Archive for April, 2009

அலை வரிசை…

ஒரே புள்ளியில்
நீ,நான்..
இடையில் அலை..

Leave a Comment

பூ…

பூஞ்செடிகளின்
வேரில்
பூக்கிறது பூமி..!!!

Leave a Comment

போடி(டா) லூசு.. உன்னைப்போல ஒரு கவிதை!!!-2.

“நான் பைத்தியந்தான்..”
என்றபடி
என் தலைமுடி
கலைத்தாய்,
கன்னத்தில்
ஓங்கி அடிப்பதாக அடித்தாய்,
தோளில்
மென்கரத்தால்
பலங்கொண்டு குத்துவதாக குத்தினாய்,
பிராண்டி
விடுவதாய் விரல்களை
கொக்கி போலாக்கி,
அழகான முகத்தை
கசக்கிய காகிதமாக்கி,
பச்சரிசி பற்களை
மோகினியாக  காட்டி,
சங்கீதக் குரலில்
அபஸ்வரம் பிடித்து,
மூச்சடக்கி
பூந்தண்டு
கழுத்தில்
பச்சை நரம்புகள்
புடைக்க
சிலைபோல காற்றில்
இமைக்க மறந்தாய்….
உன்னை பைத்தியமாக்கிய
“நானும் பைத்தியந்தான்..”
என்றபடி…உன்..

Leave a Comment

உன்னைப்போல ஒரு கவிதை…

அபத்தமாயிருக்கிறது
காதல்
அதற்கான கவிதைகள் போல..
வாழ்வைப்போல..
உன்னைப்போல..

Comments (1)

