நித்ய விளையாட்டு…

November 15, 2009

அணையாமல்
எரிகிறது
சுடலையின் தீ..
திசையெங்கும்
பரவுகிறது
வெறுமையின் உச்சம்..
என்றுந் தீராத
பரிதவிப்பின் விளையாட்டு..
அலையலையாய்
ஒற்றை மேளத்தின்
பிணந்தின்னும்
வேட்டைராகம்..
இசைஞர்களும்
கேட்டிராத
மோனக்குரலில்
அழைக்கிறாள்…
மோகனம் மோகனம்
மல்லிகை மல்லிகை..
கச்சை திறந்து
காட்டினாள்
கனன்றெரியும்
காலச் சக்கரங்களை…


தேன்சிட்டும், லெகான் கோழி குஞ்சுகளும்!!!

November 14, 2009

ஒரு அற்புதமான கதை இருந்தது.கதை இன்று அவ்வளவாக நினைவிலில்லை.எதிர்பாராமல் கிடைக்கும் ஒரு மந்திரக்கோலின் உதவியுடன் சிறுவன் ஒருவன் உருமாற்றம் கொள்கிறான்.எறும்பின் அளவை விட சிறியதாகிறான் பிறகு எல்லாமே பிரம்மாண்டமாயிருக்கிறது.ஒரு பூ,செடி இலை மனிதக் கால்கள் எல்லாமே இராட்சத வடிவில் பயமும் பிரமிப்பும் கலந்த மனோ பாவம் கொள்கிறான்.எல்லாக் குழந்தைக்களுமோ யதார்த்த உலகிலிருந்து விலகியே சிந்திக்கின்றன.யதார்த்தம் என்று சொல்வது மொண்ணையாக
செல்லும் வாழ்வைத்தான்.வளர்ந்த மனிதர்கள் அதிசயிப்பதில்லை.சிறுவயதில் ஒரு தேன்சிட்டை பார்க்கும்போது எத்தனை சந்தோசமாக இருந்திருக்கிறேன்.எங்கள் வீட்டில் என் அம்மா எப்போதும் எதாவது சில செடி கொடிகளை வளர்த்துக் கொண்டேயிருந்தால்.அவரைக்கொடியில் வயலெட் நிறப்பூக்கள் கொத்து கொத்தாய் பூத்து நிற்கும்.அவரையிலோ இல்லை முருங்கையில் வெளிறிய வெண்ணிறப் பூக்களிலோ  தினமும் வரும் தேன்சிட்டு.நான் என்றைக்குமே சந்தோசத்தில் கத்துவதோ ஊளையிடுவதோ இல்லை.அந்த தேன்சிட்டை எங்கள் சிறு தோட்டத்திற்கு வந்ததிலிருந்து போவது வரை பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறேன்.எத்தனை இலகுவான உடல் அதற்கு.பூவின் காம்பில் கூட நின்றுகொள்ளும்.மிக வேகமாக சிறகசைத்தபடி  பூவிற்கு அருகிலேயே நிற்கும் இல்லை மிதக்கும் எத்தனை அழகான உணர்வு,எத்தனை அற்புதம் ஒரு சின்ன உயிர் எத்தனை பெரிய சாகசம் செய்கிறது.பின்னாளில் ஹாய் மதனில் “தேன் சிட்டுதான்” மிக அதிகமான முறை இதய துடிப்பு கொண்ட உயிர் என தெரிந்து அதிசயித்தேன்.கிட்ட தட 600 துடிப்புகள் நிமிடத்திற்கு. பறவைகள் எல்லாமே அழகான அதிசயமான உயிர்கள்.பார்க்கும்போதெல்லாம் பரவசம் தருபவை.பறவை என்னும்போது பறக்க முடியாத கோழியின் நினைவு தவிர்க்க முடியாதது.கோழி மட்டுமல்ல ஆஸ்திரேலியாவில் இருக்கும் எமு,நெருப்புக் கோழி,பென்குயின் கூட பறக்க முடியாதவையே.நெருப்புக் கோழியை வண்டலூரில் ஆறாம் வகுப்பில் சுற்றுலாவிற்கு சென்றபோது பார்த்திருக்கிறேன்.ஆனால் கோழி எதற்காக பறக்கமுடியாமல் இருக்கிறது   என்பதற்கு ஒரு கதை சொல்லப்பட்டதுண்டு.

