வலி தொடாத தூரத்தில்…

November 13, 2009

தாங்க முடியாத
பெருவலிகள்
வந்தபோது
கணத்தில்
மறுதலித்து விட்டேன்,
எதையும்
ஏற்றுக்கொள்ளவில்லை
பெரும் பாவனை
இதுதான்
“நான் வலி கடந்தவன்”
சொந்தமான வலி
தீண்ட எத்தனிக்கும்போது
எனக்கே
நான் யாரோ?
மரணம் தொட்டதில்லை
தோல்வி தொட்டதில்லை
காயம் தொட்டதில்லை
கண்ணீர் இரத்தம் பசி பயம்
எதுவும் தொட்டதில்லை
வலியை உணராத  
மிருகம்
வலியை அஞ்சும்
எதுவும் மிருகம்தான்..
இல்லை மனிதன்..
குரூபி கொடூரன்
கல்நெஞ்சக்காரன்
நீசன் ஈசன்
சண்டாளன்..
வலி தொடாத
தூரத்தில்
உளறல்கள்…


இரவோடு கலையும் கனவுகள்…

June 6, 2009

இரவின் மாயக் கதவுகளை
பிஞ்சு விரல்களால்
திறந்து கொள்கிறது
பெருந்திரளான கனவுகள்…

ஒவ்வொரு வாசலிலும்
கனவுத் தேவதைகள்
கடன் அரக்கர்கள்
கிழட்டு தந்திரங்கள்…

துயரத்தில் கறுத்த ஹிஜாப்பில்
படிந்திருந்தது பழைய கனவுகள்…

புதிய கனவுகள்
இதழ் குவித்து
புன்னகைச் சிகரத்தில்
அவளின் குழந்தையோடு…

கண்ணாம்பூச்சியாடும்
தூக்கத்தோடு
முதுமையின் புதைகுழிகளில்
காலவதியான கனவுகள்…

எல்லாக் கனவுகளையும்
உளவு பார்த்த காற்று,
யன்னல் கம்பிகளிடம்
இரகசியம் பேச,

மெல்லக் கலைகிறது
மற்றுமொரு இரவின் கனவு…


நிழல் பற்றியெரியும் நெருப்பு…

April 1, 2009

தீண்டாத விரல்களுக்கும்,
எதுவுமே  பேசாத
என் புகைந்து
சிவந்த இதழ்களுக்குமாய்,
நீ
மௌனப் புன்னகையோடும்,
வன்மம் தீர்க்கும்
உக்கிர பத்ரகாளியின்
மர்ம செந்நாக்கோடும்….

இருள் கரைந்து,
கொடுஞ் சாபங்கள் சூடி,
நீலி நீ
நெஞ்சில் எரிகிறாய்…
பாவ மண்டையோடுகள்
பதக்கம் போலவே
பழிகாரி
சுழற்றி சுழற்றி
நீயென்னை
ஓங்கி தரையிலெறிகிறாய்…

அகந்தை கொல்லும்
அகங்காரி நீ,
குளிர் நீரோடையில்
நிலா முகம் காணவே
நிகழ்ந்ததொரு
நீண்ட நிழல் வதம்…

நீரலைகளாய்…
நெளிந்து நெளிந்து..
உடைந்து உடைந்து..
இருளின் கரையேறும்
ஊமை நிழலின்
உயிர் கிழிந்த பிம்பங்கள்…

ஒருபோதும் இரங்காத
பயங்கரி  நீ,
ஊட்டு சோறும்,
எருமைக் கிடாவும்,
தலச்சம் பிள்ளை
மூளை மசையும்…
கேட்டு கேட்டு
நெஞ்சின் மீதேறி
ஆடுகிறாய்
ஊழித் தாண்டவம்…

என்
சிரம் கொய்து
சுடு இரத்தம்
புசிக்கும்
வெறித்த கண்களோடு
காத்திருக்கிறாய் காளி நீ…


இரகசியம் பேசு…

March 17, 2009

நீ  பேசவே..
பூ
நிலவு
இரவு
தென்றல்
குழந்தை பருவம்
காயம்
கண்ணீர்
தேவதைகள்
காதல்
கடல்
அலை
மழை
வானம்
ஓவியம்
எழுதி தீராத கவிதைகள்
தினமும்
கேட்கும் பாடல்
ரசித்து படித்த
புத்தகம்
………
பிரபஞ்ச ரகசியம்
புரியாமலே விரிகிறது
செங்குருதி
நிணம்
செங்காற்றென
அடங்கிகிடந்த உயிர்ப்பூ..


விடுபட்ட கவிதைகள்!!!

February 24, 2009

Love Never Ends
Love Never Ends

நீ
தொட்டுவிட்டால்,
உன்
அனிச்ச விரல்
பட்டுவிட்டால்,
பாவம் விலகுமடி,
ஜென்ம
சாபம் தீருமடி!

கட்டியணைத்துவிடு
என்
காயம் ஆற்றிவிடு!

கனவே
கண் வந்துவிடு,
என்
கண்ணீர் கொஞ்சம்
ருசித்துவிடு!

இதயம் திறந்துவிடு,
என்
இளமை கொன்றுவிடு!

கவிதை பாடிவிடு,
என்
காதல் ஏற்றுவிடு!

தோள் சேர்ந்துவிடு
என்
துயரம் தாங்கிவிடு!

