தொடுவானம் தொடாத விரல்

June 10, 2012

அஞ்சுவண்ணம் தெரு – நிறைவு!

Filed under: வாசிப்பு — கண்ணன் பெருமாள் @ 4:50 am

ஆதித்தெருவின் கதைகள் அறுந்துபோய் நிகழ்காலத்தின் சண்டைகளும் சச்சரவுகளும்தான் அஞ்சுவண்ணம் தெருவின் முடிவாகிறது.கதைகளின் மீதிருக்கும் ஈர்ப்பும்,மயக்கமும் நடைமுறை வாழ்வில்,வாழ்வின் தருணங்களில் இல்லை.யதார்த்தவாத இலக்கியங்களில் உறைந்து கிடப்பது நாம் வாழும் உலகின் பிம்பங்களே. இலக்கியங்களெல்லாம் நடைமுறையிலிருந்து தப்பிச் செல்ல விழையும் மனித மனத்தின் தத்தளிப்புதான் என நான் நினைத்திருக்கிறேன்.அதனாலேயே என் பதின்பருவத்தில் கதைகள்,நாவல்களுக்குள் நுழையமுடியாமல் திகைத்துமிருக்கிறேன்.ஆனால் அசோகமித்திரன்,நாஞ்சில் நாடன்,கண்மணி குணசேகரன் போன்றவர்களின் படைப்புலகங்கள் அசல் வாழ்க்கையை உள்ளபடியே சொல்கின்றன.புனைவுகளின் யதார்த்தம் சர்க்கரை இல்லாத காபி போல கசப்பானது.கடைசி நூற்றுச்சொச்சம் பக்கங்களில் மீரான் கசப்பான காபியை தருகிறார்.இதுதான் முழு நாவலாக இருக்குமென்றால் அது யதார்த்த”வாதமாயிருந்திருக்கும்”.ஆனால்.ஜின்னுகளும், அவுலியாக்களும், மலக்குகளும், ஹூர்லின்களும் நாவலின் மீதான ஈர்ப்பை நீர்த்துப்போகாமல் செய்கின்றனர்.

ஆந்திராவில் வெடித்த குண்டுக்கு இரண்டு அப்பாவி இளைஞர்களை குற்றஞ்சாட்டி கொன்றுவிடுகின்றனர் போலிஸ்.புதிதாக என்ன சொல்ல இதை பக்கம் பக்கமாக நமது புலனாய்வு பத்திரிக்கைகள் எழுதுகின்றன.மைதின் பிச்சை மோதின், கிழவி இறந்த துக்கத்தில் அலைந்து கடைசியில் கள்ளப்பாம்பு கொத்தி சாகிறார்.பாம்பு நடமாடும் பள்ளிக்கு தொழப் போக வேண்டாம் எனச் சொல்லும்போது வாப்பா சொல்கிறார் , “யாரானாலும் ஆயுள் தாண்டி ஒரு நொடி கூட வாழ முடியாது இத்தனை ஏன் அவனுக்கு உவப்பான நபிக்கே 63 வயதுதான் எழுதி வைத்திருந்தான்.” குவாஜா அப்துல் லத்திப் ஹஜ்ரத் நோய்வாய்ப்படுகிறார்.அவரது மகன் பாகவிக்கு தவ்ஹீதுவாதியான அபுசாலி ஆட்சிகுழுவுக்கு தேர்வு செய்யப்பட்டவுடன் பதவி போகிறது.சீக்கா வீட்டு சாவலின் தம்பிக்கு நிக்காஹ் சிங்கப்பூர்காரரின் மகளோடு, கொள்கைபிரச்சார உரையில் நபி வழித் திருமண முறைப்படி மஹர் கொடுத்து நடக்கும் முறையான முதல் திருமணம் இதற்கு முன்பு நடந்ததெல்லாம் ஹராமான திருமணங்கள் எனச் சொல்ல, ஹராத்தில் பிறந்தவர்களா? என பொங்கி எழுகிறார்கள் மக்கள்.தொடர்ந்து சண்டைதான் வேறென்ன.

கடைசியில் தாயும்மாவை இழிவு படுத்தி பேசுவதை நிறுத்தச் சொல்லி பதற் போர் பற்றி தவ்ஹீது வாதிகளின் கொள்கை விளக்க கூட்டத்தில் பக்கீர்ஷா ஒருவர் பாட,சண்டை பெரிதாகி அஞ்சு வண்ணம் தெருவிலுள்ள வீடுகள் அடித்து நொறுக்கப் படுகின்றன.அதோடு தைக்காப் பள்ளி யாரும் கேட்பாரின்றி சிதலமடைந்து, ஓடுகள் விழுந்து குட்டிச் சுவராகிறது.படுக்கையில் கிடக்கும் அப்துல் லத்திப் ஹஜ்ரத்தை பார்க்க தாத்தாவின் மருத்துவர் மகன் செல்கிறார்.BARC-ல் வேலை பார்க்கும் சகோதரன்,திருச்சி எஸ்.பி,கல்லுரி முதல்வர் என சகோதரர்கள் அனைவரும் நலம் எனக் கேட்ட ஆலிப்புலவரின் வாரிசுக்கு ஆச்சரியம்.எப்படி மினாரா கட்டிக் கொடுக்காமல் ஹஜ் போன மேற்கத்திக்காரரின் பிள்ளைகள் இப்படி உயர்ந்தனர்?.ஷேக் மதர் சாஹிப் ஏன் பாப்பரானார்? அந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தவள் மம்மதும்மா மட்டுமே.

பாபர் மசூதியை பற்றிய குறிப்பு கடைசி அத்தியாயத்தில் வலிந்து திணிக்கப் பட்டதாகவே தெரிகிறது.ஆனால் மசூதி இடிக்கப்பட்டது நாடெங்கிலும் உள்ள இஸ்லாமியரை புண்படுத்தியதோடு அவர்களை இந்துக்களிடமிருந்து நிரந்தரமாக விலகி இருக்க செய்தது.ஆகவேதான் அது கனவில் ஒரு சித்திரமாக,ஆழ்மன வேதனையாக,அச்சமாக காட்டப்படுகிறது.ஆலிப் புலவரின் வாரிசான ஹஜ்ரத் அவர் குடும்பம் வறுமையில் வாடுகிறது,தலைமுறைகளாக அந்த தாயை வணங்கிய அத்தனை பேரின் வீடுகளும் நொறுக்கப்பட்டுவிட்டன,அவ்வளவு ஏன் அந்த தாயும்மா உறைந்த தைக்காப் பள்ளியே குட்டிச் சுவராகி விட்டது.வெளி நாட்டுக்கு போய் தவ்ஹீதுவாதியானவர்கள், ஒழுக்கத்தோடு உழைத்து கல்வி கற்றவர்கள் நன்றாக வாழ்கிறார்கள்.இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் மீதான மீரானின் விமர்சனங் கலந்த பதிவு இந்த நாவல்.ஒன்று பணம் தேடு,இல்லை கல்வியை நாடு இல்லையென்றால் நம்பிக்கைகளை, தலைமுறைகளாக வளர்த்த பண்பாட்டை தன் மக்களிடமே இழக்க நேரிடும்.இழந்தவர்கள் கடைசியில் ஈமானில் குறையாத எளிய மக்கள்,அந்த தாயும்மாவின் பெற்றெடுக்காத பிள்ளைகள்.

Photo: Russ Bishop

May 26, 2012

அஞ்சுவண்ணம் தெரு – 4

Filed under: வாசிப்பு — கண்ணன் பெருமாள் @ 11:46 pm

நமது புலவர் காயல்பட்டணம் போனவர் நபியின் விண்ணேற்றப் பயணம் நிகழ்வை பாடலாக இயற்றி கையில் வைத்துக் கொண்டு அரங்கேற்றத்துக்காக கோட்டாறு வருகிறார்,தன் சமூக மக்களிடம் நடையாய் நடந்து நொந்துபோனவரை பாவாடைச் செட்டியாரிடம் அழைத்துச் செல்கிறார் புலவரின் மாணவர்.புலவரின் வேதனையை கண்ட செட்டியாரும் அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்கிறார்.வடக்கே மொகலாய சக்கரவர்த்தி அக்பரின் பொற்கால ஆட்சி நடந்துகொண்டிருக்கும் காலத்தில் தென்னெல்லையில் (எனக்கு இரண்டு அல்லது மேற்பட்ட வார்த்தைகளை இஷ்டத்திற்கு இணைத்து எழுதும் வியாதி இருக்கிறது என்பதை இவ்விடம் தெரிவித்துக் கொள்கிறேன்.திண்ணை இணைய இதழில் இரா.முருகன் கதையின் ஓரிடத்தில் நன்னார்க்குண்டி என்று சொல்லி பின் நன்றாக+இருக்கும்+அடி என்று “வாச”கர்களுக்காக சந்தி பிரித்திருந்தார்.) இப்படி ஒரு சித்திரம் காணக்கிடைக்கிறது.மேலும் அரங்கேற்றத்துக்கு கூடிய கூட்டம் மூவாயிரம் இந்து நெசவாளர்களுடையது.ஒற்றை வேம்பு வளர்ந்தோங்கி கிளை பரப்பி நிற்கிறது.இந்த வேம்புதான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காக்கை இட்ட எச்சத்தில் இருந்து முளைத்த வேம்பு.ஆனால் என்ன நடந்தது என்பதுதான் அதிசயத்திலும் அதிசயம்.