கடவுள் பறவைகளின் அரசனான பருந்தை அழைத்து ஒரு மந்திர ஊசியை கொடுத்தார்.அதைக் கொண்டு அதுவரையிலும் பறவையாய் பறந்திராத எல்லாமே தத்தம் சிறகுகளை தைத்துக்கொண்டு பறந்தன.ஒவ்வொரு பறவையும் தன சிறகுகளை அமைத்துக் கொண்டபின் அருகிலிருந்த பறவைக்கு ஊசியை கை(?) மாற்றிக் கொண்டிருந்தது.காகம் தன சிற’கை’ முடித்து கோழியிடம் கொடுத்தது பொறுப்பற்ற கோழி பகுதி வேலை முடிந்த நிலையில் மந்திர ஊசியை தொலைத்துவிட்டது.அன்றிலிருந்து கோழி கொஞ்சம் கொஞ்சம்தான் பறக்க முடிகிறது.ஊசியை தொலைத்த கோபத்தினால் பருந்து காகத்தையும் கோழியையும் சிட்சிக்கிறது.கோழி ஊசியை தேடித்தான் மண்ணை எப்போதும் கொத்திக் கிளறிக்கொண்டிருக்கிறது.எத்தனை சோகம் இந்த கோழிக்குள்? நான் கற்பனை செய்திருக்கிறேன் என்றாவது கோழி அந்த ஊசியை கண்டுபிடித்து பறக்குமென.மற்றபடி கோழிக்குஞ்சுகள் என் உள்ளங் கவர்ந்தவை.கோழி எங்கள் வீட்டில் வளர்ந்திருக்கிறது.அப்போது அடைகாக்க  கோழி முட்டைகள்  மீது அமர்ந்திருக்கும்.இத்தனை பொறுப்பான கோழி ஊசியை தொலைத்து விட்டதே என நினைத்திருக்கிறேன்.
கோழிக்கு நான் பெயர் வைத்ததில்லை.சிறு பிள்ளைகள் கேலியும் கிண்டலுமாக எல்லாவற்றிற்கும் பெயர் வைப்பார்கள்.பட்டப் பெயர் போக அழைப்பதற்காக கூட பெயர் தேவை இல்லையா?நான் என்றுமே எவருக்கும் பெயர் வைத்ததில்லை.அது போன்ற விஷயங்கள் மனதை புண்படுத்தும் என்று நினைத்திருக்கலாம்.என் இயல்பில் பெயர் வைப்பது ஒரு குதூகலமான விஷயமாக இருக்கவில்லை.அனால் இன்று வேணி எல்லாவற்றிற்கும் பெயர் வைக்கிறாள்.தெருவில் போகிற எல்லா பிராணிகளுக்கும் அவளிடம் பெயர் இருக்கிறது.கோழி, பூனை, நாய், காகம், குருவி  ஏன் பாம்பைக் கூட நாகராஜா என்றே சொல்கிறாள்.அதுவும் ஒரு இயல்பான குழைந்தையின் வெளிப்பாடுதான்.எல்லாக் குழந்தைகளையும் நான் என்னோடுதான் ஒப்பிடுகிறேன்.எனக்குள் இருக்கும் என்னுள் இருந்த குழந்தையுடன்.கோழி பற்றிய இன்னொரு சுவாரசியமும் இருக்கிறது.நானும் என் தம்பியும் வண்ண வண்ணமாக இருக்கும் கோழிக்குஞ்சுகளை பார்த்துவிட்டால்  போதும் அதை  பார்த்துக் கொண்டே பின்னே செல்வோம்.எங்களூர் சந்தைக்கு வியாழக் கிழமைகளில் அந்த மாதிரி குஞ்சுகள் வரும்.

கோழிக் குஞ்சியை பார்த்திருக்கிறீர்களா? சிறிய முகம் சற்று சிவந்த வாய் முடியெல்லாம் பஞ்சு போல மெத்து மெத்தென்றிருக்கும்.அதன் அலகை  பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதை திறந்து க்யா முயா என்று சத்தமெழுப்பும்.ஒரு சின்னக் குழந்தை போன்று கள்ளம் கபடில்லாத முகம் கோழிக்குஞ்சுக்கு.அது போல சின்ன சின்ன விலங்குகள் எல்லாமே அழகாய் இருக்கும் நாய்க் குட்டி,பூனைக் குட்டி,பண்ணிக் குட்டி,கன்றுக் (கண்ணுக்) குட்டி,யானைக் குட்டி,ஆட்டுக் குட்டி எல்லாமே அழகுதான் இளமையில்.ஒரு சொலவடை நினைவுக்கு வருகிறது “பருவத்தில பன்னிக்குட்டியும் அழகு”.முதிர்ச்சி பெரும்பாலும் அருவருக்க தக்கதாக இருக்கிறது.அது ஏமாற்றுகிறது வஞ்சத்தோடு இருக்கிறது சூழ்ச்சி செய்கிறது கொல்கிறது.ஒரு போதும் குஞ்சுகளோ குட்டிகளோ குழந்தைகளோ இதை செய்வதில்லை.மிகக் கடுமையானதாயிருக்கிறது இந்த உலகம்.சரி கோழிக் குஞ்சை பார்ப்போம்.அவை பெரும்பாலும் மஞ்சள்,பச்சை,வாடாமல்லிக் கலர் இந்த நிறங்களில்தான் இருக்கும்.மஞ்சள் நிறம்தான் மிக இயல்பாய் பொருந்துவது போலிருக்கும்.நொச்சி கம்பில் செய்த கூண்டுகளில் உள்ளே அடைத்து வைத்திருப்பார்கள்.சைக்கிளில் செல்லும்போது பார்த்துவிட்டால் பின்னாலேயே சென்று அவர்கள் குஞ்சுகளை வெளியே எடுத்து போடுவதை பார்த்துவிட்டே திரும்புவோம்.அதெல்லாம் “கரண்ட்ல” பொரிச்ச குஞ்சு வாங்காத செத்து போயிரும் என்று அம்மா  எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நானும் என் தம்பியும் அப்பாவிடம் பணம் வாங்கிச் சென்றோம்…


இரவோடு கலையும் கனவுகள்…

June 6, 2009

இரவின் மாயக் கதவுகளை
பிஞ்சு விரல்களால்
திறந்து கொள்கிறது
பெருந்திரளான கனவுகள்…

ஒவ்வொரு வாசலிலும்
கனவுத் தேவதைகள்
கடன் அரக்கர்கள்
கிழட்டு தந்திரங்கள்…

துயரத்தில் கறுத்த ஹிஜாப்பில்
படிந்திருந்தது பழைய கனவுகள்…

புதிய கனவுகள்
இதழ் குவித்து
புன்னகைச் சிகரத்தில்
அவளின் குழந்தையோடு…

கண்ணாம்பூச்சியாடும்
தூக்கத்தோடு
முதுமையின் புதைகுழிகளில்
காலவதியான கனவுகள்…

எல்லாக் கனவுகளையும்
உளவு பார்த்த காற்று,
யன்னல் கம்பிகளிடம்
இரகசியம் பேச,

மெல்லக் கலைகிறது
மற்றுமொரு இரவின் கனவு…


கம்யூனிசமும்,”குருவி” மண்டையும்!

