யாருக்காகவோ எழுதும்
ஒரு கவிதை,
மௌனமாக பார்க்கப்படுகிறது..
சில தடவைகள்
நாட்குறிப்புகளுக்குள்
உப்புக்கரிக்கும் விரல்களால்
ஒளித்து வைக்கப் படுகிறது…
யாரும் வாசித்து
விடாமலிருக்க நாட்குறிப்பும்
கைக்கெட்டாத
ஆழங்களில் அடைக்கலமாகிறது…
நாட்களாக பார்க்கப்பட்ட
நாட்குறிப்பு
மாதங்களாய்,வருடங்களாய்
கண்ணுக்குள் ஒளியாகி,
மொழிகளின் மொழியாகி,
வன்மத்தின்
உதிரம் குடித்து,
சிவ தனுசாகிறது…
வேண்டாம் இராமனென்று
ஒரு கனத்த இரவில்
சீதையே
ஒடித்து விட்டாள்…
தீ பிழைத்தது..
சிவ தனுசு!
நீ வாசித்த புல்லாங்குழல்…
காற்றுக்கென்ன
திட சித்தம்?
ஒரு துளை
நுழைந்து
மறு துளை
தலை காட்டும்..
பூங்கரத்தால்
தட்டி தடுத்து
இன்னிசையாய்
வளரவிட்டாய்…
குளிர்ந்து கனிந்து
உறைந்து நானானது
உன் சுவாசம்…
மழையிரவில் உலகம்..
உடல் மழையான
இரவில்,
உயிர் மேகமான
இரவில்,
நீநான்நீநான்
நான்நீநான்நீ…
இருள் வெள்ளத்தில்
உலகமே
ஒரு
முத்தம் போலானது..
வலைக்குள் மழை!
நீயும் நானும்
வலை!
காலம் மழை!
காதல்
வலையில் சிக்கிய – ‘மழை’!
இரவோடு கலையும் கனவுகள்…
இரவின் மாயக் கதவுகளை
பிஞ்சு விரல்களால்
திறந்து கொள்கிறது
பெருந்திரளான கனவுகள்…
ஒவ்வொரு வாசலிலும்
கனவுத் தேவதைகள்
கடன் அரக்கர்கள்
கிழட்டு தந்திரங்கள்…
துயரத்தில் கறுத்த ஹிஜாப்பில்
படிந்திருந்தது பழைய கனவுகள்…
புதிய கனவுகள்
இதழ் குவித்து
புன்னகைச் சிகரத்தில்
அவளின் குழந்தையோடு…
கண்ணாம்பூச்சியாடும்
தூக்கத்தோடு
முதுமையின் புதைகுழிகளில்
காலவதியான கனவுகள்…
எல்லாக் கனவுகளையும்
உளவு பார்த்த காற்று,
யன்னல் கம்பிகளிடம்
இரகசியம் பேச,
மெல்லக் கலைகிறது
மற்றுமொரு இரவின் கனவு…
காதல் மொழி!
எதையோ காற்றோடு
சொல்ல விழைந்து ,
எரிந்து அடங்குகிறது
நெருப்பின் நாக்கு…
கம்யூனிசமும்,”குருவி” மண்டையும்!
