான் படுத்திருக்கும் கோரைப்பாயை சுற்றிலும் பத்திரிக்கைகளும்,நோட்டுகளும் கூடவே நான் நேசித்த புத்தகங்களும் சிதறி கிடக்கும்.பல நேரங்களில் வாசிப்பு ஒரு கொந்தளிப்பு நிறைந்த அனுபவமாக இருந்தது.இல்லை அது போன்ற உள்ளடக்கம் நிறைந்த புத்தகங்களை விரும்பியிருக்கிறேன்.செவ்விலக்கியங்களை பெண்களாகவே  கருதினேன்,அதாவது புரிந்து கொள்ள முடியாதென்று.சட்டென ஒருநாள் மிகாயில் ஷோலகவ் எழுதிய கன்னி நிலத்தை வாசிப்பதென ஒரு அதிர்ச்சியான முடிவை நானே எடுத்தேன் அந்த புத்தகம் ருசிய புத்தகங்களை வெளியிடும் ஒரு பதிப்பகத்தால் மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டு என்னைப் வாசி வாசி  என்று  கூவி அழைக்கும் விதமாக எங்களூர் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.கையில் பிடித்து வாசிக்க முடியாத அளவில் அது மிகப் பெரிய புத்தகமாயிருந்தது.மனசுக்குள் காத்தாடி ஓடியது.மின்விசிறியல்ல ஓலைக்காத்தாடி காக்கா முள் எனச் சொல்லப்படும்   உட மரத்து முள்ளை பசுமையான அல்லது காய்ந்து போன பனை ஓலையை ரெண்டு இன்ச் அளவிற்கு ஒடித்து, அதன் நடுவில்(centroid)  துளையிட்டு ஒரு அடி கம்ம(ன்) தட்டையில் முன் பக்கம் அல்லது பக்கவாட்டில்  குத்தி,காற்றுக்கு எதிராக பிடிக்க ஓலை காத்தாடி விர்ரென்று இறைந்து கொண்டு சுற்றும்.அடடா அதை செய்து கொடுத்தவருக்கு பொன் கொடுத்தாலும் தகும்.மேகாத்து காலம்  எல்லா சிறுவர்களும் ஒரு காத்தாடி வைத்திருப்பார்கள் சிலர் மிக அழகாக அந்த ஓலையின் பக்கவாட்டில் கீறி மற்றொரு ஓலையை செருகி சிலுவை போன்ற காத்தாடிகள் வைத்திருப்பார்கள்.எல்லா சிறுவர்களுக்கும் அவ்விதமான காத்தாடி செய்து கொடுப்பவர்கள்(தேவ தூதர்கள்) இருந்தார்கள் என் அப்பா கடைக்கு சென்று விடுவார்.என் அம்மாவிடம் கேட்டால் நினைத்து கூட பார்த்ததில்லை.நான் அவளிடம் கேட்டதேயில்லை.காரணம் அவள் நான் விளையாடுவதற்காக சுற்றியலைவதை அனுமதித்ததில்லை எனவே காத்தாடியும் செய்து தர மாட்டாளென்று  நான் யூகித்திருந்தேன்.நானே அரை குறையாக பக்கத்து வீட்டு ஓலைகளை ஒடித்து காத்தாடி செய்வேன் ஓலைகள் ஒடிந்து ஒடிந்து போகும்.உண்மையில் என்னிடம் சரியாக ஒடிக்கும் உத்தி இல்லை.யாராவ்து  மூத்தவர்கள் என்னிடம் செய்து கொடுப்பதாக சொல்லும்வரை பக்கத்து வீடு கூரைக்கு ஆபத்துதான்.