May 14, 2009

கன்னி நிலத்தை நான் புரிந்து கொள்ளாமல் போனதற்கு கதைக் களமும் ஒரு காரணம்(மிகப் பெரும் காரணம் என்னுடைய குருவி மண்டை).சோவியத் ரஷ்யாவின் கூட்டு பண்ணைகள்,பூர்ஷ்வாக்கள்,…இப்படி  வார்த்தைகள் சேர்ந்து ஒரு விதமான கதைசொல்லல்..ம்ஹூம் என்னால் தொடர முடியவில்லை…கம்யுனிச புத்தகம் ஒன்றைக்கூட நான் இதுவரைக்கும் வாசிக்கவில்லை.ஆனால் முயற்சித்தேன்..மூலதனத்தை(தமிழில்) வாசிக்க முயற்சி செய்தேன் கன்னி நிலத்தை விட மோசமான வாசிப்பனுபவம் அது.பிறகு ஒரு வழியாக “சே” வாழ்க்கை வரலாறு கையில் கிடைத்தது.அது போன்று ஒரு புத்தகம் அதற்கு பிறகு வாய்க்கவேயில்லை.சுமார் தொள்ளாயிரம் பக்கங்களை ஒரே இரவில் வாசித்தேன்.புரட்சி மீது காதல் கொண்ட ஒருவனுக்கு துப்பாக்கி கையில் கிடைத்த உணர்வுடன் வாசித்தேன்.சேவைப் பற்றி எதையும் இங்கு பதிவு செய்யாமல் நகர்கிறேன்.காற்றுக்கு எதற்கு அறிமுகம்.அதோடு நில்லாமல் அவர் இன்று பனியன்,அண்டர்வேர்,பிரா,கைப்பட்டை,கைக்குட்டை என நீக்கமற நிறைந்திருக்கிறார்.இவ்வாறான  அவர் பெருமைகளையும் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.மற்றபடி எனது வாசிப்பு ஒரு தகவல் சேகரிக்கும் கலையாக சிலகாலம் இருந்தது.கல்கண்டு,முத்தாரம்,கோகுலம்,பூந்தளிர்,துளிர்,..போன்ற இதழ்களை விடாமல் வாசித்து வந்தேன்.பலசமயங்களில் குறிப்பு எடுத்து கொள்ளும் வழக்கம் இருந்தது.குறிப்புகளை துண்டு தாள்களில் எழுதி வந்தேன். பின் குறிப்புகளை கோர்வைபடுத்தாமல் விட்டுவிடுவதும் குறிப்புகளை தொலைத்து விடுவதுமான என் இயல்புகளால் ஒரு டைரியில் எழுத ஆரம்பித்தேன்.சற்று நாட்களில் எனக்கே ஆச்சரியமான விதத்தில் அது ஒரு தகவல் களஞ்சியமாக ஆகியிருந்தது.இருந்தும் பயனில்லை நான் எதையும் எங்குமே பயன்படுத்தியதில்லை.என்னை சுற்றியிருந்த நண்பர்களிடம் டைரி குறித்து  ஒரு பகிர்தலும் இல்லாமலேயே இருந்துவந்தது அதுதான் நான் எதிர்பார்த்தும்.ஆனால் சற்றே எதிர்பாராத சுவாரசியம் ஓன்று நிகழ்ந்தது.

என் தம்பியின் மூக்கு வியர்த்துவிட்டது.அவனுக்கு நான் செய்யும் ஏதாவது ஒன்னு ரெண்டு நல்லது கூட பிடிக்காது.அதைக் கெடுக்க மாட்டான் ஆனால்…சொல்கிறேன்..அவனும் துணுக்குகளை டைரியில் எழுத ஆரம்பித்தான்.இராப்பகலாக எழுதி எழுதிக் குவித்து விட்டான்.போதாக்குறைக்கு எழுதி நிறுத்தியிருந்த தெரிந்த நண்பர்களிடமும் சென்று அவர்களுடைய டைரிகளை வாங்கிச் சேர்த்து என்னை மிஞ்சி விட்டான்.எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது இப்படிக் குறுக்கு வழியில் என்னை முந்தி விட்டானென்று(எவ்வளவு நேர்மையான கோபம்?).ஆனால் ஒன்னும் செய்ய முடியாது.அவனிடம் என் பாச்சா பலிக்காது.அவனை பெரியவர்களால் கூட மிரட்ட முடியாது.என்னால் ஒரு கைக்குழந்தையை கூட பயமுறுத்த முடியாது அவனை என்ன செய்ய?.அதையும் மீறி  நான் அவனை அடிக்க கை ஓங்கினாலே கத்தி கதறி நம்மையே பதற வைப்பதுடன் நில்லாமல் ஊரைக் கூட்டிவிடுவான்.அவ்வளவுதான் என் அம்மா வந்தால் கதை கந்தல்.எல்லா அம்மாக்களுக்கும் மூத்த பிள்ளைதான் பிடிக்குமென்றாலும் இளைய பிள்ளைகளுக்குத்தான் செல்லம் அதிகமாயிருக்கும்.எனவே வீட்டிற்கு அண்மையான இடங்களில் அவனுடன் மிகச் சமரசமாகவே இருந்துவந்திருக்கிறேன்.அவனை அழவைப்பதில்லை.வீட்டிற்கு வெகு தூரமென்றால் அவன் அடக்கி வாசிப்பான்.மீறினால் சண்டைதான்.