photo credit: sriram-chennai

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறைவழிபாட்டிற்காக முன்னோக்கியிருந்த பள்ளி “பைத்துல் முகத்தீசு” இது ஜெருசலேமில் தாவூது நபியின் (தாவீது/டேவிட்) மகனான சுலைமான் நபியால் (சாலமன்) கட்டப்பட்டது.நபி புராக் என்னும் மிருக ஊர்தியில் அப்பள்ளிக்கு சென்று பின் விண்ணேற்றப் பயணம் செய்கிறார்.நாலாவது ஆகாசத்தை கடந்து ஐந்தாவது ஆகாசத்தில் நுழையுமுன் தூணில் கைவிரலால் துளையிட்டு புராக்கை அதில் கட்டிவிட்டு நுழைகிறார்.புலவர் இதை கூடியிருந்தவர்களுக்கு சொல்லி விளக்கும்போது வேம்பின் அடியில் தாஹா நபி (நபிகள் நாயகம் (ஸல்)) ஒரு ஜோதியாக தோன்றுகிறார்கள்.மொத்த கூட்டமும் வாயடைத்துப் போய் நிற்கிறது,நபி ஆலி என்னுடன் வந்த ஜிப்ரீலும் அல்லாவையும் தவிர யாருமறியாத இந்த விடயம் உனக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறார்?.நபியை நேரில் கண்டு விதிர்விதிர்த்துப் போன ஆலி “எனக்கு அப்படி வந்து விட்டது” எனச் சொல்லி மூர்ச்சையடைகிறார்.குருடர் பாவடைச் செட்டியார் கண் பெறுகிறார்.நபியைக் கண்ட கண்கள் மானிடரைக் காணாதென்று கண்களை குருடாகிவிடுகிறார் புலவர்.

பின்னும் எத்தனையோ கதைகள் மம்மேலி மைதீன் தைக்காப் பள்ளியில் முதன் முதலாய் பாங்கு சொல்வது,மம்மதும்மாவின் நிக்காஹ்,மம்மதுப்பாவின் சத்தியத்திற்கு கட்டுப்பட்ட பாம்பு,ஓடிப்போன ஹஜாராவின்(தாயும்மாவின்) சகோதரர் வழி வந்த மம்மதுப்பாவின் கனவில் பெத்தம்மா வந்து சொல்லி இரவோடிரவாக ஜின்னுகளை கொண்டு பள்ளி கட்டுவது,மறைக்காயரப்பாவின் போர்த்திறம்,உபைத் இப்னு அப்துல்லாஹ் என்னும் அரபியின் வழி வந்த மாவீரன் ஷஹீத் அயம்மாதாஜியின் மகள்தான் மம்மதும்மா,அயம்மாதாஜி வெள்ளைருக்கெதிரான போரில் வீரமரணம்(ஷஹீத்) அடைகிறான்,நாட்டுக்காக போராடிய அந்த வீரனின் அருமாந்த பெண்பிள்ளைதான் வீடின்றி தெருவிலலையும் மம்மதும்மா,ஆற்றங்கரைப் பள்ளியில் கிடாய் அறுத்து நெய்ச் சோறு விருந்திட்டு பாத்தியா ஓதிட்டு சௌதிக்குப் போன சீக்கா வீட்டு சாவல் தவ்ஹீதுவாதியாக திரும்பி வந்து ஊரை ரெண்டாக்குகிறான்,நாகூரப்பாவின் பேர் வைப்பது தவறென்கிறான்,மெஹ்ராஜ் மாலை,மஸ்தான் பாடல்கள்,சீறாப் புராணம் எல்லாத்தையும் தீ வைக்கணும் எல்லாம் ஷிர்க் என்கிறான்,தொப்பியணிய மறுக்கிறான் ,மவ்லுது ஓதுவது பாவம் என்று சொல்லும் அவன் உம்மா “சுட்டும் விழிச் சுடரே” என்ற கஜினி படப் பாடலை கேட்கிறாள்,அதோடு விடாமல் வட்டிக்கு பணம் கொடுக்கிறாள்,தாயும்மாவின் கொடியேற்ற விழாவில் கொடிக்கம்பு முறிக்கப்படுகிறது கொடி கிழிக்கப்படுகிறது.நாகரிகம் முற்றிய பண்பாட்டாளர்கள் உலகெங்கும் செய்யும் கூத்து அங்கு அரங்கேறுகிறது.கபடமற்ற மக்களின் பண்பாடு,நம்பிக்கை முறிக்கப்பட்டு,கிழித்தெறியப்படுகிறது.கடைசியில் தாயும்மாவின் கொடி சாணியில் புரட்டப்பட்டு வீதியில் கிடக்க மம்மதும்மா பெருங்குரலெடுத்து வைகிறாள்.

இப்படித்தானே மெல்ல மெல்ல நம் கண்ணெதிரே பெருந்திரளான மக்கள் செய்யும் விவசாயத்தை கேலிப் பொருளாக்கினர்.நம் உணவு வகைகள்,தானியங்கள்,திருவிழாக்கள்,நாட்டார் கலைகள்,விளையாட்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டு திரைப் படங்களையும்,தொலைக்காட்சியையும்,கிரிக்கெட்டையும் மட்டுமே பிடித்துக் கொண்டிருக்கிறோம்.(கோபப்படாதீர்கள், எனக்கு புத்தகங்களும்,இணையமும் அவ்வப்போது கிரிக்கெட்டும்.)

மலட்டுக் காசிம் மண்டையைப் போட்டதும் இந்த வன்மம் உச்சத்தை எட்டுகிறது,அவன் மனைவி இத்தா இருக்க மறுப்பதை மம்மதும்மா சரியென்று சொல்லி காரணமாக காசிமின் வண்டவாளத்தை பிட்டு வைக்கிறாள்.தல்கீன் ஓதக்கூடாது ஓதவேண்டும் என்று கைகலப்பாகி ஒன்றுமறியா சுக்குக் காப்பி இஸ்மாயில் கொல்லப்படுகிறான்.மம்மதும்மாவின் நெஞ்சம் ரணமாகிப் போகிறது என்றென்றும் அவள் வாய் திறக்க முடியாத பெருந்துயராக மாறிவிடுகிறது இஸ்மாயிலின் மரணம், எத்தனை எளியவன்?. வாப்பா சொல்கிறார் இந்த சாமானி(காலம்) யிலுள்ள முஸ்லீம்கள் கையில் இஸ்லாம் அதாபு(சிரமம்) படுகிறது.அதேவேளையில் நொடித்துப் போன மச்சானுக்கும்,தாத்தாவுக்கும் விடியலாக வருகிறது அவர்கள் பிள்ளைக்கு கிடைத்த மெடிக்கல் சீட்.தாருல் சஹீனா விருத்திகெட்ட வீடில்லை, அல்லாஹ் வீடுகளின் உயரத்தை அளப்பவனில்லை.

