சிறிது காலத்திலெல்லாம் என் அப்பா என்னிடம் சொன்ன உண்மைதான் என் பயம் என்னை விட்டு விலக காரணமாயிருந்தது.இத்தனை வருடங்களாகியும் அவர் இதுவரைக்கும் பேய்களையோ,கடவுளையோ நேரில் கண்டதில்லை என்ற ஊரறிந்த உண்மைதான் அது.ஒரு சிலரே சாட்சியங்களோடு திரிகின்றனர். பெரும்பாலானவர்கள் பேய்களை பற்றி
கோவில்களிலும், கடவுளை பற்றி சுடுகாடுகளிலும் நினைக்கின்றனர்.ஆண்கள் பெண்களை
பற்றியும் பெண்கள் ஆண்களை பற்றியும் நினைப்பது போல பேய்களும், கடவுளரும் தங்களுக்குள்ளே நினைத்துகொள்வார்களா?.என் அப்பா அவருடைய சின்ன வயதில்
எம்.ஜி.ஆரின் படங்களில் பைத்தியமாக இருந்திருக்கிறார்.எனவே பல மைல்கள் நடந்து இரவு காட்சி பார்த்துவிட்டு சௌகரியமாக சுடுகாட்டில் கூட படுத்து தூங்கிருப்பதாக சொன்னார்.எனக்கு அப்போது தோன்றியதெல்லாம் எம்.ஜி.ஆர் படம் பார்த்தால் தைரியம்
நிறைய வரும் என்ற ஆக்கபூர்வமான சிந்தனை மட்டுமே.இப்படி பேய்களை பற்றிய பயம்
எனக்கு குறைந்தும் கூடியும் கூடவே வந்து கொண்டிருந்தது.அப்படிப்பட்ட ஒரு நாளில்தான் என் கையில் சிக்கியது அந்த புத்தகம்.எங்கள் வீட்டு பரணில் கிடந்ததை தூசி தட்டி எடுத்துவிட்டேன்.புத்தகத்தின் தலைப்பு “மரணத்தின் பின் மனிதர் நிலை” என ஞாபகம் மறைமலைஅடிகள் எழுதியதென நினைக்கிறேன்.பேய்களை பற்றிய எனது முதல் புத்தகம் சிறு வயதில் எனக்கு பரிச்சயமாயிருந்ததெல்லாம் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதமும்,ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயமும்தான்.எனவே மறைமலையடிகளின் தூய தமிழ் நடை என்னை சற்று வியர்க்க வைத்துவிட்டது.இருந்தாலும் திகிலோடு படித்துகொண்டிருந்தேன்.நான் எந்த தத்துவ விசாரணையிலும் இறங்கவில்லை எனக்கு தேவையெல்லாம் ஞாபகம் வைத்துகொள்ளும்படியான பேய்க்கதைகள்.அவர் ஷேக்ஸ்பியரின் ஹம்லேட் நாடகம் குறித்து எழுதியிருந்தது மட்டும் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.அதுதவிர நம்மவூர் கதைகள் சிலவும் இடம் பெற்றிருந்தது.ஆவேசம் கொண்டு அலையும் ஆன்மாக்கள் பழி தீர்த்துகொள்ளாமல் சாந்தியடையாது என தெரிந்தவுடன் சற்று கிலி பிடித்தது.
பின்பொருமுறை சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறை படித்தேன்.விவேகானந்தர் சிறு வயதில் பேயிருக்கிறது என சொல்லப்பட்ட மரத்தில் தலைகீழாக தொங்குவாராம்.எனக்கு ஒரே சந்தோசம் சிறுவர்களை பேய் ஒன்றும் செய்யாது என்று நினைத்து.நான் கூட கேள்வி பட்டிருக்கிறேன் புளியமரங்களில் பேயும் வேப்ப மரங்களில் அம்பிகையும் குடியிருப்பதாக. அதனால்தான் அதிக அளவில் புளியமரங்களை வீடுகளில் வளர்ப்பதில்லை.அது மட்டுமல்ல புளிய மரத்தின் அளவை வைத்தே அதில் எத்தனை பெரிய பேயிருக்கலாம் என்பதை சொல்லிவிட முடியும். ஆனால் நான் பெரும்பாலும் மாலை வேலைகளில் டிவி பார்க்க தெருத்தெருவாக சுற்றுவேன்.அப்பொழுதெல்லாம் அஞ்சு(ஐந்து) வீட்டு வளவு தாண்டி ஓடித்தான் போவேன் ,அங்கே பெரிய புளிய மரம் ஒன்றிருந்தது.அதன் காய்கள் மிகமிக சுவையாக இருக்கும்.அதுதவிர ரெட்டை குளத்துகருகில் இருந்த சொக்குபிள்ளை கிணற்றுக்கு நானும் என் தம்பியும் சில நண்பர்களும் செல்வதுண்டு.சாலை நெடுக புளிய மரங்கள்தான் இருந்தது. ஆனால் என்னை வியர்க்க வைத்தது கிணற்றுக்கு திரும்பும் முனையிலிருந்த அந்த புளிய மரம்தான்…
Archive for March, 2008
நான் விரும்பும் பேய்கள்-5!