இதழ் சேர்த்துவிடு
என்
இனிமை உறிஞ்சுவிடு!

கண் பார்த்துவிடு
என்
காதல்ஜோதி ஏற்றிவிடு!

நிலவே
கொஞ்சம் இறங்கிவிடு,
இந்த சூரியனை
மடியில் சுமந்துவிடு!


யாருடைய ஆறுதலும் எனக்கு ஏற்றதாக இல்லை…

September 11, 2008

காரணமில்லாமல் அழுது கொண்டிருக்கிறேன்.யாருக்காக?எதற்காக?எப்படி இது சாத்தியம்?.இப்படி அழுவதால் என்ன நிகழ்ந்துவிடும்?.என்  அழுகையின் ஊற்றுக்கண்ணை தேடி அலைகிறேன்.வீதிகளில் நள்ளிரவில் நடந்தது கொண்டிருக்கும்போது எனக்கு வெளியில் நிசப்தம்,உள்ளே ஓயாத கடலலை போல அந்த அழுகை.எனக்கு விவரம் தெரியாத பள்ளி பருவத்தில் அழுதிருக்கிறேன்.ஆசிரியர் எத்தனைதான் அடித்து துவைத்தாலும் அழவே,அழாதவர்களின்  மன அழுத்தத்தை கண்டு வியந்தாலும் அவர்களின் உணர்வுகளை ஒருபொழுதும் உள்வாங்கிக் கொண்டதில்லை.செய்த தவறுக்காக அழுகிறவர்கள்.தவறை முழுமையாக உணர்ந்த பிறகு அழுவதற்கான காரணங்களை தொலைத்துவிட்டவர்கள்.ஆண்கள் அழக்கூடாது என்ற கட்டுமானத்தில் தலைசாய்ந்தவர்கள்.அழுவது,புரிந்து கொள்வதாலா?இல்லை புரிய முடியாத காரணத்தினாலா?இயலாமை கூட அழ வைக்கும் ஒரு காரணிதான்.

தாங்க முடியாத உடல்வலியில் கூட அழமுடியாதவர்களை பார்த்திருக்கிறேன்.சமூகத்தின் மிகக்கடுமையான  கட்டமைப்புகளில் ஒன்று ஆண்பிள்ளைகள் அழக்கூடாது என்பதும்.ஏதாவது ஒரு சிறுவன் அழத்தொடங்கினால் அவன் காதுகளில் ஆறுதல் எதுவும் கேட்கும் முன் “டேய்,என்ன எப்ப பாத்தாலும் பொட்டபிள்ள மாதிரி அழுதுகிட்டு இருக்க?” என்ற திணிப்பு புகுந்துவிடும்.மிகச்சரியாக என் பதின் வயதுகளில் நான் அழுவதை நிறுத்திவிட்டிருந்தேன்.
வலி,இயலாமை, பயம்,மரணம்,இகழ்ச்சி, விமர்சனம்,ஏமாற்றம்,துரோகம்,பிரிவு,ஆனந்தம்..
இப்படி ஒரு நீண்ட பட்டியலுக்கு என் மனம் நெகிழாத நாட்கள்.எதையுமே செய்வதால் அதாவது வினையாற்றுவதன் மூலம் மட்டுமே கடக்க முடியும்.உணர்ச்சிவயப்படுவது ஒன்றிற்கும் உதவாது என்று முடிவெடுத்திருந்த நாட்கள்.அப்பொழுது படித்த ஈ.எம்.பார்ஸ்டேரின் கட்டுரை  புத்தகம் ஓன்று நினைவிலிருக்கிறது.நடந்த விபத்திற்காக அழுவது,பயப்படுவது இதை தவிர்த்துவிட்டு காயமடைந்தவர்களுக்கு உதவுவது,ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொண்டவனோடு சேர்ந்து அழுவதைவிட அவனுக்கு கைகொடுத்து தூக்கி விடுவது முக்கியமானதாகவே எனக்குப்பட்டது.

ஆனால் எல்லாவற்றையும் மீறி அழுத நாட்கள் இருந்தது.கையால் எண்ணிவிட முடியும்.நான் நேசித்தவர்கள் வேறு யாருமல்ல நண்பர்கள்தான் என் நட்பை அவமானப் படுத்திய நாட்களில் என்னை எவராலும் சமாதானப்படுத்த முடியவில்லை,யாருடைய ஆறுதலும் எனக்கு ஏற்றதாக இல்லை.என்னை திரும்ப திரும்ப அழ வைத்த ஒரே உறவு நட்பு மட்டுமே.என் அப்பா அம்மா மற்றும் உடன் பிறப்புகள் என்னை(அழுகையை) புரிந்து கொண்டவர்கள்.நான் கிட்டத்தட்ட தொலைத்துவிட்டிருந்த அழுகை மீண்டும் என் கண்களில் துளிர்த்துவிட்டது.ஆனால் எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்?.இந்த அழுகையில் கண்ணீர் இல்லை,ஒரு புரிதலை தொடர்ந்த சிறிய/பெரிய வலி.கண்களுக்கு வராத உணர்வுகளை காண்பதால் ஏற்படும் கசிவு.இதை அத்தனை எளிதில் நிறுத்திவிடும் சாத்தியமில்லை.அப்படியொரு எண்ணம் எனக்கில்லை.