-தொடரும்

May 19, 2012

அஞ்சுவண்ணம் தெரு-3

Filed under: வாசிப்பு — கண்ணன் பெருமாள் @ 2:56 am

வாய்நிறைய தளிர் வெற்றிலையும் வேப்பாணம் போயிலையும் கூட்டி கன்னத்தில் ஒதுக்கியபடி தாத்தாவிடம் நபீசா மனிசிலுக்குள் ஆளற்ற இரவுகளில் ஒலிக்கும் கொலுசு சத்தத்துக்கு பின்னாலிருக்கும் நிஷாவைப் பற்றி சொல்கிறாள் மம்மதும்மா. நிஷா கருப்பென்றாலும் அழகி பட்டாரியாரின் மகனை நேசித்தாள் கருவுற்ற உண்மை ஊரெல்லாம் தெரியவர சடலமாக கிடக்கிறாள். வேப்பாணம் போயிலை வாசனை கதையெங்கும் கமகமக்கிறது. போயிலை பாவிக்கும் ஆண்களையோ பெண்களையோ ஏன் போயிலையையே பார்த்து பல வருடங்களாகிவிட்டது.திண்டுக்கல் அங்கு விலாஸ் போயிலை,வேப்பாணம் போயிலை,D S பட்டணம் பொடி இதையெல்லாம் இன்று கேட்கும்போது வேறுயுகத்தில் இருப்பதை உணர முடிகிறது. வாப்பாவிற்கு ஆலிப்புலவரின் மெஹ்ராஜ் மாலை அத்துப்படி.கவிஞரை பற்றிய கதைகளையும் தொன்மைங்களையும் மெய்மறந்து சொல்கிற வாப்பா ஒத்த எழுத்து வாசிக்கத் தெரியாதவர். என் வாழ் நாளில் அப்படிப்பட்ட மனிதர்களை இன்னும் பார்க்கவில்லை.இத்தனைக்கும் எங்களூரிலிருந்து பத்து மைல் தொலைவிலிருக்கும் இடைசெவலில்தான் தமிழகத்தின் தலை சிறந்த கதை சொல்லி கி.ரா பிறந்தார்.(இவரும் அகாடமி விருது வாங்கியவர் என்பதை அடியேன் இவ்விடம் குறிப்பிட விழைகிறேன்.அங்ஙனமே விலைக்கு வாங்கிய பெரியவரின் புத்தகங்களுமுண்டு.)

ஆலிப்புலவரின் கதை சுவாரசியம் கூடியது குளிர எண்ணெய் தேய்த்து குளித்தால் கவிஞருக்கு ஆட்டுக்கறி வேண்டும்.பலநாட்கள் தேசாந்திரம் போய் திரும்பிய புலவர் அன்றும் அப்படியே வழிய வழிய எண்ணெய் தேய்த்துவிட்டு ஆட்டுக் கறி கேட்கிறார் மனைவியார் இல்லை என்கிறார்,சரி கோழிக்கறி என்று கேட்கிறார் இல்லையென்கிறார் கோபம் பொத்துக் கொண்டது கவிஞருக்கு.பின்னே கவிஞர் இல்லையா?.மனைவியிடம் வானத்தை பார்த்து ஆலிப்புலவர் எண்ணெய் தேய்த்து குளிக்கிறார்,மத்தியானம் சாப்பாடுக்கு ஐந்தாறு கொக்குக்குகளை விழச் சொல் என்கிறார்.மனைவி சிரிக்கிறாள்.என்ன அதிசயம் கொக்குகள் வரிசையாக ,அறுக்க வசதியாக கழுத்தை நீட்டியபடி வானிலிருந்து முற்றத்தில் செத்து விழுகின்றன.உடன் கொங்கணரும், வாசுகியும் நினைவில் வந்தார்கள்.கூடவே அந்த தெய்வப்புலவனின் குறள் ஒன்றும், நேற்று பத்மாவதி சரித்திரத்தில் இடையே வந்தது.

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.

பின்னும் எட்டயபுரத்துக் கவிஞன்

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினைஅழித்திடுவோம்.

ஏனய்யா புலவீர்காள் இத்தனை கோபம்?.வாப்பா சொல்கிறார் அவர் புலவர் மட்டுமில்லை அவுலியா!.வலிய கராமத்துள்ள அவுலியா!.தைக்காப் பள்ளிக்கு தாருல் சாஹினாவை விட உயரமாக ரெண்டு மினாரட்டு கட்டிக் கொடுக்க குவாஜா அப்துல் லத்திப் ஹஜ்ரத் எத்தனை எடுத்து சொல்லியும் மறுத்து விடும் வாப்பாவை அவர் ஆசாமி வஹாபியோ என்று சந்தேகிக்கிறார்.ஆனால் வாப்பாவிற்கு இறைநேசர்களின் மீதிருக்கும்ஆழ்ந்த ஈடுபாடு ஆலிப்புலவரின் வழியாக சொல்லப்படுகிறது.

மேலும் தீன் சொல்ல நாஞ்சில் நாட்டுக்கு வந்த சதக்கத்துல்லா அப்பா அவர்களிடம் மக்களெல்லாம் கூடி குறை சொல்கிறார்கள் என்னவென்று இந்த நெய்துக்காரன் பீர் மட்டும் தொழ வருவதில்லை என்று.அப்படியா சங்கதி ,விட்டேனா பார் என்று பீரை சந்திக்கப் போகிறார் தொழும் வேளை.பீர் தறிக் குழிக்குள் நெய்து கொண்டிருக்கிறார்.

ஏனப்பா நீ பள்ளிவாசலுக்கு தொழப் போகல்ல?

எனக்கேட்டுவிட்டு பார்த்தால் என்ன மாயம்? பீரை காணவில்லை.தறிக்குழிக்குள் எட்டிப் பார்த்தவருக்கு தூக்கி வாரிப்போடுகிறது.என்ன அதிசயம் கஅபதுல்லா (மக்காவிலிருக்கும் காபா) திறந்திருக்க பீர் தொழுது கொண்டிருக்கிறார்.ஆஹா என்ன காரியம் செய்ய துணிந்து விட்டேன், இத்தனை பெரிய அவுலியா வாழ்கிற மண்ணிற்கா தீன் சொல்ல வந்தேன்? என எண்ணி திரும்ப எத்தனித்தவரை பீர் இருந்து விருந்துண்டு செல்ல சொல்கிறார்.அதோடு முடிந்ததா கதை குளத்திற்கு குளிக்கச் சென்ற இடத்தில் எப்படி சுத்தமாக குளிக்க வேண்டுமென சொல்கிறார் பீரப்பா.எப்படி தன் குடல்களை கையில் எடுத்து அலசி கழுவுகிறார். சதக்கத்துல்லா “என் ஷேக்கே” என வாயடைத்துப் போய் நிற்கிறார். பீரப்பா பற்றி இங்குஎச் ஜி ரசூல் இங்கு ஹமீது ஜாஃபர் எழுதிய பதிவுகள்.நானும் நாலு வருடங்கள் அந்த ஞானியின் பூமியில் நல்ல சாப்பாட்டுக்கு அலைந்திருக்கிறேன், எத்தனை பெரிய அஞ்ஞானி நான்!.

இப்படி வாப்பாவின் வெகு சுவாரசியாமான கதைகளில் வரும் மீரானின் நாஞ்சில் வழக்கு எனக்குள் ஒரு மெல்லிய புன்னகையை வரவைத்தது.நாஞ்சில் நாடன்,ஜெயமோகன் இருவரிடமும் தெறிக்கும் வழக்கிலிருந்து இது வித்தியாசமானதுதான்.அடுத்து வேம்படிப் பள்ளியின் கதை.இதற்கிடையில் நான் எழுத மறந்த குறிப்பொன்று உண்டு. அது மருத்துவான் மழைக் காற்று.அஞ்சு வண்ணம் தெருவில் அது வீசக் காரணமே சமாதியில் உறங்கும் அந்தத் தாயின் கருணை என எண்ணுகின்றனர்.ஆனால் நானும் உணர்ந்திருக்கிறேன் காற்றுகூட ஊருக்கு ஊர் வேறுதான்.எங்கள் ஊரில், எனது அம்மாவின் ஊரில், நான் படித்த பள்ளியில் வீசிய காற்று எல்லாமே எத்தனை உணர்வுகளை தரக் கூடியவை.பெரு நகரங்களில் காற்றே இல்லை என்று சொல்லலாம்.சென்னையில் காற்று வீசும் இடங்களுண்டு.கொச்சியில் அப்படி இடங்கள் இருப்பதாக தெரியவில்லை.பெங்களூர் கடல் மட்டத்திலிருந்து மூவாயிரம் அடி உயரத்திலிருக்கிறது காற்றிருப்பதே பெரிய விஷயம்.

நபிகள் நாயகம்(ஸல்) பிறப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நூஹு நபி (நோவா) பிரளயக் காலத்தில் ஏற்றிச் சென்ற காக்கை உமிழ்ந்த வேப்பங்கொட்டையிலிருந்து ஒரு மரம் துளிர்க்கிறது. எப்போது? ஆலிப்புலவர் உறக்கமற்று கிடக்கிறார் ஒரு கோடை இரவில் ஒரே புழுக்கம்.இப்படியும் அப்படியும் புரண்டு பார்க்கிறார் தூக்கம் வந்தபாடில்லை.எழுந்து காத்தாட நடந்து போய் ஓடைக்கருகில் குளிர்ச்சியாக இருக்க நின்று கொண்டிருக்கிறார்,முழு நிலவில் தொப்பியும்,முக்காடும் அணிந்து மாரியம்மன் கோயிலில் புராணக்கதைகளை கேட்டுவிட்டு இஸ்லாமியர்கள் சாரை சாரையாக வருகிறார்கள்.வருந்திய புலவர் புராணம் படைக்க “சின்ன மக்கம்” என அழைக்கப்படும் காயல்பட்டிணத்திற்கு செல்கிறார்.

