அவள் அருகிலில்லாத இரவுகள்!!!

June 26, 2008

அவள்
அருகிலில்லாத இரவுகள்
எப்படி உறங்குவாய்?

மின்சாரம் தடைப்பட்ட
இரவுகளும்  அதுபோலவே;

உடைந்து வரும் வார்த்தைகளில்
மத்திய மாநில சர்க்கார்கள்
நொறுங்கிபோயிருக்கும்;

புரண்டு படுத்தாலும்,
முகம் புதைத்தாலும்,
போர்வை உதறினாலும்
வருவதில்லை நேற்று வந்த தூக்கம்!

தியானத்திற்கு  எழுத்து கூட்டாத நீ
கண்ணை மூடி உறக்கத்தை
உச்சரிக்க வேண்டிவரும்,
அவள் அருகிலில்லாத இரவுகளில்,
மின்சாரம் தடைப்பட்ட இரவுகளில்!

மகாநதிகளும்,காற்றும்,கடலும்
என் கருவறைகள்,
இனிவரும் நூற்றாண்டுகளில்
குளோனிங் குழந்தைகள்
கருவறை தொடாமல் கால் பதிக்கலாம்;
மின்சாரம் இல்லாமல்?

காதலின் சாட்சியாக
இருந்த குழந்தைகள்,
விஞ்ஞானத்தின் நீட்சியாகும்போது,
அவள் அருகிலில்லாத இரவுகள்?
மின்சாரம் தடைப்பட்ட இரவுகள்!


எனது மொழிபெயர்ப்புகள்

June 25, 2008

காதல் கிசுகிசு -நிலாக் கவிதைகள்-1

June 21, 2008


கண்கள் உள்ளவரை…

June 18, 2008


உளரலாய் ஒரு கவிதை!!!

June 17, 2008


மாறாத என் காதல் தேவதையே…

June 15, 2008

நீ
நிலவென்பதால்
என் காதலும்
இரவாகவே
இருந்து விடுகிறது!

நீ
கவிதையென்பதால்
என் காதலும்
தமிழோடு
தங்கி விடுகிறது!

நீ
அழகு என்பதால்
என் காதல்
கண்களாகவே
காலம் தள்ளுகிறது!

நீ
அடக்கம் என்பதால்
என் காதல்
ஒழுக்கமாக
ஒதுங்கி நிற்கிறது!

நீ
நதி என்பதால்
என் காதல்
கடலாக
காத்திருக்கிறது!

நீ
பூ என்பதால்
என் காதல்
வாசமாக
வீசுகின்றது!

கடைசியில்
நீ
என்பதால்தான்
என் காதல்
இப்படி வெட்கப்படுகிறது!

தீராத காதல்மழையின்
துவக்க வரிகளாக
இருகரைகளிலும்
கவிதை மேகங்கள்!

நீயா?நானா?
விழிக்கும்,
மனதிற்கும்
காதல் சமர்;

காதல் பெரும்புனலில்
கரைகள்
கரைவதற்குள்
மனதின் மதகுகளை
திறந்திடு சகியே!

நாகரிகம் கருதி
நானும்;
நாணம் கருதி
நீயும்
பேசாமல் பேசுகிறோம்!

உன் வழியில்
நானும்;
என் வழியென
நீயும்
காத்திருந்தோம்;

நாம்
சந்திக்கவேயில்லை;
காதல்
நம்மை சந்தித்தது!

நான்
முத்தப்போருக்கு
அழைத்த போதெல்லாம்
நீ
முகம் திருப்பிக்கொண்டாய்;

அன்று புரியவில்லை
நீ
கன்னம்தான்
காட்டுகிறாயென்று!


அமைதியாக ஒரு யாசகன்…

June 14, 2008

நான்
ஒரு யாசகன்,
அன்பை மட்டுமே
யாசகமாக
பெறுகிறேன்!

இது
என் குலத்தொழில்
இல்லை;
நான்
கர்ண பரம்பரை;

என் அன்னைதான்
இப்படி ஆக்கிவிட்டாள்;
அளவில்லாமல்
அன்பைக் கொடுத்தாள்!