கன்னி நிலம்…

சிறு வயதிலிருந்தே எனக்கு ஒரு வழக்கமிருக்கிறது மிக அணுக்கமான, கவனம் தேவையாகிற எந்த ஒரு செயலையும் என்னால் செய்ய முடிந்ததில்லை.உதாரணமாக புத்தகங்களை பைண்ட் செய்து ,அடுக்கி வைத்து  உபயோகிப்பதில் இருக்கும் அழகே தனி.அது ஒரு கனவைப் போலவே இன்றளவும் என்னுள் இருக்கிறது.எனது அறையில் புத்தகங்களை குவித்து வைத்திருப்பேன்; நான் படுத்திருக்கும் கோரைப்பாயை சுற்றிலும் பத்திரிக்கைகளும்,நோட்டுகளும் கூடவே நான் நேசித்த புத்தகங்களும் சிதறி கிடக்கும்.பல நேரங்களில் வாசிப்பு ஒரு கொந்தளிப்பு நிறைந்த அனுபவமாக இருந்தது.இல்லை அது போன்ற உள்ளடக்கம் நிறைந்த புத்தகங்களை விரும்பியிருக்கிறேன்.செவ்விலக்கியங்களை பெண்களாகவே  கருதினேன்,அதாவது புரிந்து கொள்ள முடியாதென்று.சட்டென ஒருநாள் மிகாயில் ஷோலகவ் எழுதிய கன்னி நிலத்தை வாசிப்பதென ஒரு அதிர்ச்சியான முடிவை நானே எடுத்தேன் அந்த புத்தகம் ருசிய புத்தகங்களை வெளியிடும் ஒரு பதிப்பகத்தால் மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டு என்னைப் வாசி வாசி  என்று  கூவி அழைக்கும் விதமாக எங்களூர் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.கையில் பிடித்து வாசிக்க முடியாத அளவில் அது மிகப் பெரிய புத்தகமாயிருந்தது.மனசுக்குள் காத்தாடி ஓடியது.மின்விசிறியல்ல ஓலைக்காத்தாடி காக்கா முள் எனச் சொல்லப்படும்   உட மரத்து முள்ளை பசுமையான அல்லது காய்ந்து போன பனை ஓலையை ரெண்டு இன்ச் அளவிற்கு ஒடித்து, அதன் நடுவில்(centroid)  துளையிட்டு ஒரு அடி கம்ம(ன்) தட்டையில் முன் பக்கம் அல்லது பக்கவாட்டில்  குத்தி,காற்றுக்கு எதிராக பிடிக்க ஓலை காத்தாடி விர்ரென்று இறைந்து கொண்டு சுற்றும்.அடடா அதை செய்து கொடுத்தவருக்கு பொன் கொடுத்தாலும் தகும்.மேகாத்து காலம்  எல்லா சிறுவர்களும் ஒரு காத்தாடி வைத்திருப்பார்கள் சிலர் மிக அழகாக அந்த ஓலையின் பக்கவாட்டில் கீறி மற்றொரு ஓலையை செருகி சிலுவை போன்ற காத்தாடிகள் வைத்திருப்பார்கள்.எல்லா சிறுவர்களுக்கும் அவ்விதமான காத்தாடி செய்து கொடுப்பவர்கள்(தேவ தூதர்கள்) இருந்தார்கள் என் அப்பா கடைக்கு சென்று விடுவார்.என் அம்மாவிடம் கேட்டால் நினைத்து கூட பார்த்ததில்லை.நான் அவளிடம் கேட்டதேயில்லை.காரணம் அவள் நான் விளையாடுவதற்காக சுற்றியலைவதை அனுமதித்ததில்லை எனவே காத்தாடியும் செய்து தர மாட்டாளென்று  நான் யூகித்திருந்தேன்.நானே அரை குறையாக பக்கத்து வீட்டு ஓலைகளை ஒடித்து காத்தாடி செய்வேன் ஓலைகள் ஒடிந்து ஒடிந்து போகும்.உண்மையில் என்னிடம் சரியாக ஒடிக்கும் உத்தி இல்லை.யாராவ்து  மூத்தவர்கள் என்னிடம் செய்து கொடுப்பதாக சொல்லும்வரை பக்கத்து வீடு கூரைக்கு ஆபத்துதான்.
ஒருவழியாக கன்னி நிலத்தை கையில் தூக்கி கொண்டு வீடு சேர்ந்தேன்.வழியெல்லாம் எல்லோரும் என்னை பார்த்திருக்க கூடும் குருவி தலையில் பனம் பழத்தை தூக்கி கொண்டு சுற்றுகிறது என நினைத்திருப்பார்கள்.ஒரு குட்டி கர்வத்தோடுதான் வீட்டிற்குள் நுழைந்தேன்.என் அம்மா படியாதவள் நான் என்ன வாசித்தாலும் பூரிப்போடு பார்ப்பாள் நான் அதை கவனிக்காதது போல வாசித்து கொண்டிருப்பேன்.இடையிடையே எதாவது தின்பண்டம் வாங்கி கொடுப்பாள்.கன்னி நிலத்தில் புரள்வதற்காக என் சிற்றப்பா வீட்டு மெத்தைக்கு(மாடிக்கு) சென்றிருந்தேன்.அங்கு என்னை சுற்றி புத்தகங்கள் சிதறி கிடந்தது. ஒரு கனவு வெளியைப் போல இன்றும் என் கண்களில் விரிகிறது அந்தக் காலம்.வாசிப்பதின் சுகத்தை பூரணமாக நான் அனுபவித்த இடம் அந்த வீடுதான்.அந்த இடமே ஒரு தேவலோகம் போலிருந்தது.மாடியில் தெற்குப்புறம் பால்க்கனி.வடக்குப்புறம் மொட்டை மாடி.அறைக்குள் காற்று வீசிக்கொண்டே இருக்கும் உபயம் அருகிலிருந்த சுடலை மாடன் கோவில் வேப்பமரம்.வடக்கில் சற்று தள்ளி என் அறைக்கு நேர் எதிரே லூர்து மாதா சர்ச்.தெற்கில் அதே போல காந்தாரி அம்மன் கோயில்.எனக்கு பரவசமாயிருந்தது காலை பொழுதுகள்தான்.சர்ச்சில் அதிகாலையில் ஒரு விவிலிய வாக்கியமும் அதை தொடர்ந்து மிக இனிமையான பாடல்களும்;அம்மன் கோவிலில் அவ்வப்போது பாடல்கள் மாறும் என்ற போதிலும் துதிப்போர்க்கு என பெரும்பாலும் கந்த சஷ்டி கவசம் ஓங்கி ஒலிக்கும் அன்று காலைகளுக்கு இருந்த போதையும் பரவசமும்  இன்று நூறில் ஒரு பங்கில்லை வாழ்க்கை மிக வறண்டு விட்டது.இருக்கட்டும்.கன்னி நிலம் இப்படி ஒரு சூழலில் வாசிக்கப்பட்டது.ஆனால் வழக்கம் போல என் மர மண்டையில் கதை ஏறவில்லை.வாசிப்பதில் கூட எனக்கு பொறுமை கிடையாது மூச்சிரைக்க ஓடுவது போலவே இருந்தது எனது வாசிப்பு.மீள் வாசிப்பென்பது  தேர்வுகளுக்காக என் பாடப் புத்தகங்களோடு நான் செய்து கொண்ட கட்டாய கல்யாணம்(வாழ்க வைரமுத்து!).மீள் வாசிப்பதென்பது புரிந்து கொள்ளுதல், என் வாசிப்பு ஒரு சுதந்திர வெளி;புரிந்து கொள்ளுதல் ஒரு நிர்பந்தமாகவே தோன்றியிருந்தது ஆகவே மனம் ஊன்றி வாசிதத போதிலும்  நான் ஒரு போதும் திரும்ப வாசிக்க எண்ணியதில்லை.விதிவிலக்குகள்  வைரமுத்துவின் சிகரங்களை நோக்கி,குறைந்தது ஒரு நூறு முறை வாசித்திருப்பேன்.அப்படியொரு சுவை, அந்த கதா நாயகன் திருஞானம் போலவே மிக பரவசமாக இயற்கையை வழிபட வேண்டுமென்ற ஒரு தீவிரம் என்னுள் வேட்கையாக எரிந்த நாட்கள் அவை.பிறகு அர்த்தமுள்ள இந்து மதம் குறிப்பாக “ஞானம் பிறந்த கதை” என்ற ஐந்தாம் பாகம் “காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே” என்று மகன் பட்டிணத்து செட்டிக்கு சொல்லி செல்கிறான்.அவனது ஆத்தாவும்,மகன் கஷாயம் தரிக்கும் பொழுதும் அவன் பிரியும் தருணத்திலும் அவன் கண்களை திறக்கிறாள்.எனக்கு விவரம் தெரியாமல் நான் வாசித்த இது போன்ற வறட்டு தத்துவங்கள் என்னை ஒரு வகையான சிமிழுக்குள் அடைத்துவிட்டது இன்றும் எண்ணெய் போல வாழ்க்கையோடு ஒட்டவிடாமல் செய்வது இந்த சின்ன வயது புரிதலில்லாத தத்துவங்கள்தான்.