-தொடரும்

May 13, 2012

அஞ்சுவண்ணம் தெரு – 2

Filed under: வாசிப்பு — கண்ணன் பெருமாள் @ 3:30 pm

ரசூலின் இந்த கவிதை கவித்துவத்தின் பேரெழுச்சியை தருவதில்லை மாறாக இரண்டாயிரம் வருடத்திற்கு மேற்பட்ட மரபின் மீது, விழுமியத்தின் மீது , பண்பாட்டின் மீது ஒரு கேள்வியை எழுப்புகிறது.ஒரு இலட்சம் அருளாளர்கள்,இறைத்த தூதர்கள் உருவாகி வந்த வரலாற்றின்,பண்பாட்டின் ஒரு புள்ளியிலும் இந்த கேள்வி எழவில்லையா? இன்றும் இது செல்ல மகளின் கேள்வி மட்டும்தானா?.இன்னும் இது போன்று ஆயிரமாயிரம் கேள்விகளை இன்றைய உலகின் அளவீடுகளைக் கொண்டு நேற்றைய வரலாற்றின் மீது, வாழ்வின் மீது ,பண்பாட்டின் மீது எழுப்பலாம்.ஒரு நதியின் பாதையை,மலையின் உயரத்தை,காற்றின் வேகத்தை எப்படி தீர்மானிக்க முடியாதோ அப்படியே வரலாற்றின் போக்கையும் வரையறுக்கமுடியாது.ஆயிரமாயிரம் காரணங்களோடு அது நிகழ்கிறது ஒட்டுமொத்த மானுடத்தின் நல்லெண்ணங் கொண்டும் அதை நிறுத்தவோ,திசை திருப்பவோ முடியாது.

Photo Credit: Arnau M. Bertran

“அஞ்சுவண்ணம்” என்பது சோழ,பாண்டிய நாட்டிலிருந்து சேர நாட்டு அரசனால் வரவழைக்கப்பட்டு குடியமர்த்தப் பட்ட ஐந்து நெசவாளர் குடும்பத்தால் உருவாக்கப்பட்ட வணிக குழுவின் பெயர். அதுவே ஆதி தெருவின் பெயராகிறது.அந்த ஐவர் குடும்பத்தில் வந்த பாவா பக்கீர் சாகிப், வாப்பாவிடம் ஆதி தெருவின் வரலாற்றை சொல்கிறார். தெருவின் வரலாற்றை அறிந்த ஒரே தொண்டுக்கிழவன்.தாத்தா(அக்கா) வாடகை வீட்டிலிருப்பதாக வாப்பாவிடம் சொல்லி சொல்லி கை பிசைகிறாள்,வேம்படிப்பள்ளிக்கு அடுத்த தெருவான அஞ்சு வண்ணம் தெருவில் இருக்கும் “நபீசா மன்ஸிலை” நாடாரிடம் விலை பேசி வாங்குகிறார் வாப்பா.விருத்திகெட்ட வீடு என்று பலர் எடுத்து சொல்லியும் அதை வாங்கி விடுகிறார்.அங்கிருந்து கதைகள் கிளைக்கிறது.ஷேக் மதர் சாஹிப்பின் நபீஸா மன்ஸிளுக்கு “தாருல் சஹினா” என்று தாத்தாவின் இளைய மகள் பெயர் சூட்டப் படுகிறது.அஞ்சு வண்ணம் தெருவின் மத்தியில் தாயும்மாவின் சமாதி  கொண்ட மம்மதுப்பாவினால் கட்டப்பட்ட தைக்காப் பள்ளி இருக்கிறது. அதையொட்டிய மூத்திரப் புரையை அடுத்து “தாருல் சஹினா”.தெருவில் தைக்காப் பள்ளியை விட உயரமான ஒரே கட்டிடம்.அதனாலேயே அது விருத்திகெட்டதென்று பேசப்படுகிறது.

தைக்காப்பள்ளியில் உறைந்த தாயும்மா யார் என்று பக்கீர் சாஹிப் சுருட்டு பிடித்தபடி சொல்லத் தொடங்குவதிலிருந்து மீரான் தொடர்ந்து கதைகளை நெய்தபடியே இருக்கிறார்.இங்கும் அங்குமாக தெருவின் வரலாறு, வாழ்ந்த வாழ்கின்ற மனிதர்களை பற்றிய சித்திரங்களென கடைசி வரையிலும் கதைகள்,வரலாறுகள்,தொன்மங்கள்,நம்பிக்கைகள் வந்துகொண்டே இருக்கின்றன.இஸ்லாமிய சமுதாயத்தில் புழங்கும் பல சொற்கள் எனக்கு புதியது. பள்ளி,தர்கா,சூபி,முல்லா,காபிர்,ஜிகாத்,நிக்கா,மவுத்,ஜமாத்,ஹஜ்,ஹதிஸ்,இமாம்,ஈமான் போன்று சில வார்த்தைகள் எனக்கு தெரியும்.”அஞ்ஞானி” பஷீர் எழுதிய “பாத்துமாவின் ஆடு” குளச்சல் முஹம்மது யுசுப்பால் மொழிபெயர்க்கப்பட்டு என்னிடம் வந்த போது “காக்காவை” பற்றி தெரிந்து கொண்டேன்.இப்போது தாத்தா,சுப்ஹு,இஷா,அஸர்,மஃரிப்,ஜின்,அவுலியா,ஷிர்க்,நஜிஸ்,ஒளு,ஒஜீபனம்,கிஸ்ஸா,தல்கீன்,தவ்ஹீத்,மலக்கு.இன்று எனது குலமரபுகளின் வழிப்பட்ட இறைவழிபாடு,அதன் நெறிமுறைகள் என எதுவும் எனக்கு தெரியாது.கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடிபெயரும் ஒவ்வொரு குடும்பமும் விட்டுச் செல்வது ஒரு நிலத்தின் பண்பாட்டையும்,மரபைம்.மாறாக அவர்கள் பெற்றுக்கொள்வது எங்கெங்குமிருக்கும் ஒரு பெரு மரபை அல்லது நிரந்தரமாக மரபுகளற்று போவதை.

தாயும்மா எட்டு ஆண்பிள்ளைகளுக்கு பின் பிறந்த ஒரே பெண், பேரழகி. சுசீந்திரம் பெருமாளை வழிபடச் செல்லும் திருமேனியை காண ஒளிந்திருக்கிறாள்,நாடாளும் மன்னன் பார்வையில் படுகிறாள் அந்த அழகி. அவன் ஆளனுப்புகிறான் எட்டு ஆண் பிள்ளைகளை விடியுமுன் கண்காணா தேசத்திற்கு தப்பியோட சொல்லிவிட்டு,தன் ஒரே மகளை அரசனில்லாத தேசத்திற்கு ஈமானுள்ள முஸ்லீமாக குழி தோண்டி புதைத்து அனுப்பி வைக்கிறார் தந்தை.கி.ரா எழுதிய கோபல்ல கிராமம் இதே போன்றதொரு சித்திரத்தை தருகிறது. இஸ்லாமிய மன்னனுக்கு அஞ்சி பெண் பிள்ளைகளோடு நூற்றுக்கணக்கான மைல்கள் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்கு மக்கள் அவர்கள் கட்டியெழுப்பும் ஒரு கிராமம்.கடைசியில் நாடோடிகளாவதும்,ஒளிந்து வாழ்வதும்,உயிருடன் புதைக்கப் படுவதும் ஈமானுள்ளவர்களே,மரபின் மீது உயிரை வைத்திருப்பவர்களே,எல்லோரும் மனிதர்களே.

