எங்கே பிரபஞ்சம்?
என் இரவுகள்
உனக்கான கவிதைகளில்
நீண்டு பெருமூச்சிடுகிறது!
சொல்ல முடியாத
ஊமை வார்த்தைகள்
உயிர் குடித்து
உள்ளமெங்கும்
கிளை பரப்புகிறது!
ஊழிப் பயணத்தின்
உறு துணையாய்
உன் கரம் பிடித்து
கரையேற துடிக்கும்
பாவக்கனவுகள்!
இருளின் பார்வை
தேகத்தில் படர
திறந்திருந்த மனக்கதவை
தேடியலைகிறது
அடிமைப்பட்ட உணர்ச்சிகள்!
யுகங்களின் வழியே
வழிந்தோடுகிறது
உண்மையின் சிற்றோடை
எங்கே பிரபஞ்சம்?
எங்கே நீ?
எங்கே நான்?