கன்னி நிலத்தை நான் புரிந்து கொள்ளாமல் போனதற்கு கதைக் களமும் ஒரு காரணம்(மிகப் பெரும் காரணம் என்னுடைய குருவி மண்டை).சோவியத் ரஷ்யாவின் கூட்டு பண்ணைகள்,பூர்ஷ்வாக்கள்,…இப்படி வார்த்தைகள் சேர்ந்து ஒரு விதமான கதைசொல்லல்..ம்ஹூம் என்னால் தொடர முடியவில்லை…கம்யுனிச புத்தகம் ஒன்றைக்கூட நான் இதுவரைக்கும் வாசிக்கவில்லை.ஆனால் முயற்சித்தேன்..மூலதனத்தை(தமிழில்) வாசிக்க முயற்சி செய்தேன் கன்னி நிலத்தை விட மோசமான வாசிப்பனுபவம் அது.பிறகு ஒரு வழியாக “சே” வாழ்க்கை வரலாறு கையில் கிடைத்தது.அது போன்று ஒரு புத்தகம் அதற்கு பிறகு வாய்க்கவேயில்லை.சுமார் தொள்ளாயிரம் பக்கங்களை ஒரே இரவில் வாசித்தேன்.புரட்சி மீது காதல் கொண்ட ஒருவனுக்கு துப்பாக்கி கையில் கிடைத்த உணர்வுடன் வாசித்தேன்.சேவைப் பற்றி எதையும் இங்கு பதிவு செய்யாமல் நகர்கிறேன்.காற்றுக்கு எதற்கு அறிமுகம்.அதோடு நில்லாமல் அவர் இன்று பனியன்,அண்டர்வேர்,பிரா,கைப்பட்டை,கைக்குட்டை என நீக்கமற நிறைந்திருக்கிறார்.இவ்வாறான அவர் பெருமைகளையும் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.மற்றபடி எனது வாசிப்பு ஒரு தகவல் சேகரிக்கும் கலையாக சிலகாலம் இருந்தது.கல்கண்டு,முத்தாரம்,கோகுலம்,பூந்தளிர்,துளிர்,..போன்ற இதழ்களை விடாமல் வாசித்து வந்தேன்.பலசமயங்களில் குறிப்பு எடுத்து கொள்ளும் வழக்கம் இருந்தது.குறிப்புகளை துண்டு தாள்களில் எழுதி வந்தேன். பின் குறிப்புகளை கோர்வைபடுத்தாமல் விட்டுவிடுவதும் குறிப்புகளை தொலைத்து விடுவதுமான என் இயல்புகளால் ஒரு டைரியில் எழுத ஆரம்பித்தேன்.சற்று நாட்களில் எனக்கே ஆச்சரியமான விதத்தில் அது ஒரு தகவல் களஞ்சியமாக ஆகியிருந்தது.இருந்தும் பயனில்லை நான் எதையும் எங்குமே பயன்படுத்தியதில்லை.என்னை சுற்றியிருந்த நண்பர்களிடம் டைரி குறித்து ஒரு பகிர்தலும் இல்லாமலேயே இருந்துவந்தது அதுதான் நான் எதிர்பார்த்தும்.ஆனால் சற்றே எதிர்பாராத சுவாரசியம் ஓன்று நிகழ்ந்தது.
என் தம்பியின் மூக்கு வியர்த்துவிட்டது.அவனுக்கு நான் செய்யும் ஏதாவது ஒன்னு ரெண்டு நல்லது கூட பிடிக்காது.அதைக் கெடுக்க மாட்டான் ஆனால்…சொல்கிறேன்..அவனும் துணுக்குகளை டைரியில் எழுத ஆரம்பித்தான்.இராப்பகலாக எழுதி எழுதிக் குவித்து விட்டான்.போதாக்குறைக்கு எழுதி நிறுத்தியிருந்த தெரிந்த நண்பர்களிடமும் சென்று அவர்களுடைய டைரிகளை வாங்கிச் சேர்த்து என்னை மிஞ்சி விட்டான்.எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது இப்படிக் குறுக்கு வழியில் என்னை முந்தி விட்டானென்று(எவ்வளவு நேர்மையான கோபம்?).ஆனால் ஒன்னும் செய்ய முடியாது.அவனிடம் என் பாச்சா பலிக்காது.அவனை பெரியவர்களால் கூட மிரட்ட முடியாது.என்னால் ஒரு கைக்குழந்தையை கூட பயமுறுத்த முடியாது அவனை என்ன செய்ய?.அதையும் மீறி நான் அவனை அடிக்க கை ஓங்கினாலே கத்தி கதறி நம்மையே பதற வைப்பதுடன் நில்லாமல் ஊரைக் கூட்டிவிடுவான்.அவ்வளவுதான் என் அம்மா வந்தால் கதை கந்தல்.எல்லா அம்மாக்களுக்கும் மூத்த பிள்ளைதான் பிடிக்குமென்றாலும் இளைய பிள்ளைகளுக்குத்தான் செல்லம் அதிகமாயிருக்கும்.எனவே வீட்டிற்கு அண்மையான இடங்களில் அவனுடன் மிகச் சமரசமாகவே இருந்துவந்திருக்கிறேன்.அவனை அழவைப்பதில்லை.வீட்டிற்கு வெகு தூரமென்றால் அவன் அடக்கி வாசிப்பான்.மீறினால் சண்டைதான்.