ஒருவழியாக கன்னி நிலத்தை கையில் தூக்கி கொண்டு வீடு சேர்ந்தேன்.வழியெல்லாம் எல்லோரும் என்னை பார்த்திருக்க கூடும் குருவி தலையில் பனம் பழத்தை தூக்கி கொண்டு சுற்றுகிறது என நினைத்திருப்பார்கள்.ஒரு குட்டி கர்வத்தோடுதான் வீட்டிற்குள் நுழைந்தேன்.என் அம்மா படியாதவள் நான் என்ன வாசித்தாலும் பூரிப்போடு பார்ப்பாள் நான் அதை கவனிக்காதது போல வாசித்து கொண்டிருப்பேன்.இடையிடையே எதாவது தின்பண்டம் வாங்கி கொடுப்பாள்.கன்னி நிலத்தில் புரள்வதற்காக என் சிற்றப்பா வீட்டு மெத்தைக்கு(மாடிக்கு) சென்றிருந்தேன்.அங்கு என்னை சுற்றி புத்தகங்கள் சிதறி கிடந்தது. ஒரு கனவு வெளியைப் போல இன்றும் என் கண்களில் விரிகிறது அந்தக் காலம்.வாசிப்பதின் சுகத்தை பூரணமாக நான் அனுபவித்த இடம் அந்த வீடுதான்.அந்த இடமே ஒரு தேவலோகம் போலிருந்தது.மாடியில் தெற்குப்புறம் பால்க்கனி.வடக்குப்புறம் மொட்டை மாடி.அறைக்குள் காற்று வீசிக்கொண்டே இருக்கும் உபயம் அருகிலிருந்த சுடலை மாடன் கோவில் வேப்பமரம்.வடக்கில் சற்று தள்ளி என் அறைக்கு நேர் எதிரே லூர்து மாதா சர்ச்.தெற்கில் அதே போல காந்தாரி அம்மன் கோயில்.எனக்கு பரவசமாயிருந்தது காலை பொழுதுகள்தான்.சர்ச்சில் அதிகாலையில் ஒரு விவிலிய வாக்கியமும் அதை தொடர்ந்து மிக இனிமையான பாடல்களும்;அம்மன் கோவிலில் அவ்வப்போது பாடல்கள் மாறும் என்ற போதிலும் துதிப்போர்க்கு என பெரும்பாலும் கந்த சஷ்டி கவசம் ஓங்கி ஒலிக்கும் அன்று காலைகளுக்கு இருந்த போதையும் பரவசமும்  இன்று நூறில் ஒரு பங்கில்லை வாழ்க்கை மிக வறண்டு விட்டது.இருக்கட்டும்.கன்னி நிலம் இப்படி ஒரு சூழலில் வாசிக்கப்பட்டது.ஆனால் வழக்கம் போல என் மர மண்டையில் கதை ஏறவில்லை.வாசிப்பதில் கூட எனக்கு பொறுமை கிடையாது மூச்சிரைக்க ஓடுவது போலவே இருந்தது எனது வாசிப்பு.மீள் வாசிப்பென்பது  தேர்வுகளுக்காக என் பாடப் புத்தகங்களோடு நான் செய்து கொண்ட கட்டாய கல்யாணம்(வாழ்க வைரமுத்து!).மீள் வாசிப்பதென்பது புரிந்து கொள்ளுதல், என் வாசிப்பு ஒரு சுதந்திர வெளி;புரிந்து கொள்ளுதல் ஒரு நிர்பந்தமாகவே தோன்றியிருந்தது ஆகவே மனம் ஊன்றி வாசிதத போதிலும்  நான் ஒரு போதும் திரும்ப வாசிக்க எண்ணியதில்லை.விதிவிலக்குகள்  வைரமுத்துவின் சிகரங்களை நோக்கி,குறைந்தது ஒரு நூறு முறை வாசித்திருப்பேன்.அப்படியொரு சுவை, அந்த கதா நாயகன் திருஞானம் போலவே மிக பரவசமாக இயற்கையை வழிபட வேண்டுமென்ற ஒரு தீவிரம் என்னுள் வேட்கையாக எரிந்த நாட்கள் அவை.பிறகு அர்த்தமுள்ள இந்து மதம் குறிப்பாக “ஞானம் பிறந்த கதை” என்ற ஐந்தாம் பாகம் “காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே” என்று மகன் பட்டிணத்து செட்டிக்கு சொல்லி செல்கிறான்.அவனது ஆத்தாவும்,மகன் கஷாயம் தரிக்கும் பொழுதும் அவன் பிரியும் தருணத்திலும் அவன் கண்களை திறக்கிறாள்.எனக்கு விவரம் தெரியாமல் நான் வாசித்த இது போன்ற வறட்டு தத்துவங்கள் என்னை ஒரு வகையான சிமிழுக்குள் அடைத்துவிட்டது இன்றும் எண்ணெய் போல வாழ்க்கையோடு ஒட்டவிடாமல் செய்வது இந்த சின்ன வயது புரிதலில்லாத தத்துவங்கள்தான்.

– தொடரும்…

Create a free website or blog at WordPress.com.