காரணம்!
எந்தக் காரணம்
சொல்லுவேன்
உன்னை பிடிக்குமென
சொல்வதற்கு?,
உன்னை தவிர!
நான் விரும்பும் பேய்கள்!-4
பேய்களைப் பற்றி பேச ஆரம்பித்தால் எல்லோரிடமும் எதோ ஒரு கதையோ,விஷயமோ அல்லது அனுபவமோ இருக்கும்.வயது வித்தியாசமின்றி பேய்களைப் பற்றி எல்லோரும் பேசக் கேட்டிருக்கிறேன்.எனது அம்மா பேய்களைப் பற்றி நிறைய கதை சொல்லுவாள்.அதுக்கு காரணமிருந்தது,நான் சிறு வயதில் வீட்டிலிருக்கும் நேரம் மிகக் குறைவு.சொல்லப் போனால் இரவு தூங்கவும், மற்ற வேலைகளில் சாப்பிடவும் மட்டுமே வீட்டுக்கு செல்வேன். ஆகவே எனக்கு பேய்களைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் நிறையவே இருந்தது.
என் தாத்தா,பாட்டி காலத்து பேய்களிலிருந்து அவள் பார்த்த, கேட்ட பேய்கள் வரை எனக்கு விவரமாக எடுத்து சொல்லுவாள்.என் அம்மா மிக நன்றாக பேசுவாள்.அவள் பேசுவதைக் கேட்க நிறைய பேர் வருவார்கள்.எந்த ஒரு விஷயத்தையும் சுவாரசியமாக்கிடும் திறமை அவளிடம் அதிகம் அப்படிபட்டவளுக்கு பேய்கள் என்றால் கேட்கவா வேண்டும். என் தங்கை, தம்பி என எல்லோரும் சுற்றி உட்கார்ந்து கொள்ள அவள் கதை சொல்லிடுவாள்.நான் பேய்களை விட பேய்கள் இருக்கும் இடங்களை கேட்டு தெரிந்து கொள்வதில் ஆர்வமாய் இருப்பேன்.மேலும் பேய்களுக்கு பிடித்த விஷயங்கள் என்ன? கோபமூட்டும் விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளவும் ஆசைபட்டிருக்கிறேன்.தெரிந்தோ தெரியாமலோ எந்த பேயையும் கோபப்படுத்தி விடக்ககூடாது என்ற பயம்தான்.பேய்கள் உலாவும் இடமென தெரிந்தால் தனியாக அங்கு செல்வதை தவிர்த்துவிடுவேன்.
அதையும் தாண்டி போக நேரிட்டால் எனக்கு தெரிந்த சப்பாணி மந்திரங்களை சொல்லுவேன், இல்லை ஒரு இரும்பு துண்டை என் டவுசருக்குள் (அரைக் கால் சட்டை என்ற தமிழ் வார்த்தை தெரிந்த பொழுது நான் அதை அணியும் பருவத்தை கடந்து விட்டேன்) போட்டுக் கொள்வேன்.இல்லை என்றால் என் கழுத்தில் “யாமிருக்க பயமேன்”
என முருகனின் டாலர் தைரியம் கொடுக்கும்.என் தாத்தா ஒரு சாமியாடி அவர் சொன்னால் பேய்கள் கேட்கும் என அம்மா சொல்லுவாள்.
எங்கள் வீட்டுக்கு எதிரில் இருந்த ஒரு சிறிய முட்காட்டை ஒட்டி ஒரு சிறிய சுடலைமாடசுவாமி கோவில் இருந்தது.என் சிறு வயதில் நான் அங்கு விளையாடுவது
வழக்கம். சுடலைமாடசுவாமி, பேச்சியம்மன்,இசக்கியம்மன்,முனியசுவாமி என சில சாமிகள் அங்கே இருந்தனர்.அந்த சாமிகள் எல்லாம் சற்று துடியான தெய்வங்கள் (கோபக்கார சாமிகள்) என்ற செய்தி என் காதில் விழுந்தது.குறிப்பாக வீட்டில் தலைப் பிள்ளைகளை அந்த சாமிகள் காவு(பலி) கேட்கும் எனவும் சொன்னார்கள்.என்ன செய்வது நான் மூத்த பிள்ளையாயிற்றே என வருந்தினேன்.சற்று குறைந்து விட்டது எனது ஆட்டம்.ஆனால் அது நீடிக்கவில்லை..
![]()
பேய்கள் உலாவும்…
உன்னருகே ஒரு இடம்!
உன்முகம் பாராத
ஒவ்வொரு
நாளும்,
நெஞ்சு
வெடித்து விடுமோயென
அஞ்சி அலைகிறேன்!
எங்கெங்கோ
திரிகிறேன்,
எதையெதையோ
பேசுகிறேன்,
தெரியாதவர்களிடம்
சிரிக்கிறேன்..
எனக்கும் தெரியும்,
என்னதான் செய்தாலும்..
ஒன்றுமில்லை உலகில்
உன்னருகிருப்பது போல!