அப்பொழுது எங்கள் வீட்டில் தினமலர் நாளிதழ் வந்து கொண்டிருந்தது.சிறுவர் மலரை தவிர எனக்கு வாசிக்கும்படியாக வேறொன்றுமில்லை.வெள்ளிக் கிழமைகளுக்காக காத்திருப்பேன் இல்லை காத்திருப்போம்.பேப்பர் போடும் அண்ணன் என்னிடம் கொடுக்கவே மாட்டார்.அவரும் என் தம்பியைத்தான்  தலையில் வைத்து ஆடினார்.எனக்கு எரிச்சலாக இருக்கும்.அதற்காகவே  நான் கேட்டுக்கு அருகில் இருந்த சுவரோரமாய் ஒரு பெரிய கல்லில் அமர்ந்திருப்பேன்.சில நாட்கள் என் கைக்கு கிடைக்கும்.பிறகு பலமுக மன்னன் ஜோ,சோனிப் பைய்யன்,பிராம்போ,பேய்ப்பள்ளி இந்த அளவில்தான் அன்று வாழ்க்கையின் சந்தோசமே இருந்தது.அதையெல்லாம் வாசிக்கும்போது நான் சிரித்தேனா என்று கூட இன்று நினைவில் இல்லை.ஆனால் அன்று அந்தப் படங்களை(சித்திரங்களை) பார்ப்பதில் இருந்த உற்சாகமும் ஆர்வமும் இப்பொழுது இம்மியளவும் இல்லையோ எனத் தோன்றுகிறது.ஆனால் சிறுவர் மலரை மட்டுமல்லாமல் தங்க மலரும்(தினத் தந்தி) வாசித்தேன்.அதற்காக டீக்கடைகளுக்கோ இல்லை சலூனுக்கோதான் போக வேண்டும். ராமு சோமு,ரகசிய போலீஸ் சைபர்(!),.. என சில ஞாபகத்தில் இருக்கின்றன.கன்னித்தீவு வாசிக்க சில காலம் முருக மாமா டீக்கடைக்கு செல்வேன்.ஞாயிற்று கிழமைகளில் மந்திரவாதி மாண்டிரெக் லொதர் இவர்களின் சித்திரக் கதைகளை வாசித்து வந்தேன்.ஆனால் எதிர்பாராமல் படித்த அந்த வாண்டு மாமாவின் புத்தகத்தில்…