தைக்காப் பள்ளிக்கு பின்புறம் ஒரு தெரு அடுத்திருப்பது வேம்படித் தெரு.மெஹ்ராஜ் மாலையை ஆலிப் புலவர் அரங்கேற்றியது அங்குதான்.வாப்பா அங்குதான் தொழ செல்வது வழக்கம்.ஆலிப் புலவர் வம்சாவளி வந்த குவாஜா அப்துல் லத்திப் ஹஜ்ரத் அதன் இமாம்.புலவரின் வாரிசென்பதால் தமிழ் புலமையோடு பேசுவதிலும் கதை சொல்வதிலும் தேர்ந்தவராயிருக்கிறார்.தைக்கப் பள்ளியில் பாங்கு சொல்லும் தொண்டுக் கிழவன் மைதீன் பிச்சை மோதீன்.குழாயடிச் சண்டையில் கெட்டிக்காரியான மம்மதும்மாவும் அஞ்சு வண்ணம் தெருவின் ஒரு பிரஜைதான்.வீடற்றவள் தாத்தா “நஃபீஸா மன்சிலுக்கு” வருமுன் முன்வாசலில் வாடகையில்லாமல் குடியிருந்தவள்.இரவில் நடமாடும் ஜின்னுகளுடன் பேசி அஞ்சு வண்ணம் தெருவின் அத்தனை பேரின் ரகசியமும் அறிந்தவள். “தாருல் ஸஹினா” பெயர் மாற்றி தாத்தா குடியேறியது பிடிக்காவிட்டாலும் ரஹுப் பிறந்த போது  வீட்டிற்கு வந்து தாத்தாவிடம் நலம் விசாரிக்கிறாள்.தாத்தாவும் முறுக்கும் சுலைமானியும் கொடுத்து விருந்துபசரிக்கிறாள். இது போன்ற ஒரு காட்சியை பெரிய கெளடனும்,வாயாடி புட்டாவும் சம்ஸ்காராவில் நினைவூட்டினாலும்,அஞ்ஞானி பஷீரும்,மீரானும்,முத்து லிங்கமும் எனக்கு காட்டும் பண்பாட்டின் வேர்கள் மம்மதும்மா போன்றவர்களே.

-தொடரும்

May 12, 2012

அஞ்சு வண்ணம் தெரு

Filed under: வாசிப்பு — கண்ணன் பெருமாள் @ 4:20 am

இலக்கிய ஆக்கங்கள் பெரும்பாலான சமயங்களில் தொன்மைங்களையும் அமானுஷ்யங்களையும் நிகழ்காலத்தொடு இழையோட விட்டு கதையாடுகின்றன, அள்ளித் தீராத இந்த வாழ்வை வார்த்தைகளால் அளக்க முடியுமா? நாமறிந்த வாழ்க்கையே எத்தனை பிரம்மாண்டம்?, நாமறியாத வாழ்க்கை? இந்த பூமி?,பிரபஞ்சம்?,இன்னும் மனிதன் அறியாத என்னென்னவோ இருக்கலாம்தானே?.எத்தனை கோடி இன்பம் வைத்தாய்? என்ற பரவசம், இன்பமே கோடி எண்ணிலடங்காது,வாழ்விலடங்காது,சொல்லிலடங்காது.மலைக்காமல் எழுதுவதே எத்தனை பெரிய சாகசம்?இத்தனை பெரிய பிரம்மாண்டத்தை தொட்டுக்காட்டிவிட முயல்வதுதானா அத்தனை இலக்கியங்களும்,கலைகளும்?.பல்லூழிக்காலம் வாழ்ந்த வாழ்வை,அதன் பயனை,அதன் வழி திரண்ட ஞானத்தை சுருங்க சொல்வதா இந்த இலக்கியங்கள்? இத்தனை கலைகள்?.

ஆம். அனந்த கோடி வருடங்களாய் வாழ்ந்த வாழ்வின், வளர்ந்த பண்பாட்டின் ,செய்த தவத்தின் திரண்ட ஞானம்தான் நமது சமயங்கள், அதன் வேர்கள் பல்லாயிரம் இனக்குழுக்களின் கலை,இலக்கிய செயல்பாடுகள்தான்.இசையில்லாமல்,கவிதையில்லாமல்,கதையில்லாமல்,நாடகமில்லாமல்,ஓவியமில்லாமல்,சி்ற்பமில்லாமல் இதுவரை எந்த மதமும் உருவாகவில்லை. குறைந்தபட்சம் “சொல்” அல்லது “வார்த்தை”.இன்று பின்னோக்கிப் பார்க்கும் போது சென்ற பதிவில் எழுதியது போல எல்லா நீதிநூல்களும்,சாஸ்திரங்களும் வாழ்க்கை சிக்கலை குறைக்க என்ற ஒற்றை நோக்கத்தை ஏற்றிச் சொல்லி முன்னகர்ந்து விடலாம்.அவ்வளவுதானா?.”அஞ்சு வண்ணம் தெரு” ஒரு தெருவின் வரலாற்றை,வாழ்ந்த மனிதர்களின் கதையை, அதன் தொன்மங்களை,அதன் நிகழ்கால சிக்கல்களை, நிறைவாக அதன் வீழ்ச்சியை சொல்லும் நாவல்.

1997-ல் தோப்பில் முகம்மது மீரானுக்கு சாய்வு நாற்காலி என்னும் புதினத்திற்காக சாஹித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது, நாளிதழில் வாசித்திருந்தேன். “ஒரு கடலோர கிராமத்தின் கதை” என்ற நாவலை விலைக்கு வாங்கிவிட்டேன்.பிறகுதான் தெரிந்தது அவருக்கு “தேங்காப்பட்டினம்” ஊரென்று,நான் பாளையங்கோட்டை மளிகை கடைக்காரர் கதை எழுதி விருது வாங்கிவிட்டார்,பக்கத்து ஊர்க்காரனான நான் அவர் புத்தகங்களை வாங்கி வாசிப்பது மேலான கடமை என நினைத்தேன்.ஞாபகப் பிழை ஐயா என்ன செய்வது?.பத்து பக்கங்கள் கூட என்னால் வாசிக்க முடியவில்லை,பிராப்தம்!. என் பெரியம்மா மகன் , வாசித்து விட்டு பேய்க்கதை என்று சொன்னான்.எனக்கு துக்கம் தாளவில்லை என் தமிழறிவை எண்ணி அன்று தாங்கொணா துயரடைந்தேன். ஆனால் முயற்சி செய்தேனில்லை புத்தகம் பரணேறி விட்டது.(மன்னிக்கவும் எங்கள் வீட்டில் உண்மையில் பரண் எதுவுமில்லை “ஒரு கடலோர கிராமத்தின் கதை” கரை ஒதுங்கி விட்டது என்பதையே பண்டித தமிழில் எழுதியிருக்கிறேன்).அப்பொழுது எனக்கு இஸ்லாமிய கலாச்சாரத்தை எழுதும் படைப்பாளிகள் யாரும் அறிமுகமாயிருக்கவில்லை.ஏற்கனவே சொன்னது போல மேத்தா,அப்துல் ரஹ்மான் போக பாடப் புத்தகங்களிலிருந்து சீறாப் புராணம் எழுதிய உமறுப் புலவர்.

வகை தொகையில்லாமல் வாசிக்கும் நண்பர் வழியாக நான் அறிய வந்தது மைலாஞ்சி எழுதிய எச் ஜி ரசூலின் மறக்க முடியாத வரிகள்

வந்துதிக்காத ஓர் இனத்தின் நபி
=========================
பயானில் கேட்டது

திசையெங்கும் உலகை உய்விக்க வந்துதித்தது

ஒரு லட்சத்து இருபத்துநான்காயிரம்

நபிமார்களென்று.

திருகுரான் காட்டியது

கல்லடியும் சொல்லடியும் தாங்கி

வரலாறாய் மாறியது

இருபத்தைந்து நபிமார் என்று.

ஆதம் நபி…அய்யூப்நபி..

………… ………

ஈசாநபி…மூசாநபி…

இறுதியாய் வந்துதித்த

அண்ணல் முகமது நபி…

சொல்லிக் கொண்டிருந்த போதே

செல்லமகள் கேட்டாள்…

இத்தனை இத்தனை

ஆண் நபிகளுக்கு மத்தியில்

ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி..?