அவளிடம்
கேட்காமல் கிடைத்தது,
இன்று
கேட்டும் கிடைக்கவில்லை.

யாசகனுக்கு
முகம் கிடையாது;
முகமூடிதான்
அவனுக்கும் அடையாளம்;

எனக்கு
இரண்டுமே கிடையாது;

அடையாளமோ,
அரிதாரமோ
அவசியமற்றது;

எவர் கனவுகளிலும்
நான்
வருவதில்லை;
எனக்கு
கனவுகள் உண்டு;
கவிதைகள் உண்டு!

என் தோள்களில்
சிறகுகள் முளைக்கும்
வேளையில்
தாங்க முடியாத வலி;

பல காயங்களுக்கு
நான்
மருந்தாகியிருக்கிறேன்;
என் வலிகளுக்கு
நான் மாத்திரை
கேட்பதில்லை!

எனக்காக,
எனக்கு
அழத்தெரியாது;
என்
பொம்மைகளுக்காக
அழுதிருக்கிறேன்.

முளைவிடும்
விதையைப்போல,
வார்த்தைகளுக்குள்
அழுந்திக்கிடக்கிறது
என் தவம்;

எனக்கும்
வானம்தான் கூரை;
நதிதான் தண்ணீர்
தருகிறது;

என் பச்சையங்கள்
பசியாற்றுகிறது;
பறவைகள் இசையும்;
காற்று
சுவாசமும் தருகிறது.

இந்த உலகம்
இரண்டாவது தாய்;
என்னை
பெரும் யாசகனாக்கியது.

என்னிடம்
புன்னகைப்பவர்களுக்கு
நான்
பூச்செண்டு கொடுப்பேன்;

யாசகனின்
பரிசு வாடிவிடும்;
உங்கள் புன்னகையோ
என்றுமே எனக்குள்
பூத்துக்கொண்டிருக்கும்.

யாசகம் கேட்பது
தவறுதான்;
அமைதியாக இருந்திருந்தால்
நீயே
புன்னகைத்திருக்க கூடும்…


காதல் சொல்லும் கவிதைகள்-2!!!

June 13, 2008

இந்த இரவையும்
உன் நினைவுகள்
விழுங்கி விட்டன,

புத்தகம் திறந்தபோது
என்னை வாசிக்கிறது
உனது கண்கள்,

வெளியில்
ஓடினேன்
வழியெங்கும்
உன்
கொலுசு மணிகள்,

கருவானம் காற்றில்
அசைகிறது
உன் கார் கூந்தலாய்;

சுவர்க்கோழியின்
சப்தங்கள்,
மௌனத்தின்
ஒலங்கலாய் உலுக்குகிறது ;

பெயர் தெரியாத
விண்மீன்கள்
உன்
பெயரைச் சொல்லி
கண்சிமிட்டுகின்றன;

நான்
என்ன செய்தேன்?

பேராசை,பெருங்கனவு
பெண்களுக்கு
மட்டும்தானா?

காதல் சதுரங்கத்திலும்
ராஜாக்கள்
ஒரு கட்டந்தான்
நகர முடியுமா?

அந்தப்புரத்தின்
அமைதி குழைக்க
காதல் போருக்கு
வேல்விழியோடு
காத்திருக்கிறாய்;

நீ
என்ன சந்திரகாந்தமா?
நெருங்கினால்
எரிக்கிறாய்
விலகினால்
உறையவைக்கிறாய்!

என்
மனதிற்கு கதவு
கிடையாது;

நீ
பூட்டு
கொடுத்தால்
நான் கதவுக்கு
எங்கு போவேன்?

பகைவனுக்கருள்வாய்
என்றான் பாரதி,
நீ
நேசிப்பவனையே
இவ்வளவு
இம்சைகள் செய்கிறாய்,
உனது
பகைவன் பாவம்!


நேருக்கு நேர்!!!