கன்னி நிலம்…

April 9, 2009

சிறு வயதிலிருந்தே எனக்கு ஒரு வழக்கமிருக்கிறது மிக அணுக்கமான, கவனம் தேவையாகிற எந்த ஒரு செயலையும் என்னால் செய்ய முடிந்ததில்லை.உதாரணமாக புத்தகங்களை பைண்ட் செய்து ,அடுக்கி வைத்து  உபயோகிப்பதில் இருக்கும் அழகே தனி.அது ஒரு கனவைப் போலவே இன்றளவும் என்னுள் இருக்கிறது.எனது அறையில் புத்தகங்களை குவித்து வைத்திருப்பேன்; நான் படுத்திருக்கும் கோரைப்பாயை சுற்றிலும் பத்திரிக்கைகளும்,நோட்டுகளும் கூடவே நான் நேசித்த புத்தகங்களும் சிதறி கிடக்கும்.பல நேரங்களில் வாசிப்பு ஒரு கொந்தளிப்பு நிறைந்த அனுபவமாக இருந்தது.இல்லை அது போன்ற உள்ளடக்கம் நிறைந்த புத்தகங்களை விரும்பியிருக்கிறேன்.செவ்விலக்கியங்களை பெண்களாகவே  கருதினேன்,அதாவது புரிந்து கொள்ள முடியாதென்று.சட்டென ஒருநாள் மிகாயில் ஷோலகவ் எழுதிய கன்னி நிலத்தை வாசிப்பதென ஒரு அதிர்ச்சியான முடிவை நானே எடுத்தேன் அந்த புத்தகம் ருசிய புத்தகங்களை வெளியிடும் ஒரு பதிப்பகத்தால் மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டு என்னைப் வாசி வாசி  என்று  கூவி அழைக்கும் விதமாக எங்களூர் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.கையில் பிடித்து வாசிக்க முடியாத அளவில் அது மிகப் பெரிய புத்தகமாயிருந்தது.மனசுக்குள் காத்தாடி ஓடியது.மின்விசிறியல்ல ஓலைக்காத்தாடி காக்கா முள் எனச் சொல்லப்படும்   உட மரத்து முள்ளை பசுமையான அல்லது காய்ந்து போன பனை ஓலையை ரெண்டு இன்ச் அளவிற்கு ஒடித்து, அதன் நடுவில்(centroid)  துளையிட்டு ஒரு அடி கம்ம(ன்) தட்டையில் முன் பக்கம் அல்லது பக்கவாட்டில்  குத்தி,காற்றுக்கு எதிராக பிடிக்க ஓலை காத்தாடி விர்ரென்று இறைந்து கொண்டு சுற்றும்.அடடா அதை செய்து கொடுத்தவருக்கு பொன் கொடுத்தாலும் தகும்.மேகாத்து காலம்  எல்லா சிறுவர்களும் ஒரு காத்தாடி வைத்திருப்பார்கள் சிலர் மிக அழகாக அந்த ஓலையின் பக்கவாட்டில் கீறி மற்றொரு ஓலையை செருகி சிலுவை போன்ற காத்தாடிகள் வைத்திருப்பார்கள்.எல்லா சிறுவர்களுக்கும் அவ்விதமான காத்தாடி செய்து கொடுப்பவர்கள்(தேவ தூதர்கள்) இருந்தார்கள் என் அப்பா கடைக்கு சென்று விடுவார்.என் அம்மாவிடம் கேட்டால் நினைத்து கூட பார்த்ததில்லை.நான் அவளிடம் கேட்டதேயில்லை.காரணம் அவள் நான் விளையாடுவதற்காக சுற்றியலைவதை அனுமதித்ததில்லை எனவே காத்தாடியும் செய்து தர மாட்டாளென்று  நான் யூகித்திருந்தேன்.நானே அரை குறையாக பக்கத்து வீட்டு ஓலைகளை ஒடித்து காத்தாடி செய்வேன் ஓலைகள் ஒடிந்து ஒடிந்து போகும்.உண்மையில் என்னிடம் சரியாக ஒடிக்கும் உத்தி இல்லை.யாராவ்து  மூத்தவர்கள் என்னிடம் செய்து கொடுப்பதாக சொல்லும்வரை பக்கத்து வீடு கூரைக்கு ஆபத்துதான்.
ஒருவழியாக கன்னி நிலத்தை கையில் தூக்கி கொண்டு வீடு சேர்ந்தேன்.வழியெல்லாம் எல்லோரும் என்னை பார்த்திருக்க கூடும் குருவி தலையில் பனம் பழத்தை தூக்கி கொண்டு சுற்றுகிறது என நினைத்திருப்பார்கள்.ஒரு குட்டி கர்வத்தோடுதான் வீட்டிற்குள் நுழைந்தேன்.என் அம்மா படியாதவள் நான் என்ன வாசித்தாலும் பூரிப்போடு பார்ப்பாள் நான் அதை கவனிக்காதது போல வாசித்து கொண்டிருப்பேன்.இடையிடையே எதாவது தின்பண்டம் வாங்கி கொடுப்பாள்.கன்னி நிலத்தில் புரள்வதற்காக என் சிற்றப்பா வீட்டு மெத்தைக்கு(மாடிக்கு) சென்றிருந்தேன்.அங்கு என்னை சுற்றி புத்தகங்கள் சிதறி கிடந்தது. ஒரு கனவு வெளியைப் போல இன்றும் என் கண்களில் விரிகிறது அந்தக் காலம்.வாசிப்பதின் சுகத்தை பூரணமாக நான் அனுபவித்த இடம் அந்த வீடுதான்.அந்த இடமே ஒரு தேவலோகம் போலிருந்தது.மாடியில் தெற்குப்புறம் பால்க்கனி.வடக்குப்புறம் மொட்டை மாடி.அறைக்குள் காற்று வீசிக்கொண்டே இருக்கும் உபயம் அருகிலிருந்த சுடலை மாடன் கோவில் வேப்பமரம்.வடக்கில் சற்று தள்ளி என் அறைக்கு நேர் எதிரே லூர்து மாதா சர்ச்.தெற்கில் அதே போல காந்தாரி அம்மன் கோயில்.எனக்கு பரவசமாயிருந்தது காலை பொழுதுகள்தான்.சர்ச்சில் அதிகாலையில் ஒரு விவிலிய வாக்கியமும் அதை தொடர்ந்து மிக இனிமையான பாடல்களும்;அம்மன் கோவிலில் அவ்வப்போது பாடல்கள் மாறும் என்ற போதிலும் துதிப்போர்க்கு என பெரும்பாலும் கந்த சஷ்டி கவசம் ஓங்கி ஒலிக்கும் அன்று காலைகளுக்கு இருந்த போதையும் பரவசமும்  இன்று நூறில் ஒரு பங்கில்லை வாழ்க்கை மிக வறண்டு விட்டது.இருக்கட்டும்.கன்னி நிலம் இப்படி ஒரு சூழலில் வாசிக்கப்பட்டது.ஆனால் வழக்கம் போல என் மர மண்டையில் கதை ஏறவில்லை.வாசிப்பதில் கூட எனக்கு பொறுமை கிடையாது மூச்சிரைக்க ஓடுவது போலவே இருந்தது எனது வாசிப்பு.மீள் வாசிப்பென்பது  தேர்வுகளுக்காக என் பாடப் புத்தகங்களோடு நான் செய்து கொண்ட கட்டாய கல்யாணம்(வாழ்க வைரமுத்து!).மீள் வாசிப்பதென்பது புரிந்து கொள்ளுதல், என் வாசிப்பு ஒரு சுதந்திர வெளி;புரிந்து கொள்ளுதல் ஒரு நிர்பந்தமாகவே தோன்றியிருந்தது ஆகவே மனம் ஊன்றி வாசிதத போதிலும்  நான் ஒரு போதும் திரும்ப வாசிக்க எண்ணியதில்லை.விதிவிலக்குகள்  வைரமுத்துவின் சிகரங்களை நோக்கி,குறைந்தது ஒரு நூறு முறை வாசித்திருப்பேன்.அப்படியொரு சுவை, அந்த கதா நாயகன் திருஞானம் போலவே மிக பரவசமாக இயற்கையை வழிபட வேண்டுமென்ற ஒரு தீவிரம் என்னுள் வேட்கையாக எரிந்த நாட்கள் அவை.பிறகு அர்த்தமுள்ள இந்து மதம் குறிப்பாக “ஞானம் பிறந்த கதை” என்ற ஐந்தாம் பாகம் “காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே” என்று மகன் பட்டிணத்து செட்டிக்கு சொல்லி செல்கிறான்.அவனது ஆத்தாவும்,மகன் கஷாயம் தரிக்கும் பொழுதும் அவன் பிரியும் தருணத்திலும் அவன் கண்களை திறக்கிறாள்.எனக்கு விவரம் தெரியாமல் நான் வாசித்த இது போன்ற வறட்டு தத்துவங்கள் என்னை ஒரு வகையான சிமிழுக்குள் அடைத்துவிட்டது இன்றும் எண்ணெய் போல வாழ்க்கையோடு ஒட்டவிடாமல் செய்வது இந்த சின்ன வயது புரிதலில்லாத தத்துவங்கள்தான்.