அப்பொழுது எங்கள் வீட்டில் தினமலர் நாளிதழ் வந்து கொண்டிருந்தது.சிறுவர் மலரை தவிர எனக்கு வாசிக்கும்படியாக வேறொன்றுமில்லை.வெள்ளிக் கிழமைகளுக்காக காத்திருப்பேன் இல்லை காத்திருப்போம்.பேப்பர் போடும் அண்ணன் என்னிடம் கொடுக்கவே மாட்டார்.அவரும் என் தம்பியைத்தான் தலையில் வைத்து ஆடினார்.எனக்கு எரிச்சலாக இருக்கும்.அதற்காகவே நான் கேட்டுக்கு அருகில் இருந்த சுவரோரமாய் ஒரு பெரிய கல்லில் அமர்ந்திருப்பேன்.சில நாட்கள் என் கைக்கு கிடைக்கும்.பிறகு பலமுக மன்னன் ஜோ,சோனிப் பைய்யன்,பிராம்போ,பேய்ப்பள்ளி இந்த அளவில்தான் அன்று வாழ்க்கையின் சந்தோசமே இருந்தது.அதையெல்லாம் வாசிக்கும்போது நான் சிரித்தேனா என்று கூட இன்று நினைவில் இல்லை.ஆனால் அன்று அந்தப் படங்களை(சித்திரங்களை) பார்ப்பதில் இருந்த உற்சாகமும் ஆர்வமும் இப்பொழுது இம்மியளவும் இல்லையோ எனத் தோன்றுகிறது.ஆனால் சிறுவர் மலரை மட்டுமல்லாமல் தங்க மலரும்(தினத் தந்தி) வாசித்தேன்.அதற்காக டீக்கடைகளுக்கோ இல்லை சலூனுக்கோதான் போக வேண்டும். ராமு சோமு,ரகசிய போலீஸ் சைபர்(!),.. என சில ஞாபகத்தில் இருக்கின்றன.கன்னித்தீவு வாசிக்க சில காலம் முருக மாமா டீக்கடைக்கு செல்வேன்.ஞாயிற்று கிழமைகளில் மந்திரவாதி மாண்டிரெக் லொதர் இவர்களின் சித்திரக் கதைகளை வாசித்து வந்தேன்.ஆனால் எதிர்பாராமல் படித்த அந்த வாண்டு மாமாவின் புத்தகத்தில்…
டைகர்,டாமி,டெவில்..ஜூலி..
எழுதும்போதெல்லாம்
என் எல்லா வார்த்தைகளுமே
கட்டவிழ்த்த நாய்க்குட்டிகளாய்
உன்னை தேடியே ஓடுகின்றன…
டீல்…
காற்றில்
அசைந்து அசைந்து
அங்குலம் அங்குலமாக
விலகியபடியே…
அசைவுகளையும்,
விலகல்களையும்,
நகர்வுகளையும்
மேயும் கழுகுக் கண்கள்..
கண நேரத்தில்
நூலறுத்து
பறக்கும் கடைசிப் பட்டம்…