– தொடரும்

May 5, 2012

சம்ஸ்காரா

Filed under: வாசிப்பு — கண்ணன் பெருமாள் @ 3:20 pm

அறுபதுகளில் U.R.ஆனந்தமூர்த்தி எழுதி வெளி வந்த நாவல் சம்ஸ்காரா, அடையாளம் பதிப்பகத்தால் T.S சதாசிவம் மொழிபெயர்ப்பில் தமிழில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.சனாதன தர்மத்தின் மீது ப்ரானேஸாச்சார்யா என்ற வைதீக மனதிற்கு உள்ள பிடிவாதமும் அதன் தளர்வும் என்று இந்நாவலை வாசிக்கலாம்.சம்ஸ்காரா என்றால் பிராமணர்கள் வாழ்வில் ஜனனம்,மரணம்,திருமணம்,கருவுறுதல்,கல்வி என பல்வேறு கட்டங்களில் கடைபிடிக்கும் சடங்குகள் என்றும் ஒரு பொருளிருக்கிறது.குறியீடுகளால் ஆன நாவல் என்று சொல்கிறார்கள், யோசிக்கும்போது ப்ரானேஸாச்சார்யா சனாதனத்தில் தோய்ந்த மனம் அவர் வாழ்வே அதற்கு சாட்சியாக இருக்கிறது. துர்வாசபுரத்து மக்கள் அவரை தங்களை வழிநடத்தும் ஒளியாக எண்ணுகிறார்கள். பாகீரதி என்ற அவரது மனைவி சநாதனத்தின் ஆன்மா என்று கொள்ளலாம் அவள் விவாகத்திற்கு முன்பே நோயுற்றவள் பலவீனமானவள் துறவியாகும் எண்ணத்தை கைவிட்டு ப்ரானேஸாச்சார்யா அவளை மணக்கிறார். தன தவ வாழ்விற்கான வேள்வித்தீ தன் மனைவி என எண்ணுகிறார்.நாரனப்பா சனாதன தர்மத்திலிருந்து தவறிய மனதின் குறியீடு,சந்திரி என்ற தாசி குல பேரழகி பாலின்பம்,ஒழுக்கக்கேடு போன்றவற்றின் குறியீடு எந்தவொரு குற்றவுணர்ச்சியுமில்லாமல் வாழ்வை வாழ்கின்ற மனிதர்களின் குறியீடு. வாயாடி புட்டா ஒரு பூக்கட்டி பிராமணன் ஸ்மார்தர்களுக்கும்,மாத்வர்களுக்கும் கீழ் எந்தவொரு சனாதன பிடிப்புமின்றி இருக்கும் மக்களின் குறியீடு.பிளேக் நோய் அதாவது எலிகளின் வழி பரவும் கொள்ளை நோய் லௌகீக வாழ்வில் எதிர்கொள்ளும் ஆசைகள்,சவால்கள்,துவேஷங்கள்.. இப்படித்தான் தோன்றுகிறது.

courtesy:himalayanacademy

ப்ரானேஸாச்சார்யாவின் முதல் சிக்கல் நாரனப்பாவின் மரணத்தில் ஆரம்பிக்கிறது.பல வருடங்களாக தர்மமின்றி அலைந்த  மனிதன் இறந்தால் அவனை எப்படி எரிப்பது என்ன பரிகாரம்.உற்றார் உறவினர்கள் என அவன் உயிருள்ளவரை யாரையும் நெருங்கவிடவில்லை.ஈமச் சடங்குகளை செய்ய யாரும் முன்வரவில்லை.சரி ஊர் கூடி செய்தால் செலவு யார் செய்வது எனும்போது சந்திரி தன நகைகளை கழற்றி வைக்கிறாள்.ப்ரானேஸாச்சார்யா விடிய விடிய தர்ம சாஸ்திரங்களை புரட்டுகிறார்.உயிருடன் இருந்த நாரணப்பா நாவலில் எங்குமே வரவில்லை அவன் நினைவுகளின் வழியாக நாவலில் மீட்டெடுக்கபடுகிறான்.அக்கிரகாரத்துக்காரர்களுக்கு நாரனப்பா இருந்தும் கெடுத்தவன் இறந்தும் கெடுத்தவன்.இது முற்றிலும் புறச் சிக்கல் அது அகச் சிக்கலாக ஆகும் தருணம்தான் ஆச்சர்யாவின் வாழ்வு திசை திரும்புகிறது.முழுவதும் தற்செயலான கட்டத்தில் ஆச்சார்யா சந்திரி இருவரும் நிதானம் இல்லாமல் பாலுறவு கொள்கின்றனர்.சந்திரி தன் தர்மம் அப்பேற்பட்ட மாமனிதரால் புண்ணியம் அடைந்தததென்று எண்ணுகிறாள்.அவள் வருத்தம் என்பதை சிறிதும் அறியாதவள்.அவள் செய்த எல்லாமே அவள் அறிந்த குல தர்மம்.இன்பத்தை அள்ளி மனிதர்களுக்கு வழங்குவது. ஆனால் ஆச்சார்யா பெருங்குழப்பத்துக்கு ஆளாகிறார்.25 வருட தவம் சில நொடிகளில் தூக்கியெறியப்பட்டுவிட்டது.வீடு திரும்பினால் தன் பாரியாள் பெருங்குரலெடுத்து ஓலமிட்டபடி மரணிக்கிறாள்.

மனித அக ஓட்டங்களையே அதிகம் பேசுவதால் வாசிப்புக்கு சற்று தொய்வாக சில நேரம் தோன்றுகிறது.மனைவி இறந்த பிறகு ஆச்சார்யா கால் போன போக்கில் போகிறார் போகும்போது யோசிக்கிறார் நாரணப்பா அவருக்கு விட்ட சவாலில் தான் தோற்றுவிட்டதை உணர்கிறார்.பால்ய நண்பன் மஹ பாலனை நினைத்துப் பார்க்கிறார்.இடையில் புதிர் புட்டாவை சந்திக்கிறார்.ஆச்சார்யா என்னும் தன் பாரம் தலை விட்டு நீங்கிய நிம்மதி உணர்கிறார் பின்பு தான் அடையாள மற்றவனாகிவிட வேண்டும் சந்திரியோடு வாழ்வது என குந்தாபுரம் போகத் தலைப்படுகிறார்.அதற்கு முன் தன்னவர்களிடம் தன் நெறி தப்பியதையும் சொல்லி நாரணப்பாவின் சவத்தை தானே எரித்து விடுவாதகவும் சொல்ல கிளம்புவதுடன் நாவல் நிறைவுறுகிறது.இடையில் நாரணப்பாவின் சவத்தை முசலமான்களின் உதவியுடன் சந்திரி எரித்துவிடுகிறாள் இதையறியாமல் பரிகாரம் தேடி பிராமணர்கள் மைல்கணக்கில் நடக்கின்றனர்.எலிகள செத்து விழுவதும், கழுகுகள் அலைவதும் மருட்டவும் பெண்கள் பிள்ளைகளுடன் தாய் வீடு செல்கின்றனர்.பிளேக் தாக்கி தசாச்சார்யான் இறந்து போகிறான்.மேலும் சிலர் இறக்கிறார்கள்.பாரிஜாதபுரத்து மஞ்சய்யா தடுப்பூசி போடும் மருத்துவர்களை ஏற்பாடு செய்கிறான்.

மரணம் நாரணப்பா என்ற தன் கணவனை சவமாக சுருக்கி விட்டதென்று துயற்படுகிறாள் சந்திரி. ஆனால் அக்கிரகாரத்தில் அவன் பிணம் ஒரு சனாதன சிக்கலாக ஆகி அது அங்கிருக்கும் அனைவைரையும் துன்பத்திலாழ்த்துகிறது.சிவமொகிக்கு போன நாரனப்பா பிளேக்கோடு திரும்பி வந்து இறந்து போகிறான்.நாரனப்பா சனாதனத்துக்கு மாற்றான மரபை முன்வைக்கவில்லை அவன் முன்வைப்பது சற்றும் குறுகுறுப்பில்லாமல் சந்திரியைப் போல வாழ்வதை மட்டுமே.வாழ்வின் சிக்கல்களை குறைக்கவே மனிதன் எண்ணிலடங்காமல் தர்மசாஸ்திரங்களையும்,நீதிநூல்களையும் வகுத்து வைத்திருக்கிறான்.சில புறவாழ்வில் கட்டுப்பாடுகளை கோருபவை,சில அக வாழ்வில் ஒழுங்கை வேண்டுபவை.சில கட்டுப்பாடுகள் காலவோட்டத்தில் பொருளற்றுப்போன பின்பும் பேணப்படுகின்றன.ஒரு நீதி,ஒரு தர்மம் அநீதிக்கு காரணமானால் அது பொருளற்ற சடங்காகிவிடுகிறது, நீதி எந்திரமாகிவிடுகிறது .அநீதியை வரையறுப்பதுதான் மாற்று அறம்,மாற்று மரபு.அதை நோக்கிய விவாதத்தை உருவாக்குவதுதான் இலக்கியம்.தன் சிறு கிராமத்தில் பிளேக் நோய் வந்த போது சேரிக்குள் செல்ல உயர்சாதி மருத்துவர்கள் மறுத்ததால் சேரி மக்கள் இறந்துபோன சம்பவமே இந்த நாவலாக உருவெடுத்ததென்று ஆனந்தமூர்த்தி சொல்கிறார்.

இன்று இந்த நாவலின் தளம் சற்று வீர்யம் குறைந்ததாக இருந்தாலும் தனி மனித ஒழுங்கிலும் திரளான மக்களுக்கான சட்டம் மற்றும் கோட்பாடுகளிலும் அதன் கேள்விகள் முக்கியமானவை.