- தொடரும்…


உறவுகள் ஒரு தொடர்கதை!!!

October 14, 2008

பலமுறை யோசித்திருக்கிறேன் ஏன் உறவுகள் உலகில் இத்தனை சிக்கலாகிவிடுகிறது? என்று,பல வருடங்கள் ஒன்றாக குடும்பம் நடத்தியவர்கள் கூட பைசா பெறாத காரணங்களுக்காக பிரிந்து வாழ்ந்து தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டதை பார்த்திருக்கிறேன்.இருவரும் சரமாரியாக ஒருத்தரை மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுக்களை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள்.காரணங்கள் என்னவாக இருக்கும்?என்னவாக இருக்க முடியும்? அது அவர்களுக்கே வெளிச்சம்.

அதனால் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.மனிதன் அடிப்படையிலேயே குடும்ப உணர்வுள்ளவன்.அதனால்தான் எல்லா சமயங்களும் ஒரு கட்டத்தில் குடும்ப உறவை சற்று கடுமையாக சாடியிருக்கின்றன.அரசியல் தலைவர்கள்  அதனாலேயே உறவுகளை சொல்லி தொண்டர்களை அழைக்கிறார்கள்.நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஒரு குடும்பம் என அழைப்பதும் இது போன்றதொரு காரணத்தினால்தான்.மனிதன் எதை வேண்டுமானாலும் இழந்துவிடலாம் குடும்பத்தை,உறவுகளை,நட்பை விட முடியாது.பிறந்த குழந்தைக்கு சொல்லாமலேயே தெரிகிற உறவு தாய் மட்டுமே.தாயை துன்புறுத்துகிற தந்தைகளை பார்க்கிற குழந்தைகள் எத்தனை கொடுமையானதொரு வன்முறையை எதிர்கொள்கிறார்கள்.

அடுத்தவர்களின் காலுக்கு செருப்பாக இருந்துவிட்டு மனைவியை ஏறி மிதிப்பவர்கள் யாராக இருந்தாலும் என்ன பிரயோஜனம்?.அலுவலகத்தில் எத்தனைதான் பேசினாலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு வீட்டில்  புலியாகிறவர்களை என்ன செய்வது?சர்க்கஸில் சேர்த்துவிட  வேண்டியதுதான்!.நான் இப்படித்தான் என்னால் இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேச முடியாது என சொல்பவர்கள் என்ன சாதித்து இருக்கிறார்கள்?.அண்மையில் ஒரு மெகா சீரியலில் ;) இப்படி காட்டினார்கள் அந்த காவலதிகாரி பல தருணங்களில் ஒரு “Hard Negotiator” ஆக இருந்து நடக்கவிருந்த குற்றங்களை நிறுத்தியிருக்கிறார் ஆனால் தன் மனைவியிடம் பேசக் கூட நேரமில்லாதவர் என்ற அவரின் மனைவியின் குற்றச் சாட்டினால் விவாகரத்து வரை போய்விடுகிறார்கள்.

எப்படி இவருடன் குடும்பம் நடத்துறதுன்னே தெரியலப்பா என சொல்லி அழும் சாமானியர்கள் எத்தனை பேர்?பணம் ஒரு பிரச்சனையே இல்லை ,நிம்மதியா ஒரு நாள்கூட தூங்கினதில்ல.இது போன்று நம்மை பலவாறாக எண்ண வைக்கும் நிகழ்வுகளை பார்த்தும் கேட்டுமிருக்கிறேன்.வயதானவர்களோ குழந்தைகளோ இளைஞர்களோ யாராக இருந்தாலும் எல்லோருக்கும் மனம் ஒன்றுதான் உணர்வுகள் ஒன்றுதான்.எத்தனை நடந்தாலும் அதை பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது,நீ அன்றைக்கு இதைத்தான் செய்தாய் இன்று என் முறை,உனக்கும் வலின்னா என்னன்னு தெரியணும்,மனுஷன் விடிஞ்சு போனா அடைஞ்சுவாறான் அவனிடம் ஆசையா ரெண்டு வார்த்த பேசாம நீ இப்படி ஈயத்த காய்ச்சி ஊத்துற மாதிரி பேசிறியே,நான் மட்டும் என்ன குத்துக்கல் மாதிரி சும்மாவா உக்காந்திட்டு இருக்கேன் வீடு தூக்கணும்,தெளிக்கணும்,ஓம் பிள்ளைகளுக்கு பீயள்ளிபோடனும்,கழுவி விடணும்,குளுப்பாட்டி  பள்ளிக்கூடத்துக்கு அனுப்பனும்,போகைலே கையில மத்தியான சாப்பாடு கெட்டி கொடுக்கணும்..நீங்க கட்டின துணிமணியெல்லாம்  தொவச்சு போடணும்,ராத்திரியில நாக்குக்கு ருசியா சாப்பிடறதுக்கு  காய்கனியெல்லாம்   வாங்கிட்டு வரணும்,மஞ்ச மசாலா சாமான் இப்படி நானும் நாயா ஓடியாடி வேல பாத்தாலும் ராத்திரி வந்தா ஒரே புடுங்கலு…  சோசலிசமாக  இருவரும் இப்படி திட்டிக்கொள்வதும் நடக்கும்.