- தொடரும்…

Leave a Comment

காதல் யோகம்…!!!

சலித்துவிட்டோம்,
என் கவிதைகளை
நீ
வாசிப்பதில்லை,
உன்  கன்னங்களை
நான்
முத்தமிடுவதில்லை..!
கவிதைகளோ,
கன்னமோ
காதல் எப்போதும்
மதுவைபோலத்தான்…!
நாள்ப்பட
போதை ஏறுவதில்லை..
நாள்ப்பட
வலியே தெரிவதில்லை…!
எழுதவில்லை
நான் வாசிக்கிறேன்…
வாசிக்காதே
நீ முத்தங்கொடு…!!!

Leave a Comment

நிழல் பற்றியெரியும் நெருப்பு…

தீண்டாத விரல்களுக்கும்,
எதுவுமே  பேசாத
என் புகைந்து
சிவந்த இதழ்களுக்குமாய்,
நீ
மௌனப் புன்னகையோடும்,
வன்மம் தீர்க்கும்
உக்கிர பத்ரகாளியின்
மர்ம செந்நாக்கோடும்….

இருள் கரைந்து,
கொடுஞ் சாபங்கள் சூடி,
நீலி நீ
நெஞ்சில் எரிகிறாய்…
பாவ மண்டையோடுகள்
பதக்கம் போலவே
பழிகாரி
சுழற்றி சுழற்றி
நீயென்னை
ஓங்கி தரையிலெறிகிறாய்…

அகந்தை கொல்லும்
அகங்காரி நீ,
குளிர் நீரோடையில்
நிலா முகம் காணவே
நிகழ்ந்ததொரு
நீண்ட நிழல் வதம்…

நீரலைகளாய்…
நெளிந்து நெளிந்து..
உடைந்து உடைந்து..
இருளின் கரையேறும்
ஊமை நிழலின்
உயிர் கிழிந்த பிம்பங்கள்…

ஒருபோதும் இரங்காத
பயங்கரி  நீ,
ஊட்டு சோறும்,
எருமைக் கிடாவும்,
தலச்சம் பிள்ளை
மூளை மசையும்…
கேட்டு கேட்டு
நெஞ்சின் மீதேறி
ஆடுகிறாய்
ஊழித் தாண்டவம்…

என்
சிரம் கொய்து
சுடு இரத்தம்
புசிக்கும்
வெறித்த கண்களோடு
காத்திருக்கிறாய் காளி நீ…

Leave a Comment