June 11, 2008

காற்றை
சந்திக்க புறப்பட்டேன்,

காதல் போலத்தான்
காற்றும்,
உன்னைச் சுற்றியிருக்கும்
உனக்குள்ளும் இருக்கும்!

தேடியலைய
தேவையில்லை,
உணர்வதுதான்
உன் வேலை!

சாலையில் வந்தது
எதிர் காற்று,
பின் கீழ்க்காற்று,
வடக்கிலிருந்து வீசிய
வாடைக்காற்று,

இளமையில்
மிதி வண்டியை,
நடைவண்டியாகிய
மேல்காற்று,

மார்கழியில்
போர்வைக்குள் புகுந்த
பனிக்காற்று,

புதுமணப் பூக்களை
வாட வைக்கும்
ஆடிக்காற்று,

சித்திரையில்
கத்திரிக்கு பிறந்த
அனல் காற்று,

ஜுனில்
பள்ளிக்கு வந்த
பூவிற்கு,
செப்டம்பரில்
கடிதம் கொடுக்கும்
பருவக்காற்று,

கோபியரை
கொள்ளை கொண்டது
வேய்ங்குழலில் பூத்த
கண்ணனின்
காதல் காற்று,

அதிசயம்தான்,
பங்குச் சந்தை
தெரியாத
வியாபாரக் காற்று,

பக்கம் நின்றாலே
பதங்கமாவாய்,
அவளின் மூச்சுக் காற்று,

ஐந்து நாள்
அவசர வாழ்க்கையை,
அரைமணி நேர
நிதானத்தில்
கரைக்கும்
கடற்கரை காற்று,

நிலாமுற்றத்தில்
அன்னை மடியே
சுகம்,
வரும் தென்றல்
ஒரு உயிரின்
இரு பிரதிகளையும்
வருடிவிட்டுப்போகும்,
அது தெய்வீக காற்று,

காற்றின்
பரிமாணங்களை
புரியமுடியாது,
தென்றலாய் கொஞ்சும்,
சூறாவளியாய் சுழற்றும்,
புயலாய் சீறும்,

காதலும் அதுபோலவே,

நீ
மகிழ்வாய்,
துயில்வாய்,
துணுக்குருவாய்,
துயரடைவாய்,

காதலும்,காற்றும்
ஒருபோதும்
ஓய்வதில்லை,
ஓய்ந்தால்
அப்போது
உலகமில்லை!


மழையில் தொலைத்த குடை…

June 10, 2008

பெருமழைக்கென நானும்
குடை வாங்கப் போனேன்,
வானவில்லை
ஒடுக்கி,அடுக்கியதாய்
அழகான குடைகள்!

சிறிதும்,பெரிதுமாய்
எல்லா வயதினருக்கும்
வடிவமேற்று விரிந்தது!

மூன்று மடிப்புள்ள குடை,
பொத்தான் வைத்த குடை,
வளைந்த கைப்பிடி குடை,
மான் மார்க் குடை,
என குடைகளில்தான்
எத்தனை வகை…

வளைந்த கைப்பிடி குடை
வசதியானது,
மழைக்கு விரிக்கலாம்;
இல்லையென்றால்
ஜன்னல் கம்பி,
பேருந்தின்
முன்னிருக்கை கைப்பிடி,..
இப்படி தொங்கவிடலாம்.

உலகமே
ஒருமையில் சுற்றுவதால்,
பெரிய குடைகளின்
விற்பனை சுருங்கிவிட்டது!

நானும்
அடக்கமான,
அடையாளம்
காண எளிதாய்
ஒரு குடையை வாங்கினேன்!

இரண்டு நாளாய்
சாரலுக்கு கூட
குடை பிடித்து,
சாலையெல்லாம்
சும்மா சுற்றிவந்தேன்!

மழையில்லாத முன்னிரவில்
உன்
ஞாபக மழையில்
நனைந்தபடி
தொலைத்துவிட்டேன் குடையை!

நல்லவேளை,
நான் பத்திரமாக
வீடு சேர்ந்தேன்!