April 28, 2012

பேய்க்கரும்பு

Filed under: வாசிப்பு — கண்ணன் பெருமாள் @ 6:58 pm

பாதசாரியின் “கட்டற்ற உரைகள்” அடங்கிய தொகுப்பு பேய்க்கரும்பு, இணையத்தில் கோபி ராமமூர்த்தியின் பதிவை வாசித்து மறந்துவிட்டேன் ஆனால் பாதசாரி என்ற பெயர் எனக்கு ஏனோ பிடித்துவிட்டது. புத்தகக்கடையில் பார்த்ததும் எடுத்துவிட்டேன்.கொஞ்சம் புரட்டிப் பார்த்து,என்ன பதிப்பகம் முன்னரையில் யார் என்ன எழுதியிருக்கிறார்?, உள்ளே ஏதாவதொரு பக்கத்தை புரட்டி தமிழில்தான் எழுதியிருக்கிறாரா?(கண்டிப்பாக விலையை பார்ப்பேன்).என வழக்கமாக வாங்கும் படலம் நிகழும்.அது இந்தமுறை தவறிவிட்டது.

பேய்க்கரும்பு என்ற தலைப்பே வசீகரமாயிருந்தது, தலைப்புகள் அமைவது மனிதன் செய்யும் தவம் ,உள்ளடக்கம் உள்பட.நாஞ்சில் நாடன் தலைப்புகள் அவ்வளவு தமிழ் எட்டுத் திக்கும் மத யானை,என்பிலதனை வெயில் காயும், சூடிய பூ சூடற்க,நதியின் பிழையன்று நறும்புனலின்மை,மாமிசப்படைப்பு,பேய்க்கொட்டு,தீதும் நன்றும்,நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று..நானும் சின்னாட்கள் முயல்வதுண்டு. எதுவும் அமையாது, தவக்குறை என்செய்வேன்? சிறு புத்தகம் என்பது வாசிப்பு சௌகர்யம்,பேருந்தில்,பேருந்து நிலையத்தில் என எங்கும் நின்று கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டு இல்லை கட்டிலில் மல்லாக்க படுத்துக் கொண்டு எப்படி வாகாக இருக்கிறதோ அப்படியே வாசிக்கலாம்.காவல் கோட்டத்தோடு மல்லாக்க படுத்தால் மாரடைப்புச் சாத்தியங்களுண்டு,கவனம்.

பேய்க்கரும்பு என்றால் என்ன? நேரமில்லை ,கரும்பு என்றால் நினைவுக்கு வழக்கமாக  வருவது கரு நீல நிறத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கிடைக்கும் கரும்புதான், அதுதான் வந்தது.கோபி ராமமூர்த்திக்கு பட்டினத்தார் ஞாபகம் வந்திருக்கிறார்,உடனே எனக்கு “ஞானம் பிறந்த கதை” அட்டைப்படம் ஞாபகம் வந்தது.பட்டினத்தார் கையில் கரும்பு எப்படி வந்ததென்பது தனிக்கதை, ஆனால் “கடிக்கின்ற பக்கமெல்லாம் இனிக்கும் பேய்க்கரும்பு நீயெனக்கு” என கவியொருவன் உருகியிருந்தான். ரஸ்தாளி கரும்பு ஓன்று இருப்பதாக தெரியும் அது பச்சையா இல்லை கரு நீலமா? ரஸ்தாளி வாழைப் பழம் மஞ்சள் நிறம் கரும்பு எப்படி பச்சையாகும்? பெயரில் என்ன இருக்கிறது என்று விட முடியவில்லை.கடித்த இடமெல்லாம் இனித்தால் அதற்கு பேய்க்கரும்பென்ற பெயர் பொருத்தமானதுதான்,ஆனால் புத்தகம் பேய்க்கரும்பில்லை, ஊரில் “ஒதைப்பழம்” என்பார்கள் புளியங்காயுமில்லாமல் பழமுமில்லாமல் இருப்பதை அப்படியிருந்தது.மன நிழல் என தமிழினி இதழில் வெளி வந்த தன்னுடைய உதிரி உணர்வுகள் இந்த புத்தகமென்கிறார் பாதசாரி.

கரும்பு தூரில் இனிக்கும் உங்கள் ஊரில் “வேராக” இருக்கலாம்.நுனியில் கசக்கும்.பகிர்ந்து கொள்வது பாக்கியம் என ஆரம்பித்து Love possesses not nor will it be possessed,for love is sufficient unto love. என கிப்ரானில் முடிக்கிறார்.உண்மைதான் போலும், இனிப்பதே கசக்கும். அங்கங்கே சில இடங்களில் நெகிழ்வான உணர்வுகளை உதிர்த்திருக்கிறார்.பால்ய கால நண்பன் கவி.சுகுமாரன், இப்போது நாஞ்சில் நாடன்,தேவ தேவன், செல்வ புவியரசன்,  ராஜசுந்தரராஜன், க.மோகனரங்கன் என பாக்யவானாக இருக்கிறார் பாதசாரி. தன்னை கவி என்று சொல்லிகொள்வதால்  கவிதைகள் வரும் எனக் காத்திருந்தேன்.வரவேயில்லை.சுய எள்ளல் நிரம்பி வழிகிறது. இது பொது வழி அல்ல- “உதிரிப்பூக்கள்” நன்றாக இருந்தது.இனி வரும் காலங்களில் இது போன்ற புத்தகமல்லாத புத்தகங்கள் நிறைய வரலாம்.எதையும் கட்டுரையாகாமல் கவிதையாக்காமல் புனைவாக்காமல் உதிரிகளாக உதிர்க்கப்படும் உணர்வுகளின் தொகுப்பு.அதற்கான தேவை இருக்கிறதென்றே நினைக்கிறேன். உலகமே உள்ளங்கைக்குள் வந்து விட்டது ஆனால் மனிதன் உலகத்திற்கு வெளியே நிற்கிறான்.

இதை புத்தகமாக சிபாரிசு செய்ய முடியாது இணைய வெளியில் வரும் சற்றே பெரிய ட்விட்டர்-களை வாசித்த உணர்வே வருகிறது. பரவாயில்லை என்றால் வாசியுங்கள்.அம்பாரமாக குவிந்து கிடக்கும் சொற்களை கொண்டு செல்பேசி,நட்பு,புகைப்பழக்கம்,பெண்மை,தீண்டாமை,நகரம், காதல், சுற்றுச் சூழல் என அவருக்குள் இருக்கும் சொந்தப்பேயை ஆட விட்டிருக்கிறார்.

April 21, 2012

அ.முத்துலிங்கம்

Filed under: Uncategorized — கண்ணன் பெருமாள் @ 4:38 pm

சில நாட்களாக வாசித்த புத்தகங்கள் தந்த உற்சாகத்தில்(!) இன்று எழுத உட்கார்ந்தேன்.கல்லுரி படிப்பு முடிந்த சமயத்தில் உயிர்மை ,காலச்சுவடு போன்ற இதழ்களை வாசிக்க தொடங்கியிருந்தேன். என்னால் பிரவேசிக்க முடியாமல் போன பல கட்டுரைகள், கதைகள் ,கவிதைகள் அந்த இதழ்களில் வெளி வந்தன. அவைகளை வாசிப்பது ஒரு மோஸ்தர் என்றும் சொல்ல முடியாது. இருந்தாலும் உழன்று கொண்டிருந்தேன். நன்பர் ஒருவர் சிவசங்கரி,லட்சுமி,ரமணி சந்திரன், அனுராதா ரமணன், காண்டேகர், என்டமுறி விரேந்த்திரநாத்,பாலகுமாரன்,சாண்டில்யன்,ஜானகிராமன்.. என்று வகை தொகையில்லாமல் வாசித்து தள்ளினார். வைரமுத்து மேத்தா அப்துல்ரகுமான் இவர்கள்தான் கவிஞர்கள்.அவ்வப்போது வண்ணதாசனும் வந்துபோவார்.எனக்கு யாரை வாசிக்க வேண்டுமென்கிற விவரம் கிடையாது.இலக்கியமென்றாலே அது சங்க இலக்கியம் மட்டுமே என எண்ணி வந்த காலம். எனக்கு ஆழ்ந்த வாசிப்பு கிடையாது ,அவிழ்த்து விடப்பட்ட கன்று போல இலக்கில்லாமல் குதித்து ஓடும் மனம்.புத்தகங்களின் மீதான இந்த கிளர்ச்சி அடங்க வெகுநாட்களாகியது.இன்று உணர்கிறேன் நான் புத்தங்களை துய்ப்பதாக, ஒரு பக்கம் இது அதிர்ச்சியாக இருந்தாலும் அதுவே உண்மை. இதை உணர நான் வாசித்த பக்கங்கள் அனேகம்.