நாம் இன்றும்  இது போன்ற உரையாடல்களை கிராமங்களிலும் சேரிகளிலும் கேட்கலாம்,வசதியான குடும்பங்களில் பேசுவதெல்லாம் நன்றாகவே இருக்கும்.வெளியில் காட்ட மாட்டார்கள்.கேட்க முடியாது.அவர்கள் படித்தவர்கள் பிடிக்கவில்லை என்றால் பேச்சை குறைத்து கொண்டு செயல்களில் வஞ்சனை செய்வார்கள்.சாப்பாடை எடுத்துவைத்துவிட்டு அமைதியாக போய்விடுவார்கள்.தண்ணி வைக்கமாட்டார்கள்.இல்லை உப்பு போடமாட்டார்கள்.இப்படியாக இருக்கும்.பிறகு பேசினால் ஒன்னு ரெண்டு வார்த்தைகளில் ஜென்மத்திற்கும் பேசமுடியாத மாதிரி விஷ பேச்சாக இருக்கும்.

சரி இப்ப இதெற்கெல்லாம் தீர்வுதான் என்ன?.உறவுகளை பொறுத்தவரையில் உடைத்தெறிந்து பேசுவது எளிது.ஆனால் என்ன செய்தாவது உறவுடன் பேச வேண்டும் பழக வேண்டும் நம்மை புரிய வைக்க வேண்டும்.இதுதான் விதி.கடவுளையோ,தலை எழுத்தையோ சொல்லுவது  அறிவுடமையல்ல.நான் ஆம்பள அப்படித்தான் இருப்பேன் என வீராப்பு சொல்வது நல்லதல்ல.பெண்கள் பேசுகிற அளவிற்கு எதையும் செய்ய மாட்டார்கள்.”அவள் அப்படி பேசிவிட்டாள் அதானால” என  ஆண்கள் சொல்வதோ,”இவர் செஞ்ச காரியம் என்னன்னு தெரியுமா உனக்கு” என பெண்களோ பேசுவதை நிறுத்திவிட்டு தங்களையும்,தன் துணையையும் புரிந்து கொண்டு நடந்தால் உறவுகள் ஒரு தொடர்கதை.


திருட வந்திருக்கிறேன்…

August 7, 2008

கவிஞர்களின் மது நான்,
காதலின் இரகசியம் நான்,
அழகின் துயரம் நான்,
எல்லையில்லாத
பிரபஞ்சத்தின் மர்மம் நான்,
என்னை காதலிப்பவர்கள்
பாக்கியவான்கள்
உண்மையின் ஆன்மாவை
நேசிப்பவர்கள்,
மாமுனிவர்களும்
பக்கீர்களும்
புனிதர்களும்
என் வழியில் நடந்தவர்களே..
என் கடுஞ்சினத்திலும்,
வெறுப்பிலும்
மகா யுத்தங்கள் நடந்தன..
கருப்பையில் இரத்தமாகவும்
அதரங்களில் அமுதாகவும்
உயிரூட்டும் அன்னை நான்தான்,
உன்னை உனக்கு
அறிமுகப்படுத்தும்
சிந்தனை நான்…
காது கேளாதவனின்
இசை நான்…
என்னை தேடி நீங்கள்
மலைகளில் அலைந்த போது
நான்
சேரிகளின் முற்றங்களில்
மகிழ்ந்திருந்தேன்..
மங்கள வாத்தியங்களும்,
மந்திரங்களும்
என் செவிகளை
இரணமாக்கிவிட்டன..
மனமொத்தவர்களின் சிரிப்பும்,
மழழையின் பேச்சும்தான்
என்னை மயக்குகிறது…
உங்கள் உண்மைகளை
நான் வெறுக்கிறேன்…
நீங்கள் வெறுக்கும் பொய்
நான்தான்…
உங்களால் நேசிக்க முடியாத
உண்மைகளும் நான்தான்…
என்னை பின்பற்றினால்
பெருந்துயரடைவீர்கள்..
சிலுவை சுமக்கவும்…
கல்லடி படவும்..
சுடப்படவும்
நீ விருப்பமாயிருந்தால்..
என்னை பின்பற்றாதே…
நீ
உன்னை நேசிக்க முடிந்தால்
என்னை தொடராதே…
நீ
உன்னை வெறுத்தால்
உலகத்தை நேசிப்பதாக
பாவனை செய்..
நீ
உலகத்தை வெறுத்தால்
உன்னை நேசிப்பதாக
ஏமாற்று…
என்னை
ஏன் பின்பற்றுகிறாய்?
உனது நடிப்பிற்கு
என்னிடம் வசனங்கள் இல்லை…
உன்னை நான்
வெறுமையாக்கிவிடுவேன்..
உன் மதிப்பில்லாத
ஆபரணங்களை
நான் திருட வந்திருக்கிறேன்…
எனது அன்பு
விஷம்
உன்னால் பருக முடியும்
ஆனால்
நீ
மரணத்தை வென்று விடுவாய்…
விலகியிரு,
மனிதர்களின் நாக்குதான்
உன்
காதுகளுக்கு தேன்,
நான்
ஏவாளுக்கு ஆப்பிள் கொடுத்த
சர்ப்பம்…


இரவு குழந்தை,நீ தாலாட்டு!!!