நான் உயிர்மையில் வாசித்த ஒரு சிறுகதை என்னை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.என்னை புன்னகைக்க வைத்தது,எழுதியவர் யார் என்று பார்க்க வைத்தது,எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு அந்த கதை புரிந்து விட்டது.எத்தனை ஆச்சரியம் நாஞ்சில் நாடனின் (பள்ளி முடிக்கும் வரை நாஞ்சில் மனோகரன்,நாஞ்சில் சம்பத் இவர்களை போல நாடன் இவர் என எண்ணியிருந்தேன்) ஐந்தில் நான்கு, அழகிரி சாமியின் ராஜா வந்திருக்கிறார்,தி.ஜா-வின் முள்முடி என இன்னும் சில கதைகள் பள்ளியில் துணைப்பாட நூலில் தெரிந்து கொண்டேனே தவிர தேடி வாசிக்கவில்லை.அவைகளும் தமிழ் இரண்டாம் தாளில் கேட்கப்படும் திறனாய்வு(!) கட்டுரைகளுக்காக கைடில் கொஞ்சம் புத்தகத்தில் கொஞ்சம் என பிய்த்து பிய்த்து வாசித்தது. சிறுகதை வடிவ போதம் சிறுதும் பிடிபடவில்லை, புதுமைப்பித்தனின் பிரம்மராக்ஷசன் அந்தக்கால எழுத்து என புறங்கையால் ஒதுக்கினேன்.தினமலர்-வாரமலரில் எழுதிவந்த தாமரை செந்தூர்பாண்டியின் கதையும் புரியவில்லை. அப்பேற்பட்ட எனக்கு ஒரு சிறுகதை புரிந்ததென்றால்?! கதை எழுதியவர் அ.முத்துலிங்கம்.

நன்றி:திண்ணை.காம்

எனக்கு மகிழ்ச்சி அடைபடவில்லை. யார் இந்த முத்துலிங்கம் பல நாடுகளின் மக்கள் வாழ்வை, பண்பாட்டை எழுதுகிறாரே எப்படி? எழுத்தாளர்தான் என்றால் புத்தகங்கள் வழியே ஒரு தேசத்தின் முகத்தையும் அகத்தையும் எப்படி  உள்வாங்கி எழுதியிருப்பார்? திரைப்பட பாடலாசிரியர் முத்துலிங்கமா? கேள்விகள் மண்டையை குடைந்தன.யாரிடம் கேட்பது தமிழ் நாட்டில் ? வாய்ப்புள்ளபோது தெரிந்து கொள்ளலாமென விட்டுவிட்டேன். சில மாதங்களுக்கு முன் அங்கே இப்ப என்ன நேரம் ? வாசித்தேன், நேற்று “மகாராஜாவின் ரயில் வண்டி” வாசித்தேன் அடுத்து அவரது சிறுகதைகளின் தொகுப்பை வாசிக்கலாமேன்றிருக்கிறேன்.காலையில் தொடங்கினேன், சமர்ப்பணத்தில் ஆப்பிரிக்க காட்டில் இவரின் வேட்டைக்கார நண்பரால் சுட்டு வீழ்த்தப்பட்ட காகத்திற்கு நூலை  காணிக்கையாகியுள்ளார்.மூடி வைத்துவிட்டேன். ரெண்டு வார்த்தையாவது அவரைப்பற்றி எழுதி விடவேண்டும் என்று எழுதுகிறேன்.

மயக்க மருந்தில்லாமல் அறுவை சிகிச்சை செய்வது போல இருக்கிறது பல இடங்கள். வறுமையும் இயலாமையும் ஏக்கமும் அவதியும் அபத்தமும் கதைகளில் விரவிகிடக்கின்றன.மெல்லிய அங்கதம் கதையெங்கிலும் வழிந்தோடுகிறது.வாழ்வில் நிகழ்வுகள் புனைவைக் காட்டிலும் நம்பகத்தன்மையற்றிருக்கும் விசித்திரத்தை உணர்த்துகிறார். வீட்டில் கோழிக்குழம்பு வைக்க கோழியின் கழுத்து திருகப்படுவதை என் அண்ணன் மகள் வேணி பார்த்துக்கொண்டிருப்பாள், அவள் நேரடி பார்க்கும் அதிகபட்ச வன்முறை அதுவாக இருக்கும்,அதோடு கோயில் திருவிழாக்களில் கழுத்து துண்டிக்கப்படும் ஆடுகள் எனக்கான அதிகபட்ச வன்முறை.பொழுது போக்காக சுடப்பட்ட காகம் ,பெயரற்ற காகம் ,ஊரற்ற காகம்,உபயோகமற்ற காகம் அவருணர்ந்த வன்முறையின் ஒரு குறியீடு. ஒட்டு மொத்த வாழ்வின் மீது மரணத்தின் விமர்சனம்,எண்ணிலடங்காமல் கொலையுண்ட மனித தொகுப்பை சுருக்கி ஒற்றை குறியீடாக்கிய எளிய உயிரின் மூச்சடங்குதல்.

பாத்துமாவின் ஆடு படித்த பிறகு மகராஜாவின் ரயில் வண்டி ஒரே ஆசிரியரின் வேறு முகமெனப் பட்டது.முத்துலிங்கத்தின் கதையில் வரும் ருஷ்ய பறவையும் பாத்துமாவின் ஆடும் நம்மோடு இந்த உலகை பகிர்ந்து கொள்ளும் எளிய ஜீவன்கள். பல்லாயிரம்  மைல்கள் பறக்கும் பறவையும் கட்டிலில் கிடக்கும் உலகப்புகழ் பெற்ற மூக்கை விரும்பிச் சுவைக்கும் செம்பழுப்பு நிற ஆடும் முத்துலிங்கத்திற்கும்,பஷீருக்கும் ஒன்றுதான்.எனக்கு பஷீர் ஓர் எளிய வெள்ளாடு, முத்துலிங்கம் பல்லாயிரம் மைல்கள் துல்லியமாக பறக்கும் வலசை பறவை.

November 20, 2011

சிறகுகள்..

Filed under: Uncategorized — கண்ணன் பெருமாள் @ 4:58 pm
The Unflied

The Unflied - Courtesy:Twilight Fairy

எந்தப் பறவையையும்
அழைத்ததில்லை,
அருகே
அமர்ந்திருக்கச் சொன்னதில்லை,
கூட்டை விட்டு
வெளி இறக்கியதில்லை,
பறவைகள் பார்த்திருக்கிறேன்..
பறப்பதையும் பார்த்திருக்கிறேன்..
பறவைகள் வேறு,
நான் வேறு..
சிறகுகள்
வானை அறியும்,
மேகங்கள்
மெல்ல விலகும்,
வானும் அறியும்,
வானம் வேறு,
பறவைகள் வேறு..

November 3, 2011

பெருவழி

Filed under: Uncategorized — கண்ணன் பெருமாள் @ 12:56 am
The_Unfailing_Way

Courtesy:Vijay Shinde

ஐந்து இரவுகள் உறக்கமில்லை, ஐந்து பகல்கள் பசியில்லை,மனம் ஒரு நொடியும் நிலைகொள்ளவில்லை,இதையா நான் இத்தனை நாட்கள்,மாதங்கள் வருடங்களாய் தேடினேன்? இல்லை நான் தேடியது மகிழ்ச்சியை,அமைதியை, புன்னகையை,உறவுகளை,நட்பை … ஆம் ஆனால் வன்மமும்,வலியும்,ஏமாற்றமும்,துக்கமும்,புறக்கணிப்பும் என்னை துரத்துகின்றனவா? இல்லை என்னை விட்டு விலக முடியாத பெருங்காதலா என்மீது? கிடையாது, தேடும்போது இருக்கிற வேகமும்,விறைப்பும்தான்  எல்லாவற்றையும் கொண்டு வருகின்றன.கொடுப்பதில் இருக்கிற சுகம் கேட்பதில் இல்லை,தருவதில் இருக்கும் தாராளம் தரச்சொல்வதில் இல்லை.இன்றும் சொல்கிறேன் எனக்கு வேண்டியதெல்லாம் அன்பும் அமைதியும்தான் சில கணங்கள் என்றாலும் கூட வெறுப்பும் வன்மமும் ஏமாற்றமும் துக்கமும் எனக்கு கசப்பானவைகளாகின்றன,என்றுமே அன்பும்,அமைதியுமே என் இரு கண்களாக இருக்கட்டும்.அன்பே கண்கள்!அன்பே வழி!

Next Page »

Create a free website or blog at WordPress.com.