July 30, 2008

ஓயாமல் வீறிடும்
குழந்தை போல
இரவு,
தூக்கமின்றி
என் ஜன்னலின் வழியே
இருளாய் கசிந்தது…!
ஓசையின்றி
அதன் காதுகளில்
உன் பெயரை சொன்னேன்..!
விடியும் வரை
எழுந்திருக்கவில்லை இரவு..!
இரவு குழந்தை,
நீ தாலாட்டு!!!


அமைதியாக ஒரு யாசகன்…

June 14, 2008

நான்
ஒரு யாசகன்,
அன்பை மட்டுமே
யாசகமாக
பெறுகிறேன்!

இது
என் குலத்தொழில்
இல்லை;
நான்
கர்ண பரம்பரை;

என் அன்னைதான்
இப்படி ஆக்கிவிட்டாள்;
அளவில்லாமல்
அன்பைக் கொடுத்தாள்!

அவளிடம்
கேட்காமல் கிடைத்தது,
இன்று
கேட்டும் கிடைக்கவில்லை.

யாசகனுக்கு
முகம் கிடையாது;
முகமூடிதான்
அவனுக்கும் அடையாளம்;

எனக்கு
இரண்டுமே கிடையாது;

அடையாளமோ,
அரிதாரமோ
அவசியமற்றது;

எவர் கனவுகளிலும்
நான்
வருவதில்லை;
எனக்கு
கனவுகள் உண்டு;
கவிதைகள் உண்டு!

என் தோள்களில்
சிறகுகள் முளைக்கும்
வேளையில்
தாங்க முடியாத வலி;

பல காயங்களுக்கு
நான்
மருந்தாகியிருக்கிறேன்;
என் வலிகளுக்கு
நான் மாத்திரை
கேட்பதில்லை!

எனக்காக,
எனக்கு
அழத்தெரியாது;
என்
பொம்மைகளுக்காக
அழுதிருக்கிறேன்.

முளைவிடும்
விதையைப்போல,
வார்த்தைகளுக்குள்
அழுந்திக்கிடக்கிறது
என் தவம்;

எனக்கும்
வானம்தான் கூரை;
நதிதான் தண்ணீர்
தருகிறது;

என் பச்சையங்கள்
பசியாற்றுகிறது;
பறவைகள் இசையும்;
காற்று
சுவாசமும் தருகிறது.

இந்த உலகம்
இரண்டாவது தாய்;
என்னை
பெரும் யாசகனாக்கியது.

என்னிடம்
புன்னகைப்பவர்களுக்கு
நான்
பூச்செண்டு கொடுப்பேன்;

யாசகனின்
பரிசு வாடிவிடும்;
உங்கள் புன்னகையோ
என்றுமே எனக்குள்
பூத்துக்கொண்டிருக்கும்.

யாசகம் கேட்பது
தவறுதான்;
அமைதியாக இருந்திருந்தால்
நீயே
புன்னகைத்திருக்க கூடும்…


நேருக்கு நேர்!!!

June 11, 2008

காற்றை
சந்திக்க புறப்பட்டேன்,

காதல் போலத்தான்
காற்றும்,
உன்னைச் சுற்றியிருக்கும்
உனக்குள்ளும் இருக்கும்!

தேடியலைய
தேவையில்லை,
உணர்வதுதான்
உன் வேலை!

சாலையில் வந்தது
எதிர் காற்று,
பின் கீழ்க்காற்று,
வடக்கிலிருந்து வீசிய
வாடைக்காற்று,

இளமையில்
மிதி வண்டியை,
நடைவண்டியாகிய
மேல்காற்று,

மார்கழியில்
போர்வைக்குள் புகுந்த
பனிக்காற்று,

புதுமணப் பூக்களை
வாட வைக்கும்
ஆடிக்காற்று,

சித்திரையில்
கத்திரிக்கு பிறந்த
அனல் காற்று,

ஜுனில்
பள்ளிக்கு வந்த
பூவிற்கு,
செப்டம்பரில்
கடிதம் கொடுக்கும்
பருவக்காற்று,

கோபியரை
கொள்ளை கொண்டது
வேய்ங்குழலில் பூத்த
கண்ணனின்
காதல் காற்று,

அதிசயம்தான்,
பங்குச் சந்தை
தெரியாத
வியாபாரக் காற்று,

பக்கம் நின்றாலே
பதங்கமாவாய்,
அவளின் மூச்சுக் காற்று,

ஐந்து நாள்
அவசர வாழ்க்கையை,
அரைமணி நேர
நிதானத்தில்
கரைக்கும்
கடற்கரை காற்று,

நிலாமுற்றத்தில்
அன்னை மடியே
சுகம்,
வரும் தென்றல்
ஒரு உயிரின்
இரு பிரதிகளையும்
வருடிவிட்டுப்போகும்,
அது தெய்வீக காற்று,

காற்றின்
பரிமாணங்களை
புரியமுடியாது,
தென்றலாய் கொஞ்சும்,
சூறாவளியாய் சுழற்றும்,
புயலாய் சீறும்,

காதலும் அதுபோலவே,

நீ
மகிழ்வாய்,
துயில்வாய்,
துணுக்குருவாய்,
துயரடைவாய்,

காதலும்,காற்றும்
ஒருபோதும்
ஓய்வதில்லை,
ஓய்ந்தால்
அப்போது
உலகமில்லை!